Quantcast
Channel: காந்தி - இன்று
Viewing all 219 articles
Browse latest View live

கம்யூனிசமும் முதலியமும் பொய்த்து விட்டன- அறங்காவலர் முறை உதவுமா? - ரஜினி பக்ஷி

$
0
0

"என் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் பன்னிரெண்டு மணி நேர ஷிப்ட்கள் வேலை செய்வது என்னை உறுத்துகிறது. அவர்கள் பணி நேரத்தை எட்டு மணி நேரமாய்க் குறைத்து ஊதியத்தைக் குறைக்காவிட்டால், என் பங்கீட்டாளர்கள் என் மீது கோபப்படுவார்கள். வேலை நேரத்தையும் ஊதியத்தையும் குறைத்தால் அவர்கள் இன்னொரு வேலையில் சேர்ந்து பதினாறு மணி நேரம் உழைக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது?" - இந்திய பெருநிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் தனி உரையாடலில் சொன்னது.

சுயதொழில் செய்பவர் ஒருவர் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட தன் மனசாட்சியின் குரலை வெளிப்படுத்துவது போல் இது இருக்கலாம். முதலியத்தின் பல்வேறு வகைமைகள் ஆக்ரோஷமாய் இயங்கினாலும் புறக்கணிக்க முடியாத பெருவாரி மக்களின் உணர்வை இது சுட்டுகிறது. இதனால்தான் எம்.கே. காந்தி எதிர்காலத்தின் போக்கு அறங்காவலர் முறையை நோக்கி இருக்கும் என்றநம்பிக்கை கொண்டிருந்தாரா?

அறங்காவலர் முறை தனிமனித மனசாட்சியை மட்டும் நோக்கி உரையாடுவதா, அல்லது சுரண்டலுக்கு முடிவு காணும் நடைமுறைச் சட்டகமாய் இருக்குமா? அதைவிட முக்கியமாக, புவியெங்கும் பாதிப்பை உருவாக்கும் சூழியல் பிரச்சினைக்கு அறங்காவலர் முறை விடை கொண்டுள்ளதா, அதற்குரிய வேகத்துடனும் அளவுடனும் அதை எதிர்கொள்ள உதவுமா?

தனி மனித மனசாட்சிக்கும் கூட்டுச் செயல்பாட்டுக்கும் இடையுள்ள உறவாடல் இந்தக் கேள்வியின் மையத்தில் உள்ளது.

கம்யூனிசமும் முதலியமும் தோல்வியடைவது தவிர்க்க முடியாதது என்ற முன்னோக்கு அடிப்படையில் காந்தி அறங்காவலர் முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார். இரண்டுமே வழிமுறைகளை விட  இறுதி முடிவுக்கே கூடுதல் முக்கியத்துவம் அளித்தன. 18ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய கலாசாரம் அரசியல் பொருளாதாரத்திலிருந்து அறச் சிந்தனையைத் துண்டிக்க தலைப்பட்டதன் விளைவாகவே இந்த இரு அமைப்புகளும் உருவாகின.

இந்தப் புதிரை துல்லியமாய் விவரித்தவர் காந்தியல்ல, ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸ். 1930ஆம் ஆண்டு அவர் ஒரு கட்டுரையில் எழுதிய இந்த வாக்கியங்கள் புகழ்பெற்றவை: "இன்னுமொரு நூறாண்டுக்காவது நாம் நம்முள்ளும் பிறரிடமும் அழகை அவலம் என்றும் அவலத்தை அழகென்றும் நம்புவதுபோல் நடிக்க வேண்டும். ஏனென்னில், அவலம் பயனுள்ளது, அழகு அப்படியில்லை. இன்னும் சிறிது காலத்துக்காவது பேராசையும் அநியாய வட்டியும் எச்சரிக்கையுணர்வும் நம் தெய்வங்களாக இருக்க வேண்டும்."

இதை எதிர்த்தே காந்தி கலகம் செய்தார். உற்பத்தி முறைகள் யாருக்குச் சொந்தம் என்பதிலும்  செல்வம் எப்படி பகிரப்பட வேண்டும் என்பதிலும் சோஷலிஷ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் முழுக்கவனம் செலுத்தி வந்த நேரத்தில் காந்தி அனைவருக்கும் சம நீதி வழங்கி தனி மனிதன் செழிக்கவும் சமூகத்தில் படைப்பூக்கம் வளரவும் வழி காணப்பட வேண்டும் என்பதே சிந்தையாக இருந்தார். இந்த தர்க்கத்தின் அடிப்படையில்தான் அவர் அறங்காவலர் முறையை வலியுறுத்தினார்:

ஒன்று, வணிகம் மனித நாகரீகத்தின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத அங்கம்.

இரண்டு, சுயதொழில் திறனும் துணிச்சலாய் முடிவெக்கும் மனப்பான்மையும் அபூர்வமான, முக்கியமான திறமைகள்.

மூன்று, முக்கியமான திறமை அமைந்திருப்பதால், சுயதொழில் முனைவர்கள் கூடுதல் சமூக பொறுப்பு உள்ளவர்கள். சுயதொழில் முனைப்பின் சக்தி, அதனால் உருவாகும் செல்வம், இவற்றை நம்பிக்கை அடிப்படையில் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்- அவை அனைவரின் மேன்மை, சர்வோதயத்துக்கானவை.

இவையனைத்தும் எப்போது சாத்தியம்? அடிப்படையில் அறச் சார்பு கொண்டவர்களாகவும், உயர்ந்த பிரக்ஞைத் தளத்தை நோக்கி உயரும் தாகத்தால் உந்தப்பட்டவர்களாகவும்  காந்தியைப் போல் நாமும்  மனிதர்களைக் காண வேண்டும். நவீன மனதை ஆட்டிப்படைக்கும் ஹாப்ஸிய பார்வைக்கு எதிராய் காந்தி கலகம் செய்தார்- மானுடத்தின் இயல்பு நிலை, 'மோசமானது, மூர்க்கமானது, குறுகியது', என்பதை காந்தி ஏற்கவில்லை.

வரலாறு நெடுக சுரண்டலும் மானுட துயரும் நிறைந்திருப்பதை காந்தி முழுமையாகவே அறிந்திருந்தார். ஆனால் மானுட அனுபவத்தின் மொத்த கூட்டுத்தொகை இதுவல்ல. மனசாட்சியின் உந்துதலில் தம்மைத் தாமே திருத்திக் கொண்ட மனிதர்களைப் பற்றிய வரலாறு உண்டு. இந்த ஆற்றலும், இதன் சாத்தியமும் மானுடத்தின் எதிர்காலம், என்றார் காந்தி- எனவே அறங்காவலர் முறை முதலியத்துக்கும் கம்யூனிசத்துக்கும் அப்பால் நீடிக்கும்.

கம்யூனிசத்தின் வீழ்ச்சி இன்று ஒரு நிதர்சன உண்மை, ஆனால் நிதியமைப்புகளின் சீர்குலைவுக்கும் அப்பால், மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்ச்சிகளுக்கும் அப்பால், சூழியல் பிரச்சினைக்கு சந்தேகத்துக்கிடமின்றி குற்றவாளி என்றான பின்னும்,  முதலியத்தின் பிடி இறுக்கமாய்த்தான் இருக்கிறது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி 'லாபம்'என்பதை இன்னும் பல பரிமாணங்கள் கொண்ட வகையில் மதிப்பிட்டும் பொருளின் பெறுமதியை மறுவரையறை செய்தும் முதலியத்திடமிருந்து வணிகத்தை காப்பாற்ற முயற்சிகள் தொடர்கின்றன.

ஆமி டோமினி 1970களில் பங்குத்தரகராய் இருந்தவர். அவர் வாங்கி விற்ற பங்குகளுக்கு உரிய நிறுவனங்கள் இழைத்த அநீதிகளை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே அவர் தன் தொழிலை மாற்றிக் கொண்டார். சுற்றுச் சூழலிலும் சமூகத்திலும் நிறுவனங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் செயல்படும் முதல் சில அமைப்புகளை அவர் உருவாக்கினார். அமெரிக்காவில் சமூக பொறுப்புள்ள முதலீடு (Socially Responsible Investing (SRI)) கொள்கையின் அன்னை என்று அவர் இன்று அழைக்கப்படுகிறார். 1980களில் இந்த எஸ்ஆர்ஐ இயக்கம் தென்னாப்பிரிக்க நிறுவனங்களைப் புறக்கணிக்கச் சொல்லி அமெரிக்க நிறுவனங்கள் மீது அழுத்தம் அளித்தன. நிறவெறி ஆட்சி முடிவுக்கு வர இவர்கள் அளித்த நிர்ப்பந்தம் ஒரு முக்கிய காரணம்.

ஜான் எல்கிங்டன் முதலில் பிசினஸ் கன்சல்டன்ட்டாக இருந்து பின்னர் சூழியலாளர் ஆனவர். 1999ஆம் ஆண்டு வர்த்தக வெற்றியை மதிப்பிட சக்திவாய்ந்த ஒரு முறைமையை இந்த அமைப்புக்கு அளித்தார். வெற்றி தோல்வி மூன்று அடிப்படைகளில் மதிப்பிடப்பட வேண்டும்- மக்கள், கோள், லாபம்.

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய கூட்டமைப்பு 2004ஆம் ஆண்டு அளித்த அறிக்கையில், "அக்கறை கொண்டவர்களுக்கே வெற்றி,"என்று பிரகடனம் செய்தது. உலகளாவிய முன்னணி நிதிய அமைப்புகள் இந்த அறிக்கைக்கு ஆதரவளித்தன. 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொறுப்புள்ள முதலீட்டுக் கொள்கை (United Nations’ Principles of Responsible Investing (UNPRI)) இந்தப் போக்குக்கு வலு சேர்த்தது. மேற்கூறிய மூவகை மதிப்பீட்டு அடிப்படையில் நிறுவனங்கள் தம் செயல்பாட்டை வரையறுத்துக் கொள்ள உதவும் சட்டகம் ஒன்று அளிக்கப்பட்டது. சமூக மற்றும் சூழியல் பொறுப்புகளுக்கு சட்ட அந்தஸ்து அளிக்கும் வகையில் நிதிய பொறுப்புகளுக்கு உறுதியளிக்க யூஎன்பிஆர்ஐ ஒரு வழிமுறையை உருவாக்கியுள்ளது.

2018ஆவது ஆண்டில், அமெரிக்காவில் தொழில்முறையில் நிர்வகிக்கப்படும் சொத்துகள் கிட்டத்தட்ட 11.6 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அளவில் எஸ்ஆர்ஐ அடிப்படையில் முதலீடு செய்யப்படுகின்றன. ஆக, அமெரிக்காவில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு நான்கு டாலர்களுக்கும் ஒரு டாலர் எஸ்ஆர்ஐ அடிப்படையில் செய்யப்படுகிறது.

அதே ஆண்டில், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூ ஜீலாந்து, கனடா மற்றும் ஜப்பானில் எஸ்ஆர்ஐ முதலீடுகளின் மொத்த எண்ணிக்கை 30.7 ட்ரில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் 34 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. தொழிலின் தொழில் தொழில் செய்வதுதான்- மற்ற விஷயங்களை சமூகமும் அரசும் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மில்டன் ஃபிரீட்மான் சொன்னது மிகப்

2014ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சிஈஓ டிம் குக், அவரது நிறுவனம் பசுமை ஆற்றலில் முதலீடு செய்யப் போகிறது என்று ஆண்டு பொதுக் கூடுகையில் சொன்னபோது பங்கீட்டாளர்கள் சிலர் அவரை எதிர்த்தார்கள். குறுகிய கால லாபம் குறையும். டிம் குக் அபூர்வமாகவே தன் கோபத்தை வெளிப்படுத்துபவர். அவர் பங்கீட்டாளரிடம் சொன்னார்: "போட்ட முதலுக்கு லாபம் என்றுதான் நான் வேலை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் பங்கை விற்றுவிடலாம்."

தலைவர்கள் தனி நபர்களாய் கடுமையான முடிவு எடுக்கும்போது நிதானமான, ஆனால் நிலையான தாக்கம் ஏற்படுகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் வெற்றிகரமான லாபியிங் க்ரூப் ஒன்றான பிசினஸ் ரவுண்ட்டேபிள், நிறுவனங்களின் நோக்கத்தை மறுவரையறை செய்தது. ஒரு நிறுவனம் அதன் பங்கீட்டாளர்களுக்கு எந்த அளவு கடன்பட்டிருக்கிறதோ, அதே அளவு, நுகர்வோர், ஊழியர்கள், விநியோககர்கள், மற்றும் சூழியல் ஆகியவற்றின் நலனையும் பாதுகாக்கும் கடப்பாடு கொண்டது என்று புதிய வரையறை கூறுகிறது. பங்கீட்டாளர்களின் முதலுரிமையை கேள்வி கேட்பது புதிய விஷயமல்ல. அறங்காவலர் அமைப்பை நோக்கி நகரும் விதமாக அமெரிக்காவின் முக்கிய தொழில்துறை அமைப்பு ஒன்று முடிவெடுப்பது இதுவே முதல் முறையாய் இருக்கலாம்.

இந்தியாவில் நிலைமை இதைவிடச் சிக்கலானது. ஒரு சில டெக் நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கூடுதல் சம்பளம் ஆகிய திசையில் முன்னேறுகின்றன என்பதற்கு அபாரமான உதாரணங்கள் உண்டு.  ஆனால் முதலில் வளர்ச்சி அதன் பின்னரே சமூக, மற்றும் சூழியல் நீதி என்ற எண்ணம் இன்னும் இந்தியாவில் மேலோங்கியிருக்கிறது. இதனால்தான் சுரங்க நிறுவனங்கள் போன்ற பல நிறுவனங்களும் தம் நிலம் மீது உரிமை கொண்ட மலைவாசி மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் உடன்படுகின்றன. சட்டத்துக்கு மாறாய் உள்ளூர் மக்கள் அகற்றப்படுவதை அனுமதிக்க  மறுத்த நியாயமான இந்திய நிறுவனங்களும் உண்டு. ஆனால் அவை மிகச் சில, பெரிய அளவில் அந்த முயற்சிகள் பின்பற்றப்படவில்லை.

தொழிலாளர் நிலை என்று பார்த்தால் நிலைமை அதேயளவு மோசமாக இருக்கிறது - நிலையான வேலையில் இருப்பவர்களில் 57 சதவிகிதத்தினர் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுகின்றனர். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் மாதம் பதினெட்டாயிரம் ரூபாய். தற்காலிக ஊழியர்கள் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் பெறுவதாக அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 'உழைக்கும் இந்தியாவின் நிலை'அறிக்கை சொல்கிறது. இனி எந்த நம்பிக்கையில் முன்னேறுவது?

மிகவும் வேறுபட்ட இருவரின் பார்வையில் இந்தக் கேள்வியைப் பார்க்கலாம்- கிரெட்டா தூன்பர்க், மேதா பட்கர்.

தூன்பர்க் 16 வயது பள்ளி மாணவி, ஸ்வீடனைச் சேர்ந்தவர். பருவநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்த உலகெங்கும் நிகழ்ந்து வரும் போராட்டத்தின் அடையாள உருவாய் திகழ்கிறார். பருவ நிலை மாற்றத்தை தடுத்து நிறுத்தத் தவறிய உலக தலைவர்களுக்கு எதிராய் செப்டம்பர் மாதம் அவர் முழங்கியது உலகெங்கும் தலைப்புச் செய்தியானது. "எக்ஸ்டின்க்சன் ரிபல்லியன்"  என்ற மாபெரும் போராட்டத்தின் ஒரு முகம் அவர். ரிபல்லியன் இயக்கம் அரசுகளும் தொழில் நிறுவனங்களும் இக்கோளின் 'பயனாளிகளாய்'இருப்பதை தவிர்த்து அறங்காவலராய் இருக்க வேண்டும் என்று வலியுருத்துகிறது. 

பட்கர் 64 வயதானவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்தை தலைமை தாங்கி மிகப்பெரிய அணைகள் கட்டுவதை எதிர்த்து வருகிறார். அரசியல் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அவர் முன்னேற்றத்துக்கு எதிரானவர் என்று அவதூறு செய்திருக்கிறார்கள். ஒரு ஆற்றினை அழிக்காமல் அதன் நன்மைகளைப் பெற முடியாத வர்த்தக அமைப்பும் அதன் தொழில்நுட்பமும் வீழ்வது உறுதி. பெரிய அணைகள் இருந்தாலும் தண்ணீர் பிரச்னை அதிகரிப்பதைக் காண்கையில்,  இந்த முன்னறிவிப்பு அச்சுறுத்தும் மெய்ம்மை கொண்டிருப்பதை உணர்கிறோம்.

வரையறை செய்ய முடியாத, மையமற்ற உலகளாவிய இயக்கத்தில் துன்பர்க்கும் பட்கரும் இணைகிறார்கள். தொழில்துறை முறைமைகளைச் சரி செய்யும் காலம் கடந்து விட்டது. மூவகை மதிப்பீட்டு தொழில்முறையும் குறைந்த அளவில், தாமதமாகவே பயன் தருகிறது.

கட்டுரையின் மேற்கோளில் உள்ள நிறுவன அமைப்பு தலைவரின் அற ஆற்றல் துன்பர்க் மற்றும் பட்கரின் கலக படைப்பூக்கத்துடன் ஒன்றுபடுமா? அறங்காவலர் அமைப்பை நடைமுறைப்படுத்தும் ஆர்வம் உள்ளவர்களும்கூட அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்- ஏனெனில், பெருநிறுவன நிர்வாகக் குழுவில் அது போன்ற அடிப்படை கேள்விகளைக் கேட்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், அல்லது, ஏளனப்படுத்தப்படுகிறார்கள்.

இது போலவே, தனி மனிதர்கள், தனியார் நிறுவனங்கள், அல்லது தன்னார்வல அமைப்புகள் அறங்காவலர் அமைப்பை முன்னிருத்துவது போல் இருந்தால், அவை விதிவிலக்குகள் என்று அலட்சியப்படுத்தப்படுகின்றன. பணமே வெல்லும். இதற்கு ஆதாரமாய் ஏராளமான சான்றுகள் இருந்தாலும் இது தோல்வியை உறுதி செய்யும் நம்பிக்கையின்மை.

இப்படிப்பட்ட தோல்வி மனப்பான்மையை எதிர்க்க விரும்புபவர்கள் காந்தியைப் பின்பற்ற வேண்டியதில்லை, உறுதியான கோட்பாடு போல் அறங்காவலர் அமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. காந்தி சோதனைகள் வெளிப்படுத்திய உண்மைகளின் ஆற்றலைப் பற்றி சிறிது சிந்தித்தால் போதும். அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கூட்டணிகளை தனிநபர் மனசாட்சியைக் கொண்டு அமைக்க முடியும். பணக்கார வியாபாரி முதல் அன்றாட கூலித் தொழிலாளி வரை அனைவருக்கும் இடமிருந்தால் மட்டுமே சமூகத்தில் சரித்திர மாற்றத்தை நிகழ்த்த முடியும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிகழ்த்தப்படும் உலகளாவிய போராட்டத்தில் இதில் சிலவற்றைக் காண்கிறோம்.

எளிய தீர்வுகள் இல்லாததைக் கண்டு திகைப்பவர்களுக்கு காந்தியின் பதில் இது: "பூரண அறங்காவலர் அமைப்பு என்பது புள்ளி குறித்து யூக்ளிட் செய்த வரையறை போன்ற அருவத்தன்மை கொண்டது, அதைப் போலவே அடைய முடியாதது. ஆனால் அதற்காக நாம் பாடுபட்டால், வேறு எந்த வழிமுறையாலும் அடைய முடியாத சமத்துவ நிலையை நோக்கி நம்மால் முன்னேறி வெற்றி காண இயலும். "

(காந்தி குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் ரஜினி பக்ஷி மும்பையைச் சேர்ந்தவர்; காந்தி ஸ்ம்ரிதி, தர்ஷன் ஸ்மிரிதி ஆகிய அமைப்புகளின் அங்கத்தினர்.)

நன்றி: Livemint

Image Credit : Channel 4


மினிமலிஸ்ட் காந்தி - ஸ்ரீஜித் சுகுணன்

$
0
0


நிகழ் ஆயிரமாண்டுக்கும் இதற்கு முந்தைய ஆயிரமாண்டுக்கும் இடைச்சந்திப் பத்தாண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்த மில்லனியல் என்ற வகையில் காந்தியைப் பற்றிய என் முதல் நினைவுகள் மிகைப்புகழ்ச்சித் தன்மைக் கொண்டவை. காந்திய செயல்திட்டத்தை விமரிசித்த பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங், வி.டி. சாவர்க்கர் போன்ற சிந்தனையாளர்களின் சொற்களஞ்சியத்தை அண்மைக்காலத்தில்தான் இந்திய பொதுமக்கள் தழுவியுள்ளனர். நாங்கள் பிறந்த காலத்துக்குள், நம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒழுக்கத்தினுள்ளும் லிபரல் ஜனநாயக பண்பாட்டுக்குள்ளும் பொதிந்திருந்த அகிம்சை பொதுபுத்திக்குரிய அறமாக மாறியிருந்தது.  அகிம்சையைக் கடைபிடிக்க வேண்டியது முக்கியம் என்பதைச் சொல்ல ஒரு காந்தி அவசியமில்லை.

பின்நவீனத்துவம் எப்போதும் அரசியலை எள்ளி நகையாடுவது. இந்தியாவில் தலித்துகள், தென்னாப்பிரிக்காவில் ஜூலூக்கள், மிக அண்மைக் காலத்தில் அவரது கொள்ளுப் பேத்தி மனுபென்- இவர்களிடம் காந்தி நடந்து கொண்ட விதம் மீண்டுமொருமுறை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த எள்ளலுடன் சேர்ந்து கொண்டது. காந்தியின் சுகாதார ஒழுக்கம் இந்தியாவில் கண்டனத்துக்கு உள்ளாகிறது. அவர் மீது சாதீயவாதி, இனவாதி, ஆணாதிக்கவாதி என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

காலனிய இந்தியாவில் காந்தி எதிர்கொண்ட அரசியல், அரசியல் அனுபவம் வேறு, மில்லனிய, பின்-மில்லனிய தலைமுறையினரின் அரசியலும் அரசியல் அனுபவமும் முற்றிலும் வேறுபட்டது. காந்தியின் அகிம்சைத் தத்துவம் இவர்களுக்கு பொருத்தமாக இருக்குமா? பருவநிலை மாற்றம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அடையாளச் சிக்கல்கள் என்று எதுவாக இருந்தாலும் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு வகையானவை, உலகளாவியவை. இந்த சமகால, உடனடி சவால்களைச் சமாளிக்க காந்தி உதவியாக இருக்கிறாரா?

ஆம், அவர் உதவியாகத்தான் இருக்கிறார். ஆனால், அதற்கு நாம் நவீனத்துவம் மீது காந்தி செய்த விமரிசனத்தின் காத்திரமான கூறுகள் மீது கவனம் செலுத்த துவங்க வேண்டும்.

பொறுப்பான வாழ்வு என்று காந்தி நினைத்ததில் மினிமலிசம், அல்லது எளிய வாழ்வுக்கு மைய இடமுண்டு. இன்று கடைபிடிக்கப்படும் மினிமலிசம் நம் வாழ்கையை எளிமைப்படுத்துகிறது, அவசியமற்ற எல்லாவற்றையும் நீக்குகிறோம், நம் கவனத்தைக் குலைப்பனவற்றைத் தவிர்க்கிறோம், நம் வாழ்வுக்கு மதிப்பு சேர்க்காத உடைமைகளைக் குறைத்துக் கொள்கிறோம். இதைச் செய்வதால் நமக்கு மிக முக்கியமாக இருக்கும் விஷயங்களைச் செய்வதில் தொடர்ந்து கவனத்தை இருத்தி வைக்க முடிகிறது. இப்படிப்பட்ட வாழ்வுமுறையுடன் தொடர்பு கொண்ட இருப்பு சார்ந்த நோக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதிலும் குறிப்பாக, நம் கவனத்தை ஈர்க்கும் அல்காரிதம்களும் முடிவற்ற நோட்டிபிகேஷன்களும் நம் புலன்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தும் இக்காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் மிக முக்கியமான கேள்வி இருக்கவே செய்கிறது: நோக்கத்துடன் வாழ்வது என்று வரும்போது, எத்தகைய மதிப்பீடுகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்கப் போகிறோம்?

சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் மினிமலிசத்தின் முதலிடத்தில் வைக்க வேண்டும் என்பதுதான் நாம் காணும் விடை- "அச்சம், கவலை, குற்றவுணர்வு, மன அழுத்தம், நுகர்வுக் கலாசாரத்தின் பொறிகளிலிருந்து"விடுதலை.

மினிமலிசம் சுதந்திரத்துக்கு இட்டுச் செல்கிறது என்று காந்தியும் நம்பினார். ஆனால் உள்ளடக்கத்தாலும் புறவடிவிலும் அவரது மினிமலிசம் வேறு வகைப்பட்டது. காந்தியின் மினிமலிசம் விடுதலை பெற்றுத் தரும் கருவியல்ல. மினிமலிசம் அதனளவிலேயே ஒரு லட்சியம். சக மனிதர்கள், விலங்குகள், இயற்கை உட்பட மற்றமை குறித்து நாம் கொண்டுள்ள அறக் கடப்பாட்டில் தோன்றுவது. இந்தச் சட்டகத்தின்படி, நம் உயர்ந்த அகத்தை அடைவதால் அல்ல நாம் வீடுபேறு அடைவது. மற்றமையை, குறிப்பாக எளியவர்களையும் அசக்தர்களையும் கண்ணுற்று அவர்களுக்குத் தக்க வகையில் நடந்து கொள்ளும் செயல்களில் நம் விடுதலை உள்ளார்ந்திருக்கிறது. மற்றமை குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய லிபரல் அகத்துக்கு மாறாய், மற்றமைக்கு முற்றிலும் விரோத பாவம் கொண்ட கன்சர்வேடிவ் அகத்துக்கு மாறாய், காந்திய அகம், 'பகைவர்'உட்பட மற்றமையிடம் நம்பிக்கை கொள்கிறது, அன்பினால் உந்தப்பட்டு இயங்குகிறது.

இவ்வாறாக காந்திய மினிமலிசம் ஒரு சிக்கலான அற வலையைக் கடந்து செல்கிறது. நம் நம் சூழலுடன் கொண்டுள்ள பல்வகைப்பட்ட, வெவ்வேறு வகைத்தன்மை கொண்ட உறவுகள் குறித்து உணர்வுறவும் அக்கறை கொள்ளவும் நோக்கம் கொண்டு வாழச் சொல்கிறது. இந்த அர்த்தத்தில்தான் காந்தி நாம் இந்தக் கோளின் 'அறங்காவலர்களாக'இருக்க வேண்டும் என்று சொல்கிறார், அதன் உரிமையாளர்களாக அல்ல. நம் அற வலிமையை வளர்த்துக் கொள்ளும் கருவிகளாய் தொழில்நுட்பம் பயன்பட வேண்டும் என்று நினைவுறுத்துகிறார் அவர். தொழில்நுட்பம் நமக்கு பங்குத்தாரர்களுக்கான டிவிடெண்ட்கள் பெற்றுத் தரும் கருவிகளாக மட்டும் இருக்கக் கூடாது. நாம் பொறுப்புள்ள நுகர்வோராய் இருப்பது எப்படி என்று காட்டுகிறார் அவர். நாம் எதைச் சாப்பிடுகிறோம், எதை அணிந்து கொள்கிறோம், எதைப் பயன்படுத்துகிறோம் என்பதில், நம் நுகர்வுப் பழக்க வழக்கங்களின் எதிர்பாரா பின்விளைவுகள் பற்றி அக்கறை கொள்ளச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் மேல், தனி மனிதர்களாய், நாம் தன்னிறைவு கொண்டவர்களாக இருக்க வேண்டும், சொந்தக் காலில் நிற்பவர்களாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

சுரண்டல் தன்மை கொண்ட பொருளாதார, சமூக அமைப்புகளைச் சாரவில்லை என்றால்தான், அறக் கடப்பாடுகளை நிறைவு செய்யத் தவறும் அமைப்புகளுடன் ஒத்துழைக்கக் கூடாது என்று நாம் நம்மையும் பிறரையும் வலியுறுத்த முடியும். காந்தியின் மினிமலிசம் மற்றமைக்கு விடுதலை அளிக்கிறது, அதைச், செய்யும்போதே நம் அகமும் விடுதலையடைகிறது.

(30 வயது இளைஞர் ஸ்ரீஜித் சுகுணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வு மைய முனைவர் நிலை ஆய்வாளராய் உள்ளார்)

நன்றி : The Indian Express

Image Credit : Press Information Bureau

உண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்

$
0
0



ஒரு பேரரசை உலுக்கிய சம்பரன் பயிரைவிட ஷாம்பெய்ன் பீறிட்டுத் தெறிப்பதை உலகின் பெரும்பகுதியினர் அறிந்திருக்கலாம். ஆனால் அது உண்மையை மாற்றுவதில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன் பீகாரில் உள்ள இண்டிகோ விவசாயிகளின் பிரச்சினைகளை எதிர்கொள்ளவே சத்தியாகிரகம்- உண்மையின் ஆற்றல்- முதல் முறையாக இந்தியாவில் தோன்றியது. உண்மை மீதும் அதன் ஆற்றல் மீதும் உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் அத்தனை அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் தன்னாட்சி கோரிக்கை சாவாதிருந்தது. அதுவே 1947ஆம் ஆண்டு நம் விதியை வென்று கொடுத்தது. அதன் வழிகாட்டி காந்தி. அவரே நம்மை ஒருங்கிணைத்தார், அவரே நமக்கு ஒரு தேசீய லட்சியம் அளித்தார், அகிம்சை வழியில் நீதி, சமத்துவம் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதை நல்நோக்கமாய்க் கொண்ட நன்னம்பிக்கைப் புரட்சியின் உலகளாவிய பொறியாய் இருந்தார்.

குஜராத்தில் உள்ள போர்பந்தரில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869-1948) பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் ஆனபின்னும் அவரது ஆன்மா வாழ்கிறது. நீல டெனிமின் நுட்பத்தில், காம்பஸ் கொண்டாட்டங்களின் களிப்பில், மார்டின் லூதர் கிங் கண்ட கனவின் மொழியாற்றலில், பீட்டில்ஸின் உத்வேகத்தில், கரன்சி நோட்டுக் காட்சியில், முன்னா பாயின் சாட்டு கி ஜப்பியில், எல்லாவற்றுக்கும் மேல், எவரொருவரின் துயரையும் தீர்க்கும் ஒவ்வொரு சிறு செயலிலும் மகாத்மா காந்தி வாழ்கிறார். அவர் நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷன்தான். ஆனால், அவர் நம் கூட்டு மனசாட்சியை எந்த அளவு இன்ஸ்பைர் செய்கிறார் என்பதுதான் அந்த அளவு தெளிவாய் இல்லை.

நாம் இன்று இணக்கமான உலகில் இல்லை. கோளரசியல் என்று பார்த்தால், பேரரசுகள் அல்ல, அணு ஆயுதங்கள் அதிரும் ஒலியைக் கேட்கிறோம். பின்வாங்குவது என்பது வலுவின்மை என்று பொருள்படுகிறது. தீக்குணத்துக்கும் பகைமைக்கும் எதிராய் மகாத்மா காந்தி அவ்வளவு பாடுபட போதிலும், நாம் நம்மை நம் மிக மேன்மையான லட்சியங்களைக் கொண்டும் பிறரை அவர்களது மிக மோசமான செயல்களைக் கொண்டும் மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதை விட மோசம், அணுகுண்டு வீச்சின் காளான் குடை நிழலில் வாழ்வதை நினைத்துப் பார்ப்பது இப்போதெல்லாம் விநோதமாக இல்லை என்பது போல் மிக அலட்சியமாக மிரட்டல்கள் விடுக்கப்படுமளவு நம் பார்வைகள் முரண்படுகின்றன. உலகம் இப்படித்தான் இருக்கிறது, என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள், தோளைக் குலுக்கிக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவதற்கு அப்பால் அதைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை என்பது போல்.

உள்ளூர் அரசியலுக்கு வந்தால், காந்தியின் உருவம் நம் அரசியல் கட்சிகளின் நடத்தையின் மீது ஓங்கி நிற்பதில்லை- ஒவ்வொரு முறை அவரது செயல்கள் விமரிசிக்கப்படும்போதும், அவரைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக அவர் ஓரம்கட்டப்படும்போதும் (இந்த ஆண்டு தேர்தலில் போபாலில் இது நடந்தது), நம் தொலைக்காட்சி திரைகளின் கூக்குரல்களிலும் ஆத்திரத்திலும்தான் அவரது தோற்றம் எழக் காண்கிறோம். நம் தேசப்பிதா குறித்து வெடிக்கும் சர்ச்சைகள் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகின்றன. அவரது எண்ணங்கள் நமக்கு உறுத்தலாக இருக்கின்றன. குறிப்பாய், சாதி, மதம், கலாசார மரபுகளின் மேம்போக்கான பிளவுகளுக்கு அப்பால் மானுடத்தின் பொது இயல்புகளை அவர் வலியுறுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது கடைசி காலத்தில் அவர் மதப் பிரிவினையைச் சரி செய்வதற்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்துக் கொண்டார். அவரது கை மீறிய காரணங்களால் பிளவு தவிர்க்க முடியாமல் போயிருந்தது. அது அவருக்கு ஒரு வாதையாகவும் இருந்தது.

ஆனால்  ஒரு சோகம், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் அவர் வீசப் போராடிய பிளவுகளில் சில இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்களாய் இன்றும் தொடர்கின்றன. புறத்தோற்றத்துக்கு மாறாய், உள்நாட்டு கலகத்தின் ஆபத்து இருக்கவே செய்கிறது. ஆனால், நல்ல வேளை, பாபுவின் பொது ஆளுமை இந்தியாவில் தொடர்ந்து மேலெழுந்த வண்ணம் இருக்கிறது. சுத்தம் குறித்து அவர் கொண்டிருந்த ஆதர்சங்கள் அரசால் ஸ்வச் பாரத் இயக்கத்தின் வழி கிராமப்புறங்கள் எங்கும் கொண்டு செல்லப்படுகின்றன. நடத்தைச் சீர்திருத்தத்துக்கு அவரது மூக்குக் கண்ணாடி ஒரு குறியீடாய் பயன்படுகிறது. வேலையில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கும் வாசிப்பில் ஆர்வமற்றவர்களுக்கும் அவரது தரிசனம் தெளிவற்றதாய் இருப்பினும் அவரது மூக்குக் கண்ணாடிகள் மாற்றி வடிவமைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் தெரிகின்றன. ஒரு சுருக்கக் காட்சிக்கு நம் தேசீயச் சின்னத்தைப் பார்த்தால் போதும். சத்யமேவ ஜயதே, என்கிறது அது. வாய்மையே வெல்லும். நா அன்ரிதம், என்றும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். பொய் வேண்டாம். வரப்போகும் தலைமுறைகளின் நன்மைக்காகவாவது, காந்தி எதை விழைந்தாரோ, அதை அடையும் முயற்சிகளை நாம் கைவிட வேண்டாம்.

நன்றி: Livemint

காந்தியின் சமய தரிசனத்தை மீட்டெடுத்தல்- ராஜீவ் பார்கவா

$
0
0



நவீனமடைந்த இந்து சமயம் உட்பட நவீன விஷயங்கள் பலவற்றைக் குறித்து காந்தி ஐயம் கொண்டிருந்தார். நவீனமடைந்த இந்து சமயம் புதியது, 19ஆம் நூற்றாண்டுக்கு உரியது, பிறவற்றிடமிருந்து துல்லியமாய் வேறுபடுத்தப்பட்ட்து, இஸ்லாமுக்கும் கிறித்தவத்துக்கும் தக்க போட்டி. ஏன் இந்த ஐயம்? என்றோ துவங்கிய வாழ்வுமுறையை பின்பற்றும் சனாதனியாய் தன்னைக் கருதினார் காந்தி. இறந்து மறைந்த புராதன விஷயங்கள் போலல்லாமல் சனாதன இந்து மதம் இன்றும் வாழ்கிறது என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். இதுவே காரணம்.

அழிக்க முடியாத பன்மைத்துவம்

அழியாத இந்த இந்து சிந்தனையின் மையத்தில் அதன் ஆழமான பன்மைத்துவம் இருக்கிறது. அடிப்படையில் மூன்று வேறு அற வடிவங்கள் ஏககாலத்தில் நிலவுவதை ஏற்றுக் கொள்வதில் இந்த பன்மைத்துவம் வெளிப்படுகிறது: ஒன்று, பல்வேறு தெய்வங்கள் இருப்பது சார்ந்தது, அடுத்தது ஒற்றைத் தெய்வம் உண்டென்ற நம்பிக்கை, மற்றையது தெய்வங்களை எவ்வகையிலும் சாராத் தன்மை கொண்டது (மெய்த்தேட்டை).  இந்த சமய- தத்துவ பன்மைத்துவம் மனித இனத்தின் தவிர்க்க முடியாத, ஆரோக்கியமான விதி என்று கருதினார் காந்தி. "அத்தனை சமயங்களிலும் எல்லையற்ற வெவ்வேறு இயல்புகள் உள்ளன,"  அதே நேரம், "தீர்க்க முடியாத சமயச் சழக்குகள்,"என்று சுட்டினார் அவர். "சிலர் யாத்திரை சென்று புனித நதிகளில் நீராடுகிறார்கள், சிலர் மெக்கா செல்கிறார்கள்; சிலர் ஆலய வழிபாடு செய்கிறார்கள், சிலர் மசூதிகளில், சிலர் பக்தியுடன் தலை வணங்குதல் மட்டும் செய்கிறார்கள்; சிலர் வேத பாராயணம் செய்கிறார்கள், சிலர் குரான் ஓதுகிறார்கள்... சிலர் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள், சிலர் முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்..."காந்தியைப் பொறுத்தவரை பன்மைத்துவம் மதங்களிடையே மட்டுமல்ல, மதங்களுக்குள்ளும் உண்டு. "நான் ஒரு இந்து என்று நம்புகிறேன், ஆனால் அவர்கள் ஒருவரோ அல்லது அனைவருமோ வழிபடும் அதே வழியில் நான் இறை வழிபாடு செய்வதில்லை என்பதை அறிந்திருக்கிறேன்."

ஆழமான சமய பன்மைத்துவம் தவிர்க்க முடியாதது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டுமென்றால்,"மொத்த மனித இனத்துக்கும் ஒரே மதம் இருக்க வேண்டும் என்பதல்ல, வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர்களிடையே பரஸ்பர மரியாதையும் மதிப்பும் நல்லிணக்கமுமே இன்றைய தேவை. "எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்றே என்ற ஆழமான மெய்சார்ந்த புரிதல் காரணமாகவே எல்லா மதங்களையும் சமமாய் மதிக்க வேண்டும் என்ற அற- நடைமுறை பார்வை உருவாகிறது. "சமயங்களின் ஆன்மா ஒன்றே, ஆனால் எண்ணற்ற வடிவங்கள் பூண்டுள்ளது. அறிவுடையோர் புறத் தோற்றத்தைத் தவிர்த்து பல்வகைப்பட்ட தோற்றங்கள் கொண்டு வாழும் ஏக ஆன்மாவைக் காண்கின்றனர்."

"எல்லா மதங்களும் ஒரே விஷயத்தைச் சுட்டுகின்றன: கடவுள், அல்லது உண்மை. "எல்லா மதங்களும் உண்மையானவை. எல்லாவற்றிலும் சிறிது பிழையுண்டு. நான் என் மதத்தில் பற்றுள்ளவனாய் இருக்கும்போதும், பிற மதங்களையும் இந்து மதம் போல் நேசிக்க வேண்டும், அவற்றுக்கு இடையே பேதம் காணக்கூடாது."

பிறரையும் அணைத்துக்கொள்ளும் ஒற்றைத்தெய்வ வழிபாடு

காந்தியின் ஒற்றைத் தெய்வ வழிபாடு இந்திய பலதெய்வ மரபிலிருந்து நேரடியாய்த் தோன்றுகிறது. உண்மைத் தெய்வம் ஒன்றே,  பிறவனைத்தும் பொய் என்ற நம்பிக்கையுடைய தனியொருத் தெய்வ வழிபாடல்ல அவரது. காந்தியின் ஒற்றைத் தெய்வ வழிபாடு, கடவுளனைவரையும் தன் உள்ளடக்கமாய்க் கொண்ட ஒரு தெய்வ வழிபாடு. இந்திய பல்தெய்வ மரபு, கிரேக்கம், லத்தீன், இஸ்லாமுக்கு முற்பட்ட அரபு சமயங்கள் உட்பட பண்டைய உலகின் பிற சமய மரபுகளுக்கு பொதுவானது. கடவுளரை பிற வடிவங்களில் வழிபட இந்தச் சமயங்களின் அடிப்படை தத்துவம் அனுமதிக்கிறது.

தொன்ம காலத்தின் அத்தனை கலாச்சாரங்களிலும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பணி உண்டு. இது அவரது உலகளாவிய திறன் சார்ந்தது- காதல் தெய்வம், போர்த் தெய்வம், கல்வித் தெய்வம், கலைத் தெய்வம், இது போல். அதே போல், ஒவ்வொரு கடவுளும் உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட உருவக வடிவம் தரித்திருந்தனர்- நெருப்புத் தெய்வம், மழைத் தெய்வம், மண் தெய்வம், சூரிய தெய்வம், நிலவுத் தெய்வம், கடற்தெய்வம், இது போல். அல்லது, ஆக்குவது, அழிப்பது, காப்பது என்ற பணிகள் கொண்ட ஆதார தெய்வங்கள் இருந்தனர். ஒவ்வொரு கலாசாரத்துக்கு உரிய தெய்வங்களும் அவற்றையொத்த பிற கலாசார தெய்வங்களுடன் ஒப்பிடப்படக் கூடியவை. உதாரணத்துக்கு, இந்தியாவின் ஒரு பிராந்திய கலாசாரத்தில் உள்ள பார்வதி தேவி வேறு பிரதேசத்தில் துர்க்கையாக வழிபடப்படுகிறார்- இருவரும் ஒரே ஆதி தெய்வமான தேவியின் சாந்த, மற்றும், உக்கிர சொரூபங்களாய் கருதப்படுகின்றனர். இவ்வகையில், சாந்தம், உக்கிரம் போன்ற வேறுபாடுகள் அழிக்க முடியாதவை, ஆனால் மாற்று வடிவில் புரிந்து கொள்ளப்படக் கூடியவையாகின்றன. பொதுப் பொருள் கொண்ட உலகின் பின்னணியில் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் உரிய தெய்வங்களை அடையாளம் கண்டுகொள்ளும் சித்தாந்தம் இது.

"வெவ்வேறு பெயர்களில் எனினும் அனைவரும் ஒரு தெய்வத்தையே வழிபடுகிறார்கள்,"என்ற நம்பிக்கை பிறரை அணைத்துக் கொள்ளும் ஒற்றைத் தெய்வ வழிபாட்டின் இயல்பு. அல்லா, ரஹீம், அல்லது ராம் என்று எப்பெயரிலும் இறைவன் அழைக்கப்படலாம் என்று குரு கிரந்த் சாகிப்பில் நானக் சொல்லும் அற்புதமான பாடலைக் கொண்டு காந்தி இதற்கு விளக்கம் அளிக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சமயம் சார்ந்த பார்வை பல்தன்மை கொண்ட பற்றுதல்களை அனுமதிக்கிறது. வெவ்வேறு பெயர்கள் ஒரே தெய்வத்தைக் குறிக்குமென்றால், எல்லாவற்றையும் ஏன் தழுவக் கூடாது?

இங்கிருந்து நாம் இன்னும் இரு முடிவுகளை அடைகிறோம். முதலாவது இது- "வேறொரு சமயத்தை கீழ்மைப்படுத்துவது, பொறுப்பில்லாமல் பேசுவது, பொய் சொல்வது, அப்பாவிகளின் மண்டையை உடைப்பது, கோவில்கள் மற்றும் மசூதிகளின் புனிதத்தைக் குலைப்பது, இவை இறை மறுப்பு."இரண்டாவது, "ஒருவன் தன் கடவுள் பிறர் கடவுளை விட உயர்ந்தவர் என்று சொல்வது தவறு. ஒன்றே தெய்வம், அனைவருக்கும் அவர் ஒருவர். அனைத்து மதங்களுக்குமிடையில் ஒரு தளத்தில் ஒற்றுமை நிலவுகிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே அவை சமமானவை என்று கருதப்பட வேண்டும். அப்படியானால், மதமாற்றம், மதச் சுத்தி செய்வது போன்ற இயக்கங்கள் அர்த்தமற்றவை. "ஒவ்வொருவரும் தன் சமயத்தின் பூரண நிலை அடைய முயற்சி செய்வதே சுத்தி இயக்கம்."இந்த திட்டத்தில், மனிதர்களின் குணம் மட்டுமே சோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய விஷயம். "ஒருவன் மேன்மையான ஒழுக்கம் அடையவில்லை என்றால், ஒரு ரயில் பெட்டியிலிருந்து வேறொரு பெட்டிக்குப் போய் என்ன பயன்?"

சகிப்புத்தன்மையும் மரியாதையும்

சகிப்புத்தன்மைக்கும் மரியாதைக்கும் தொடர்புண்டு என்று கருதினார் காந்தி. அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இது விநோதமாக இருக்கலாம். 'சகித்துக் கொள்ளுதல்'என்ற சொல்லின் 17ஆம் நூற்றாண்டு பொருளை எடுத்துக் கொண்டால், பிறர் செய்வது நமக்கு ஒழுக்கக்கேடு என்று அருவெறுப்பு ஏற்படுத்தினாலும், அவர்களைத் தடுக்க முடியும் என்றாலும், அவர்களுடைய செயல்களில் குறுக்கிடாது இருத்தல், என்று புரிந்து கொள்ளலாம். இங்கே நாம் சகித்துக் கொள்கிறோம், ஒழுக்கக்கேடு என்று நாம் கண்டிக்கக்கூடிய செயல்களை பிறர் செய்வதையும் தாங்கிக் கொள்கிறோம். இங்கு, சக்தியுள்ளவர்கள் அளிக்கும் தண்டனையை அவர்களைவிட எளியவர்கள் தவிர்த்து விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு கருணை காட்டப்படுகிறது. இது வெறுப்பு அடிப்படையிலான சகிப்புத்தன்மை - நான் வெறுக்கிறேன், ஆனால்கூட சகித்துக் கொள்கிறேன்.

காந்தியின் 'சகிப்புத்தன்மை'வேறு வகை. எப்படி? பெற்றோர் மற்றவர்களிடம் ஏற்றுக் கொள்ள முடியாத குறைகளைத் தம் குழந்தைகளிடம் சகித்துக் கொள்கிறார்கள். நம் துணை, காதலர், அல்லது நெருங்கிய நண்பரிடம் உள்ள குறைகளை நாம் பொருட்படுத்துவதில்லை, ஆனால் மற்றவர்கள் அதைச் செய்தால் மன்னிக்க மாட்டோம். சக குடிமக்களுடன் நமக்குள்ள கருத்து வேறுபாடுகளைப் பொறுத்துக் கொள்வோம், காரணம் நாம் நட்புக்கு மதிப்பு கொடுக்கிறோம். சுருக்கமாய்ச் சொன்னால், நாம் ஏற்றுக் கொள்ள முடியாத நம்பிக்கைகள், நடத்தைகள், சில நபர்கள் அல்லது குழுக்களிடம் இருந்தால் அவர்களது மற்ற நம்பிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாய் சகித்துக் கொள்கிறோம். இப்படிப்பட்ட எல்லா சமயங்களிலும் பிறர் காரணமாய் நமக்கு பிடிக்காத சூழ்நிலை ஏற்படும்போது, அது குறித்து நாம் ஏதாவது செய்ய முடியும் என்றாலும்கூட, அதை ஒப்புக் கொள்கிறோம். ஏனென்றால் நாம் அவர்களிடம் அன்பு செலுத்துகிறோம், அல்லது அன்பையொத்த உணர்வு கொண்டிருக்கிறோம். பிறரை நாம் சகித்துக் கொள்ள காரணம் வெறுப்பல்ல, அன்பே- நேசிப்பதால் நான் சகித்துக் கொள்கிறேன். இதுவே காந்தியின் அன்பு அடிப்படையிலான சகிப்புத்தன்மை, அது மரியாதை அளிப்பதுடன் பூரண இணக்கம் கொண்டது..

பொதுவாக எல்லாரும் சகிப்புத்தன்மை குறித்து வெறுப்பின் அடிப்படையில் ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள். மற்றமையை முழுமையாய் ஒழித்து விட வேண்டும், பன்மைத்தன்மையை அழித்து விட வேண்டும். அப்போது, பொருட்படுத்தத்தக்க பிறருடன் ஒருமை ஏற்படும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதான இந்த காந்திய சகிப்புத்தன்மையில் முழு மற்றமைத்தன்மை கொண்ட  அனைத்துக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து ஏற்றுக் கொள்வதால் ஒருமை உருவாகிறது. அவர்கள்  ஒரே பெருந்தெய்வத்தின் வெவ்வேறு வகைய வெளிப்பாடாகிறார்கள். ஆக, சகித்துக் கொள்வது என்பது பிறர் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பது. நாம் வெறுப்பதால் அல்ல, நம் அகத்தின் மாற்று வெளிப்பாடுகளாக அவர்களை நேசிக்கிறோம் என்பதாலும், நம் அனைவர்க்கும் பொதுவான ஏதோவொரு அடிப்படை நெறி மீது ஆழமான அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதாலும் இந்த சகிப்புத்தன்மை உருவாகிறது. நாம் அவர்களாய் இருக்க முடியாது, அவர்கள் நம்பிக்கைகளையும் செயல்பாடுகளையும் நாம் வெறுக்கக்கூட செய்யலாம். ஆனால் அவர்கள் நம் அகத்தின், நம்முள் இருக்கும் தெய்வத்தின், வேறு வடிவங்கள் என்பதை அங்கீகரிக்கிறோம். இதுவே நிலைத்த அன்பு கொண்ட உறவில் நம்மைப் பிணைக்கிறது என்று நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி.

காந்தியின் சமய தரிசனம் பன்முனை பற்றுதல்களை, பன்முறை பாத்தியதைகளை, பன்முனை சமய அடையாளங்களை வளர்த்துக் கொள்ளத் தூண்டுவது. பிறருக்கு இடமில்லாத ஒற்றைத்தன்மை கொண்ட சமய நம்பிக்கையை நாம் கேள்வி கேட்கும் நேரமல்லவா இது? இதன் ஆகச் சிறந்த லட்சியம் சந்தர்ப்பவாத, சந்தேகத்துக்குரிய அறம் சார்ந்த, வெறுப்பு அடிப்படையிலான சகிப்புத்தன்மையை சமூக ஆதர்சமாய்க் காண்பது. காந்தியின் சமய தரிசனத்தின் மையத்தில் உள்ள ஆழமான பன்மைத்துவத்தையும் அன்பு அடிப்படையிலான சகிப்புத்தன்மையையும் நாம் மீட்டெடுக்க வேண்டாமா? உண்மையில், சமயச் சச்சரவுகள், மோதல்கள், வன்முறை வலுக்கும் இக்காலத்தில் நாம் இதைத் தவிர்க்கத்தான் முடியுமா?

(செண்டர் ஃபார் ஸ்டடி ஆஃப் டெவலபிங் சொசைட்டிஸ் அமைப்பில் பேராசிரியர் பதவி வகிக்கிறார் ராஜீவ் பார்கவா)

நன்றி: The Hindu

Image Credit : CCN EsNoticias

அந்தர்யாமியை அறிதல் - கே. வி. அக்சரா

$
0
0


இந்த தேசமும், என் சக மனிதர்கள் உட்பட நானும், மகாத்மா காந்தியின் லட்சியங்களை பின்பற்றவில்லை. ஆனால், நம்மைவிட விரிவான கூட்டு பிரக்ஞையில், அவரது எழுத்துக்கும் வாழ்வுக்கும் சக்திகரமான இருப்புண்டு. அவர் எழுதியவை மிக அதிகம் வாசிக்கப்படும் உண்மை நமக்கு தெரியும். உதாரணத்துக்கு, அவரது சுயசரிதையான 'சத்திய சோதனை'கிட்டத்தட்ட அத்தனை இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருப்பதாய் தெரிகிறது. எனவே குறைந்தது ஒரு கோடி மக்களாவது காந்தியை வாசித்திருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்கிறேன். இந்த பழைய, நமக்கு பழக்கப்பட்ட புத்தகத்தின் புதிய பதிப்பு வந்திருக்கிறது. பெங்குவின் பதிப்பு, 2018ஆம் ஆண்டு. இதை தொகுத்திருப்பவர் திரிதிப் சுஹ்ருத். இரண்டு ஆண்டுகள் சபர்மதி ஆசிரமத்தின் தலைமை பொறுப்பில் இருந்த காந்திய அறிஞர் அவர்.

இதற்கு முன் வந்த பதிப்புகள் செய்திருக்காத இரு விஷயங்களை இந்த 800 பக்க புதிய பதிப்பு சாதித்திருக்கிறது. மூல மொழியான குஜராத்திக்கும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளின் பட்டியலை இதன் தொகுப்பாசிரியர், சுஹ்ருத், புத்தகத்தின் இடது மற்றும் வலது பத்திகளில் அளித்திருக்கிறார். அது மட்டுமல்ல, வெவ்வேறு பிரதிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளையும் பட்டியலிடுகிறார். இவற்றுடன், இன்றைய வாசகர்கள் வசதிக்காக, அவர் விரிவான அடிக்குறிப்புகள் அளித்திருக்கிறார். இரண்டாவதாக, அவர் முப்பத்து நான்கு பக்கத்துக்கு நீளும் விரிவான அறிமுகமொன்று எழுதியிருக்கிறார். இது காத்திரமான அறிவுப்பார்வையை அளிக்கிறது. சத்தியாகிரகம், அகிம்சை, பிரம்மச்சர்யம், ஸ்வராஜ்யம், அபரிகிரஹம் போன்ற காந்திய சிந்தனைகளை மிகத் தெளிவாக விவரிக்கிறது. கோட்பாட்டு நிலையுறுதி இல்லாத இந்த விமரிசனம் நூல் வாசிப்பில் பிசிறு தட்டாமல் சேர்ந்து கொள்கிறது.

இதற்கு முன் வாசித்தவர்களுக்கும் சரி, முதல் முறை வாசிப்பவர்களுக்கும் சரி, இந்த நூல் புதுப்புது அர்த்தங்கள் அளிக்கிறது. இந்தப் பதிப்பைப் பற்றி விரிவாக ஆய்வுரை அளிக்க விரும்பவில்லை. இந்த நூல் வாசிக்கும்போது நான் அடைந்த ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் என்னை மிக ஆழமாக நெகிழச் செய்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு தொட்டுச் செல்ல விரும்புகிறேன்.

காந்தி தன் சுயசரிதையை நூல் வடிவில் எழுதவில்லை என்பது நமக்கு தெரியும். 25.11.1925 முதல் 3.2.1929 வரை அவர் தான் பதிப்பாசிரியராய் இருந்த நவஜீவன் இதழில் 166 வாரங்கள் தொடர்ந்து இதை ஒரு பத்தியாய் எழுதினார். காந்தியின் சுயசரிதைக்கும் இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கும் ஒரு அற்ப ஒற்றுமை காண வேண்டுமென்றால், இன்றைய தொலைக்காட்சி தொடர் எழுத்தாளர்களைப் போலவே, காந்தியும் தன் சுயசரிதையின் ஒவ்வொரு பகுதியையும் அது பதிப்பிக்கப்பட்ட நாளன்றுதான் எழுதித் தந்தார். அடுத்த பகுதி என்னவென்று அவர் திட்டமிடவில்லை, புத்தக வடிவில் எப்படி வர வேண்டுமென்று அவர் நினைத்துப் பார்க்கவுமில்லை. உண்மையில், காந்தி தன் சரிதையின் முடிவைக்கூட திட்டமிடவில்லை. எழுத ஆரம்பித்தபோது இந்திய அரசியலின் மையத்தில் இருந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒன்றாக இதையும் எழுதினார். இதை எழுதிய காலகட்டத்தின் பெரும்பகுதி அவர் ஆசிரமத்தில் இருந்தார். தனது அரசியல் மற்றும் பொது விவகாரங்களுக்கு அளித்த அதே முக்கியத்துவத்தை இந்த 'சோதனைகளுக்கும்'அளித்தார்.

இந்தப் புத்தகத்தின் துவக்கத்திலேயே அவர், தான் ஏன் இதை எழுதத் துவங்கினார் என்பதை விளக்குகிறார். இந்தச் சோதனையின் மூலம் தன் வெற்றி தோல்விகளை பொதுப் பார்வையில் முன்வைக்க விழைகிறார் காந்தி. இது ஒரு மாபெரும் மனிதனின் கதையல்ல என்பதையும் அவர் சொல்ல விரும்புகிறார். ஆனால், தன் கதையைச் சொல்வதன் வழியே, "என்னால் எது முடிந்ததோ, அது ஒரு சிறு குழந்தைக்கும் சாத்தியம்,"என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க விரும்புகிறார். என்றாலும், நான்காம் பகுதியில், "நெருங்கிய ஐரோப்பிய நண்பர்கள்"என்ற அத்தியாயத்தில் அவர் தன் எழுத்து முறையை விவாதிக்கிறார். இது அவரது வாசகர்கள் எதிர்பார்த்திருக்க முடியாதது. இதன் கோரூர் ராமஸ்வாமி ஐயங்கார் கன்னட மொழிபெயர்ப்பில் அவரது சொற்கள் இப்படி அளிக்கப்படுகின்றன:

"இந்த அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தக் கதையை என்னால் எப்படி வாரா வாரம் எழுத முடிந்தது என்பதை என் வாசகர்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்கிறேன். நான் இதை எழுத ஆரம்பித்தபோது, என் முன் எந்த திட்டமும் இல்லை. நான் தினக்குறிப்புகள் எழுதுவதுமில்லை, ஒப்புநோக்க கடிதங்களும் இல்லை- சான்றாதாரம் என்று எதுவும் கிடையாது. என் அந்தராத்மாவின் தூண்டுதல்களுக்கு ஏற்பவே எழுதுகிறேன்."

கன்னட மொழியாக்கம் மகாதேவ் தேசாய் மூல குஜராத்தி மொழியிலிருந்து செய்த ஆங்கில மொழிபெயர்ப்பை ஒட்டி செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த புதிய பதிப்பை வாசிக்கும்போது, இந்த மூன்று மொழிகளிலும் வெவ்வேறு வகையில் ஒரு முக்கியமான சொல் பேசப்படுகிறது என்பதை உணர்ந்தேன். காந்தி அந்தர்யாமி என்ற சொல்லை பயன்படுத்துகிறார், தேசாய் தன் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஸ்பிரிட் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார், கோரூர் அந்தராத்மா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். காந்தியின் எழுத்தில் அந்தர்யாமி என்பது முக்கியமான சொல் என்பதை திரிதிப் சுஹ்ருத் கண்டு கொள்கிறார். அது மட்டுமல்ல, காந்தியின் ஆளுமையிலும்கூட அதற்கு முக்கியமான இடமுண்டு என்பதையும் உணர்ந்திருக்கிறார். காரணம், அவரது வாழ்வில் எழுதத் தகுந்த பகுதிகளை தேர்ந்தெடுத்தது அந்தர்யாமியே.

அந்தர்யாமி என்று காந்தி சுட்டும் சக்தி அவரது சுயசரிதையை மட்டும் வழிநடத்திய ஒன்றல்ல, அதுவே அவரது வாழ்வைக் கட்டுப்படுத்தியது. அவரது ஆன்ம உயிர்ப்பாய் இருந்தது. "பெரிதும் சிறிதும், என் வாழ்வின் அத்தனை செயல்களும் அந்தர்யாமியால் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்வது தவறாக இருக்காது."எனவே, தன் வாழ்வுலகையும் செயலுலகையும் இணைக்கும் பிரதிநிதித்துவ சொல்லாய் அதைக் கொள்கிறார் காந்தி.

அப்படியானால் இந்த அந்தர்யாமி எது? அதை நாம் எப்படி விளங்கிக் கொள்வது? எங்கிருந்து இந்தச் சிந்தனை எழுகிறது? இதற்கான விடைகள் தேடும்போது, இது காந்தி மிகவும் நேசித்த பகவத் கீதையில் எழும் சொல்லா என்று கேட்டுக் கொள்கிறோம். இதற்கு நெருங்கிய பொருள் கொண்ட பல சொற்கள் கீதையில் இருக்கின்றன, ஆனால் அந்தர்யாமி என்ற சொல் அதில் கிடையாது. வைணவ பண்டிதர்கள் பலர் கீதைக்கு வெவ்வேறு வியாக்கியாயனங்கள் அளித்திருக்கின்றனர். அவற்றில் இந்தச் சொல் அதிகமாகவே கையாளப்படுகிறது. அங்கிருந்து காந்தி அந்தர்யாமியைப் பெற்றுக் கொண்டார் என்று கருத இடமுண்டு. அதற்கு மேலும் படிக்கும்போது, அந்தர்யாமி என்ற சொல்லுக்கு காந்தி அளிக்கும் பொருளும் அதன் விளக்கமும் அவருக்கே உரியவை என்பதை உணர்கிறோம். வேறெங்கும் அச்சொல் இது போல் பயன்படுத்தப்படுவதில்லை. வசதிக்கேற்ப இருபுறமும் இடம் கொடுத்து, வாழ்வை நாம் லௌகீகம், ஆன்மிகம் என்று பிரித்திருப்பது போலவே, காந்தியும் அந்தர்யாமியைப் பயன்படுத்துகிறார். ஆன்மீக அகவெளிக்கு அப்பாலும் அதன் பொருளை விரித்தெடுக்கிறார் அவர்.

காந்தி சொல்கிறார்:

"நான் கடவுளைப் பார்த்தது கிடையாது. எனக்கு அவரைத் தெரியவும் தெரியாது. இவ்வுலகம் அவரைச் சார்ந்திருக்கிறது என்ற நம்பிக்கையை எனதாக்கிக் கொண்டிருக்கிறேன்..."

அந்தர்யாமியை அவர் சமய நூல் வாசிப்பைக் கொண்டு உருவாக்கிக் கொண்டார், இவ்வுலகில் உள்ளபடியே அதை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை காந்தியின் சொற்களை வாசிக்கும்போது உணர்கிறோம். காந்தியின் அந்தர்யாமி எப்போதுமே வெளிப்படையாய் நடந்து கொண்டது என்று சொல்ல முடியாது, சில சமயம் அது குழப்பம் விளைவித்தது, மர்மமாய் இருந்தது. காந்தியின் வாழ்விலும் செயல்களிலும் இப்படிப்பட்ட பல உதாரணங்களைக் காணலாம்: இது போன்ற ஒன்றை சுஹ்ருத் தன் அறிமுகத்தில் அளிக்கிறார். 1933ஆம் ஆண்டு எரவாடா சிறையில் இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் அவர் உண்ணா விரதம் அறிவித்தார். "இவ்வாறு செய்யும்படி அந்தர்யாமி என்னைத் தூண்டுகிறது,"என்றார் அவர். வேறெந்த காரணமும் அளிக்கவில்லை. அவரைச் சுற்றி இருந்தவர்களை சங்கடப்படுத்திய கணம் அது. வல்லப்பாய் படேல் கூட அதற்கு மேல் ஒன்றும் விளக்க முடியாதவராய் இருந்தார். "மனிதன் எப்போதும் தன் எண்ணங்களை வெளிக்காட்ட முடியுமா, அல்லது, அதை முழுமையாய் வெளிபபடுத்தத்தான் முடியுமா?"காந்தியின் இவ்விளக்கம் அவரது உள் வட்டத்தில் இருந்தவர்களைச்  சமாதானப்படுத்தவில்லை. அவரது கடைசி மகன் தேவதாஸ் காந்தியும் சி. ராஜகோபாலாச்சாரியும் உண்ணா விரத காரணத்தை அறிந்து கொள்ள முனைந்தார்கள். கடைசியில், "சிறையின் மூச்சுத் திணற வைக்கும் சூழல் அவரது மனதை மழுங்கச் செய்து விட்டது,"என்ற முடிவுக்கு வந்தார்கள். என்றாலும் தன்னை முடிவெடுக்கச் செய்தது அந்தர்யாமிதான் என்று காந்தி உறுதியாக வலியுறுத்தினார்.

காந்தி தன் வாழ்வின் கடினமான கட்டங்கள் பலவற்றில் அந்தர்யாமியின் குரலுக்கு செவி சாய்த்தார். அவரது சிந்தனை முறை பற்றி இது ஏதேனும் உணர்த்துகிறதா? சுஹ்ருத், ஆம், என்பது போல் சில சுட்டுதல்கள் அளிக்கிறார், அவரது முன்னுரையில் இக்கேள்விக்கு பதில் தருகிறார். ஒரு வாசகனாக என்னுள் நிகழ்ந்த ஒத்ததிர்வுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்திருக்கிறேன். காந்தியின் சிந்தனை முறைகள் பற்றி என் வாசிப்பை முன்வைக்க இங்கு முயற்சி செய்கிறேன்.

ஒரு எளிய கேள்வியில் துவங்குவோம். நமக்கெல்லாம் பழக்கப்பட்ட, நாமெல்லாம் அனுபவப்பட்ட, இந்த சிந்தனை என்பதுதான் என்ன? நம்முள் பொதிந்திருக்கும் பல்லகங்களிடையே மனதினுள் நிகழும் மௌன உரையாடல்தான் சிந்தனை. இதை காந்திக்கும் நீட்டிப்போம் என்றால், அவர் அகக் குழப்பம் என்று சொல்வது, அவரது பல்வேறு அகங்களிடையே நிகழும் வாக்குவாதம். பல்வகைப்பட்ட இந்த குரல்கள் அவர் உள்ளத்தில் குழப்பம் செய்கின்றன. அத்தனை கூக்குரல்களுக்கும் இடையில் தனக்கு கேட்கும் தெளிவான குரலை அவர் அந்தர்யாமி என்று அழைக்கிறார்: எது ஒன்று எல்லா குழப்பங்களுக்கும் முடிவு கட்டுகிறதோ, அதுவே அந்தர்யாமி.

அப்படியானால் இதுதான் அந்தர்யாமியா? துவக்கத்தில் காந்திக்கு கேட்ட பல குரல்களில் ஒன்றுதான் அந்தர்யாமியா? அல்லது இந்த அத்தனை குரல்களையும் தாண்டி ஒலித்த புதுக்குரலா அது? பல குரல்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலின் விளைவாய்ப் பிறந்த தனித்தன்மை கொண்ட ஒன்றா அது? காவ்ய மீமாம்சம், தத்துவம் போன்றவற்றின் பிரவசனங்களில் நாம் எதிர்கொள்ளும் சாத்தியங்களைப் போன்றவை இது. அந்தர்யாமி என்ற குஜராத்தி சொல்லை காந்தி பயன்படுத்துவது மூன்றாம் சாத்தியத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று நினைக்கிறேன். எனவே, ஆங்கிலத்தில் ஸ்பிரிட் என்று சொல்வதும், கன்னட மொழியாக்கத்தில் அந்தராத்மா என்று சொல்வதும் சரியாக இருக்காது. அக நெகிழ்வு, அல்லது அக உரையாடலை அந்தர்யாமி உணர்த்துகிறது. காந்தி முன்வைக்கும் பொருளுக்கு அதுவே மிகவும் பொருத்தமானது.

காந்திக்கு கேட்கும் அத்தனை குரல்களில் அவர் எப்படி குறிப்பிட்ட ஒரு குரலை மட்டுமே அந்தர்யாமியின் குரல் என்று அடையாளம் கண்டு கொள்கிறார்? நம் சாதாரண வாழ்வில் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டால், நாம் எப்படி அக்குரலைக் கண்டு கொள்வது, அதைப் பிறவற்றிடமிருந்து பிரித்தறிவது? காந்திக்கு சிறப்பு சேர்ப்பவை அவரது சிந்தனைகள் அல்ல, இக்கேள்விக்கு அவர் பதிலளிக்கும் விதம்தான்.

தனது அறிமுகத்தில் இதை சுஹ்ருத் துல்லியமாய்க் கைப்பற்றி விடுகிறார். காந்தியைப் பொறுத்தவரை, ஒருவன் தன் சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்வதால் அந்தர்யாமியின் குரலை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மாறாய், பிரமசரியம், ஆஸ்தேயம், அபரிகிரகம், அஸ்வாதம் போன்ற புறக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். காந்தியே பயன்படுத்திய உவமையைச் சொன்னால், "அப்போதுதான் நீ அது ராமனின் குரலா அல்லது ராவணனின் குரலா என்று அடையாளம் காண முடியும்."இதை அவர் சத்தியத்தின் குரல் என்று சொல்கிறார். அவரது புகழ்பெற்ற மேற்கோள்- சத்தியமே கடவுள்- வெறும் ஒழுக்கவுரையல்ல. அது அவரது அனுபவத்திலிருந்து வளர்கிறது. அவரது சத்திய சோதனைகள் அந்தர்யாமியை அடைகின்றன. சுதந்திர போராட்டம் போன்றவை அவர் செய்த இந்தச் சோதனைகளின் பக்க விளைவுகள் மட்டுமே.

சத்தியம் என்ற சொல்லையும்கூட காந்தியின் சிந்தனை முறைமை புது வகையில் பொருள்படுத்திக் கொண்டது. சத்தியம் என்பது என்ன, என்று நீங்கள் கேட்டுக் கொள்ளும்போது, கேள்வி எளிதாக இருக்கிறது, ஆனால் விடை காண்பது சுலபமல்ல. தர்க்கத்தைக் கொண்டு பதில் காண பல பண்டிதர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். இறுதியில், "சொல்லுக்கும் நிதர்சனத்துக்கும் உள்ள ஒற்றுமையே சத்தியம்,"என்றுதான் சொல்கிறார்கள் (அதாவது, ஒரு ரோஜா சிவப்பாய் இருக்கும் விஷயத்தில் ரோஜாவின் நிறம் சிவப்பு என்பது உண்மையாகிறது). ஆனால் இப்படிப்பட்ட மெய்த்தேடலில் காந்தி ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கினார். உள்ளே பிறக்கும் சொல்லும் அதற்கு துணையாகும் செயல்களும் புறவுலகுடன் இயையும்போது சத்தியம் சாத்தியமாகிறது, ஆனால் காந்தி புறச் செயலையும் அகவுலகுக்கு கொண்டு வந்தார். அப்படிச் செய்யும்போது, அவர் ஒரு புதிய, சமகால புரிதலை பகவத் கீதையின் புகழ்பெற்ற சுலோகத்துக்கு அளிக்கிறார்: "நான் எல்லாருள்ளும் இருக்கிறேன், எல்லாரும் என்னுள் இருக்கிறார்கள்."அகவுலகையும் புறவுலகையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரே சாதனையாய்ப் பிணைக்கும் காரணத்தால் காந்தியை நாம் சிந்தனையாளர், கோட்பாட்டாளர், செயல்பாட்டாளர், அரசியல் தொண்டர், ஆன்மீகவாதி என்று எதிலும் வகைப்படுத்த முடியாது. எனவே, இரட்டைகளைக் கொண்டு இவ்வுலகை அறிந்து, புரிந்து கொள்ளும் நவீன மனங்கள் காந்தியைச் சரியாய் புரிந்து கொள்வதை விட பிழையாய்ப் புரிந்து கொள்கின்றன. இதில் ஆச்சரியமில்லை.

இன்று வாழும் என்னைப் போன்றவர்களுக்கு காந்தி இந்த ஒரு காரணத்துக்காகவே அவசியமாகிறார். எனவே, நான் அந்தர்யாமியை இப்படி வகுத்துக் கொள்கிறேன். இன்றைய சந்தை யுகத்தில் நாம் 'மனம்'என்று நம்புவது நம் மனமல்ல. அது கோட்பாடு, விளம்பரங்கள், நுகர்வுச் சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது. மனதில் ஒரு சிறிது நம்மில் எஞ்சுகிறது என்றாலும்கூட, நம் 'மனதல்லாதவற்றிலிருந்து'அதைப் பிரித்தறியும் ஆற்றலோ கட்டுப்பாடோ நம்மிடம் கிடையாது. எனவே, காந்தி உட்பட மாபெரும் சிந்தனையாளர்கள் அனைவரும், செய்திதாங்கிகளாக, அல்லது போதகர்களாக நம் பார்வையில் காணப்படுகிறார்கள். நம் மனம்- இன்றைய யுக தர்மத்தின் வரையறையின்படி- சந்தைச் சக்திகளால் வடிவமைக்கப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொள்ள சதாகாலம் போராடும்  நுகர்வோர் நாம். நமக்கென்று கட்டித் தரப்பட்டதை நுகரும் திறன் மட்டுமே நமக்குண்டு, நாம் சொந்தமாய்ச் சிந்திக்க மறந்து விட்டோம் என்பதே இக்காலத்தின் வினோத நகைமுரண்

என்னைச் சிந்திக்கச் செய்த திரிதிப் சுஹ்ருத்துக்கு நன்றி.

(கே.வி. அக்சரா கன்னட மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர், நாடகாசிரியர்)

(கட்டுரையை கன்னட மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தவர் தீபா கணேஷ். தமிழாக்கம் ஆங்கில கட்டுரையை ஆதாரமாய்க் கொண்டது)

நன்றி: The Hindu

Image Credit: Teepublic

அகிம்சை நேரடி போராட்டத்தால் 'அனைவரும் மேன்மையடைதல்' - மைக்கேல் கே. ஹனி

$
0
0


"அரசு உருவாக்கிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள நம் அண்டை மக்களுக்கு சேவை செய்வதில் எல்லைகள் கிடையாது. இந்த எல்லைகளை கடவுள் ஒரு போதும் உருவாக்கவில்லை." - மகாத்மா காந்தி

"விதியெனும் ஒற்றைத் துணியின் தப்ப முடியாத பரஸ்பர உறவு இழையில் ஆண்களும் பெண்களும் அனைவரும் பின்னப்பட்டுள்ளனர்."- மார்டின் லூதர் கிங்.

ஹாங்காங்கின் தெருச்சண்டைகள், சிரியாவின் போர்க்களங்கள், ஆசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய அமெரிக்காவின் வெக்கை மிகுந்த அகதி முகாம்கள், "ஒவ்வொரு மலையிலிருந்தும் புற்றிலிருந்தும்"என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்லக்கூடும்- மக்கள் சுதந்திரம் நாடி போராடுகிறார்கள், அதை எப்படி அடைவது என்று அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கான பதில் மகாத்மா காந்திக்கும் கிங்குக்கும் தனியுடைமையல்ல. சில சமயம் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, என்று கிங் சொன்னார், கடந்த கால இயக்கங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.  எனினும், மாற்றத்துக்கான பெருந்திறல் போராட்டத்தை உருவாக்க காந்தியும் கிங்கும் ஒரு விமரிசன, தத்துவ, உத்தி சார்ந்த, வியூக, பாதை வகுத்திருக்கின்றனர்.  அதன் பெயர் அகிம்சை நேரடிப் போராட்டம்.

1869ஆம் ஆண்டு பிறந்த காந்தியின் 150ஆவது ஆண்டு விழா தொடர்பாக, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தின் மத்திய தேதிகளில் பல்வகைப்பட்டவர்கள் சில நூறு பேர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில்  "அனைவரின் மேன்மை: காந்தி, கிங், மற்றும் சுதந்திரமும் நீதியும் கோரி உலகளாவிய போராட்டம்,"என்ற தலைப்பில் நிகழ்ந்த கூடுகையில் சந்தித்துக் கொண்டனர். இதற்கான ஆயத்த முயற்சிகள் மேற்கொண்டவர் 'மார்டின் லூதர் கிங் ஜூனியர் ரிஸர்ச் அண்ட் எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட்டின்'டைரக்டர்  டாக்டர். க்ளேபோர்ன் கார்சன். இக்கூடுகை எம்மை காந்தி-கிங் க்ளோபல் இனிஷியேட்டிவ்வுடன் இணைத்துக் கொண்டது. போர், ஏழ்மை, சூழியல் பிரச்சினைகள், மனித உரிமை மறுப்பு போன்ற விஷயங்களில் காந்திக்கும் கிங்குக்கும் இருந்த பரவலான அக்கறைகள் பேசப்படுவதில்லை. எனவே, எம் கூடுகை அவர்களது முழு படிப்பினைகளையும் வெளிச்சத்துக்கு கொணர முயற்சி செய்தது. கடந்த காலத்தின் அகிம்சை வழி சுதந்திர, நீதி இயக்கங்களின் பாடங்களை ஒருங்கிணைக்கவும் அவற்றை இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

காந்தியின் சந்ததியரான இளா காந்தி, ராஜ்மோகன் காந்தி ஆகியவர்கள் அளித்த பொது நேர்முகங்கள் இக்கூடுகையின் சிறப்பம்சங்கள். ராஜ்மோகன் காந்தியின் கனிவான கைகுலுக்கலும் மென்மையான நடத்தையும் என்னை நேரடியாக மகாத்மாவுடன் இணைத்தது போல் இருந்தது. விவசாயக் கூலிகளைத் திரட்டிய செஸார் ஷாவஸ்சின் சந்ததியர் யுவானிடா ஷாவஸ் மற்றும் அந்தோணி ஷாவஸ் இருவரும் கலிபோர்னியாவில் வாழும் லத்தினோக்களின் வாழ்வை அகிம்சையின் படிப்பினைகள் எவ்வாறு நெறிப்படுத்துகின்றன என்பதைச் சித்தரித்தார்கள். முன் எப்போதையும்விட இப்போது மானுட இனம் "அகிம்சைக்கும் இருப்பின்மைக்கும்"இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தை எதிர்கொள்கிறது என்பதை மார்டின் லூதர் கிங் III நினைவுறுத்தினார். ப்ளோரிடாவில் உள்ள பார்கலாண்ட்டில் நிகழ்ந்த மாணவர் படுகொலையைக் கண்டித்து சென்ற ஆண்டு அமெரிக்க தலைநகரில் நிகழ்ந்த 'மார்ச் ஃபார் அவர் லைவ்ஸ்'பேரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மெய்சிலிர்க்கும் வகையில் உரையாற்றிய ஒன்பது வயது யோலண்டா ரெனீ, அவரது மகள், "எனக்கொரு கனவுண்டு: துப்பாக்கிகள் இல்லாத உலகு அமைய வேண்டும்,"என்றார்.

துப்பாக்கி வன்முறை, இனவாதம், பெண்களை இழிவு செய்யும் மனநிலை, போர், உலகளாவிய சூழியல் பிரச்சினை, மற்றும் பல விஷயங்களை கூடுகையில் பங்கேற்றவர்கள் விவாதித்தனர். கிங்கின் அகிம்சைத் தத்துவம் மற்றும் நடைமுறை அணி திரட்டுதலுடன் நேரடியான இணைப்பை உருவாக்கும் பெருமதிப்புக்குரிய ரெவரண்ட் ஜேம்ஸ் எம். லாஸன், ஜூனியர், பேசும்போது உரையாடல் எழுச்சிகரமாய் அமைந்தது. குடிமை உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், அமைதி இயக்கம், குடியுரிமை பெற்றவர் உரிமைகள், மற்றும் பிற விடுதலை இயக்கங்களில் பங்கேற்றவர்களுக்கு 1950களின் மத்திய காலம் முதல் இன்று வரை லாஸன் அகிம்சை நேரடி போராட்ட பயிற்சி அளித்து வருகிறார், தொண்ணூற்று ஒன்பது வயதான லாஸன். மேலும் கேடு சேர்க்காமல் சமூகத்தை முழுமையாய் திருத்தியமைக்க அகிம்சைப் போராட்டம் மேற்கொண்டாக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். பல தலைமுறைகள் குவிந்த "தீய ஆன்மாக்களின் கலவை"நம் இருப்பையும் நம் கோளின் இருப்பையும் அச்சுறுத்துகிறது என்ற இருட்பிரகடனம் செய்தார் அவர். ஆனால், "செயல்முறை அன்பு,""ஆன்ம சக்தி,""ஆன்ம ஆற்றல்,"இவ்வுலகில் மேலாதிக்கம் செலுத்தும் எதேச்சாதிகார சக்திகளைவிட"அதிக வலிமை கொண்ட சக்தியை"உருவாக்க முடியும் என்பதற்கு காந்தியின் சத்தியாகிரத்திலிருந்து குறிப்பிட்ட சில உதாரணங்களை அளித்தார். களப்பணி அதனளவில் நிறைவற்றது என்றார் அவர். மேலும், படிப்படியாக மக்களை ஒன்று திரட்டும் சட்டகம் இல்லாத காரணத்தால் இயக்கங்கள் தோல்வியடைகின்றன என்றார் லாஸன். காந்தி பத்து இயல்புகளில் கவனம் செலுத்தினார், கிங் ஆறில். லாஸன், அகிம்சை நேரடி போராட்டத்தை நான்கு கூறுகளாய்ச் சுருக்கியிருக்கிறார். ஆழமான, அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களைத் திரட்ட துவங்கும் இயக்கங்கள் ஆரம்பத்தில் உள்ளூரில் சிறிய குழுக்களாய் இருக்கின்றன. இவையே தேசீய இயக்கங்கள் அலையெனத் திரள உதவுகின்றன. "அகிம்சை போராட்டத்தின் ஆயத்தங்கள்,"என்று லாஸன் அழைக்கும் இந்த முதல் படிக்கட்டில், விஷயங்கள் சிந்தித்து புரிந்து கொள்ளப்பட வேண்டும், யார் முடிவெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும், எதிர்த்தரப்பில் இருப்பவர்கள் மறுக்க நினைத்தாலும் ஆமோதிக்கும் வகையில் அதிகாரத்தின் கண்ணிகளை இயக்க அவை அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிலும் குறிப்பாக எப்போதும் அதிக அளவில் ஆயுதங்கள் உள்ளவர்களை எதிர்கொள்ளும்போது அகிம்சை கட்டுப்பாடு மற்றும் தியாகத்தை பெருந்திறள் மக்கள் கடைபிடிக்கும் வகையில் பயிற்சியளிப்பதும் ஆயத்தங்களில் ஒன்று.

தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அமைப்பாளர்கள் நேரடி போராட்டம் குறித்து தெளிவான திட்டம் வைத்திருக்க வேண்டும் என்கிறது லாஸனின் சட்டகம். அளவிடக்கூடிய, அடையக்கூடிய வெற்றிகளை பேச்சுவார்த்தைகளின் வழியே ஈட்டி ஒரு சில ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் வகையில்  போராட்டத்துக்கு முடிவு காணும் உத்தியும் இருக்க வேண்டும். முடிவு குறித்த இலக்கு இல்லாத இயக்கங்கள் தோற்கின்றன. இலக்கை அடையும் வகையில் அகிம்சை சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது. சமாதானமின்றி சமூகங்கள் முன்செல்ல முடியாது. பிறப்பில் நமக்கு அளிக்கப்படும் வாழ்வாற்றலை லாஸன் சுட்டிக் காட்டுகிறார்- "மிகவும் ஆற்றல் வாய்ந்த சக்தியாய்"அகிம்சையை மாற்ற அந்த ஆற்றலே நம்மை வாழ்விக்கும் என்கிறார் அவர். அவரது பார்வை மிகவும் நல்நோக்கம் கொண்டதாகவோ பேதைமையாகவோ தோன்றுகிறது என்றால், வரலாற்றைப் பார்க்கச் சொல்கிறார் அவர்- 'அகிம்சைப் போர்', வெற்றி காண்பதை நாம் உணர்வோம், அடிப்படை காரணிகளுக்கு தீர்வு காணத் தவறுவதால் வன்முறை நிலைத்த மாற்றத்தை உருவாக்க முடியாது, ஆனால் அகிம்சை அதைச் சாதிக்கும்.

அகிம்சைப் போராட்டம் நம்மை நமக்கு முன்னுள்ள தலைமுறைகளிலும் அடுத்து வரும் தலைமுறைகளிலும் மாற்றத்தை உருவாக்கும் மக்களுடன் இணைக்கிறது. களப்பணி வாழ்வில் நிலைத்திருக்கும் வகையில் பிறருடன் தனிப்பட்ட தொடர்புகளை உருவாக்கித் தருகிறது. மரண தண்டனைக்கு எதிராய் போராடும் சிஸ்டர் ஹெலன் ப்ரிஜீன், "பிறருக்கு நீங்கள் உதவி செய்யும்போது, உங்கள் ஐயங்கள் அத்தனையும் கரைந்து போவதைக் காண்பீர்கள்,"என்றார். மத்தியமேற்கு பகுதியிலும், சான் பிரான்சிஸ்கோ பே ஏரியாவிலும் ஏழ்மையில் வாழும், வன்முறையால் அச்சுறுத்தப்படும், கறுப்பர் மற்றும் ப்ரௌன் மக்களிடையே ஒரு மெதடிஸ்ட் மதகுருவாய் பணியாற்றிய அனுபவங்களை லாஸனின் சகோதரர் பிலிப் பகிர்ந்து கொண்டார். ஆபத்தானதாக இருந்தாலும், தன் வாழ்வைப் பிறர் பணிக்கு அர்ப்பணித்தது அர்த்தமுள்ள வாழ்வை அளித்தது என்று உணர்வதாய் அவர் கூறினார். எவ்வழியிலேனும் ஏழைகளுடனும் ஒடுக்கப்பட்டவர்களுடனும் உறவுகளை உருவாக்கிக் கொள்ள வலியுறுத்தினார் அவர். நாம் சாகப் பிறந்தவர்கள், ஆனால், அன்பு செலுத்துதலை அடித்தளமாய்க் கொண்டு  "சாகும் கலை", வாழ்வை முழுமையாய் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதைக் கண்டறிய அனுமதிக்கிறது. "நம் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை,  எனினும், செயல் புரிதலை நோக்கி சரி அல்லது மாட்டேன் என்று சொல்லச் சொல்லி பல்வேறு வழிகளில் வாழ்க்கை அழைப்பு விடுக்கிறது,"என்றார் அவர்.

வாரயிறுதிச் சந்திப்பின் முடிவில் பிரியும்போது, இதற்கெல்லாம் என்ன பொருள் என்று என்னால் தொகுத்துக் கொள்ள இயலவில்லை. ஆனால் பிலிப் லாஸன் விடை பெறும்போது சொன்ன சொற்கள் என் மனதில் எதிரொலித்தன. "உன்னைக் கட்டுப்படுத்தும் விஷயங்களைக் கட்டவிழ்த்து விடு. புது உறவுகளுக்கு திறந்து கொள். ஒவ்வொரு நாளும், "உன்னுள் குமிழிடும் புதுமை"அனுபவமாகட்டும்."

(மைக்கேல் கே. ஹனி, பேராசிரியர், எழுத்தாளர், மற்றும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்)

நன்றி : History News Network

Image Credit : Punch


மகாத்மா குறித்து மௌலானா - ரஜியுத்தின் அகில்

$
0
0


மகாத்மாவை இழந்திருந்த உலகு, காந்தியின் சிந்தனைகளையும் லட்சியங்களையும் உயிர்ப்புடன் காக்கும் வழி தேடிக் கொண்டிருந்தது. மகாத்மாவுக்குத் தக்க நினைவிடம் அமைக்கும் நோக்கத்தில் ஆறு பேர் கொண்ட குழுவொன்று காங்கிரஸ் செயற்குழுவால் அமைக்கப்பட்டது. மகாத்மாவின் செயல்கள் மற்றும் மறக்க முடியாத சாதனைகளால் எதிர்கால தலைமுறையினர் ஊக்கமடையும் வகையில் எழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்பட்டபோதும், ஏதோவொரு குறை இருப்பது தெளிவாகவே தன் மனதில் தெரிகிறது, என்று அந்தக் கூட்டத்தில் மௌலானா கூறினார்,

மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லா வகை எல்லைகளையும் கடந்து மனிதனால் உருவாக்கப்பட்ட மோதல்களுக்கு அப்பால் உயர்ந்து நிற்கும் மகாத்மா காந்தி போன்ற ஆளுமைகள் மிக அபூர்வமாகவே உலக அரங்கில் தோன்றுகின்றனர், என்றார் அவர். உண்மை, அகிம்சை, அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் குறித்து காந்திஜி அளித்த நீதி எதிர்கால தலைமுறையினருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இவையனைத்தும் இவ்வுலகில் அடையக்கூடிய லட்சியங்களே.

பிரிவினைகளுக்கு மானுடமே காரணம், என்றார் மௌலானா, தனித்தனி அடையாளங்களையும் அதுவே உருவாக்கிக் கொண்டது. ஐரோப்பா அல்லது ஆசியா, போன்ற வெவ்வேறு கண்டங்கள், அல்லது, இந்தியா போன்ற வெவ்வேறு தேசங்களில் மனிதர்கள் வாழ்கிறார்கள், அவர்கள் அரபியர்கள் அல்லது ஆப்பிரிக்கர்கள் என்று அடையாளப்படுத்தப் படுகின்றனர். கிறித்தவரை சீக்கியரிடமிருந்தும், முஸ்லிமை இந்துவிடமிருந்து, ஆங்கிலேயரை இந்தியரிடமிருந்தும் சமயம் மற்றும் தேசீய எல்லைகள் பிரிக்கின்றன. அதே போல், மொழி மற்றும் இன வேறுபாடுகளும் மனிதர்களை மோதிக் கொள்ளும் வெவ்வேறு குழுக்களாய் தொகுக்கின்றன.

இந்த எல்லைகள், பெரும்பாலும் இயல்பானவை-  குர்ஆனில் சொல்வது போல்,  leta‘rafu (உருது மொழியில், ta‘rruf), சமூக மற்றும் கலாசார அடையாள வில்லைகளய் இணக்கமாய்க் கூடி வாழ்வதற்கும் அவசியமானவை, என்றார் மௌலானா. இந்த எல்லைகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும்வரை அவை தாங்கிக் கொள்ளும் மாபெரும் தூண்களாய் விளங்குகின்றன. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காகவும் அழிவுச் செயல்களுக்காகவும் இந்த எல்லைகள் தவறாய் பயன்படுத்தப்படும்போது மக்களுக்கு பேரழிவு விளைவிப்பதாய் மாறுகின்றன.

அதன்பின் மௌலானா சமயத்தின் இடம் குறித்து பேசினார். மகத்தான மதங்கள் சீர்திருத்தவே தோன்றியவை, என்றார் அவர், இவ்வுலகை இன்னும் சிறந்த இடமாய் மாற்ற வந்தவை. அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, நீதி, ஆகியவை எல்லா மதங்களிலும் ஆதர்சங்களாய் முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால் வரலாறோ, மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் அரங்கேறிய ரத்தவெள்ளங்கள், இனவொழிப்புகள், மனித படுகொலைகள், மற்றும் பல்வேறு கொடூரங்களுக்கு சாட்சியாய் இருக்கிறது.

அகங்காரம் மற்றும் ஆணவமாகிய பிழையுணர்வுகள் மீண்டும் மீண்டும் தேசங்களையும் இனங்களையும் நாகரீகங்களையும் அழித்திருக்கின்றன என்பதை அவர் நினைவுகூர்ந்தார். இப்படிப்பட்ட போர்க்காலங்களில்தான் மகத்தான ஆளுமைகள் எங்கிருந்தோ தோன்றி, குறுகிய வகையில் வரையறுக்கப்பட்ட உலகுநோக்கையும் பொதுவாய் ஏற்கப்பட்ட கதையாடலையும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். மதவெறியும் தேசீயமும் கண்களைக் கட்டியிருந்தாலும், அற்பத்தனத்துக்கு அப்பால் உயர்ந்தெழும் இத்தகைய ரட்சகர்கள் சமூகத் தளைகளை உடைப்பதை அவற்றால் தடை செய்ய முடியாது.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மௌலானா ஆஸாத், அப்போது ஜவஹர்லால் நேருவும் அவரருகில் அமர்ந்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது (கூடுகையின் ஒலிநகல் பதிவாகியுள்ளது), 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லியில் ஹக்கீம் அஜ்மல் கான் இல்லத்தில் முதல் முறை சந்தித்தது முதல் தனக்கும் காந்திஜிக்கும் உள்ள 28 ஆண்டுகால உறவை நினைவுகூர்ந்தார். ஒரே கூரையின்கீழ் இருவரும் வாழ்ந்திருந்தது போன்ற உறவு அது, என்றார் அவர்.

அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருந்தன என்பதை நினைவுகூர்ந்தார் அவர். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரிட்டனின் போர் முயற்சிகளையும் இந்தியா அந்த யுத்தத்தில் பங்கேற்பதையும் காந்தி கசப்புணர்வுடன் எதிர்த்தார். இருப்பினும், போருக்குப் பின் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டால் அதில் பங்கேற்பதென்று  காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்தது. போர் மற்றும் ரத்தவெள்ளத்தின்  நிழலில் பெறப்பட்ட சுதந்திரத்தை தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் காந்தி தீர்மானமாக இருந்தார்.

ஆனால் மௌலானா ஆஸாத்தும் பண்டிட் ஜவஹர்லால் நேருவும் காங்கிரஸ் செயற்குழு தீர்மானங்களுக்கு எழுத்து வடிவம் அளிக்க வேண்டுமென்று காந்திஜியை அணுகியபோது, தீர்மானங்களுக்கு எப்போதும் எழுத்து வடிவம் அளிக்கும் அவர் காங்கிரஸ் செயற்குழுவில் உள்ள பெரும்பான்மையினர் கருத்துடன் தனக்கு வேறுபாடுகள் இருந்தாலும், தனது தயக்கங்களை மீறி, உடனே அதற்கு சம்மதித்தார். எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இணக்கமான முறையில் பணியாற்றும் அவரது ஆச்ச்சரியப்பட வைக்கும் ஆற்றலை இது அடிக்கோடிடுகிறது, என்றார் மௌலானா.

இது போன்ற தீவிர வேறுபாடுகள் ஏற்பட்ட சமயங்கள் இருந்திருந்தாலும், எங்கள் இதயங்கள் ஒருபோதும் மாறவில்லை, என்று நினைவுகூர்ந்தார் மௌலானா. "எங்கள் கழுத்தை இறுகப் பற்றியிருந்த அவரது மேன்மையின் கயிற்றை எங்களால் ஒருபோதும் அறுத்துக் கொள்ள இயலவில்லை,"என்றார் அவர்.

தானும்கூட உடன் சேர்ந்து பணியாற்ற கடினமானவர்தான் என்றார் மௌலானா ஆஸாத். அதிகாரத்துக்கோ எண்ணங்களுக்கோ அவர் எளிதில் அடிபணிபவரல்ல. அறிவுபூர்வமாய் அவர் மனதை தன்வயப்படுத்தும் அளவு ஆற்றல் வாய்ந்தவையாகவும் வலுவானவையாகவும் இருந்து இறுதியில், அதன் உயர்ந்த சக்தியின் திறனால் அவர் கழுத்தைப் பிடித்து இறுக்கிப் பற்றிக் கொள்வதாய் அவை இருக்க வேண்டும். எனவே முதல் முறை காந்திஜியைச் சந்தித்தபோது அவர் நம்பிக்கையாலோ பக்தியாலோ தன் பார்வை இழக்கவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நெருங்கிப் பழகியபோது காந்திஜியின் இயல்புகள் அவர் முன் மேலோங்கி நின்றன, அவர் மகாத்மாவை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அவரும் பண்டிட் நேருவும் காந்திஜியை நெருக்கமாய் அறிந்திருந்தனர். இருவருமே அவர் வாழ்வு ஒரு திறந்த புத்தகமாய் இருந்ததைக் கண்டு திகைத்தனர். அதன் ஒவ்வொரு பக்கமும் திறந்திருந்தது, ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு எழுத்தும் பிரகாசமாய் ஒளிர்ந்தன. அவர்கள் அறிந்த பொது ஆளுமைகளில் அவரது வாழ்வு மட்டுமே ஒளிவு மறைவற்றிருந்தது, அதில் எந்த ரகசியங்களும் இல்லை.

அவரது பொது ஆளுமையும் அந்தரங்க வாழ்வும் முரண்பாடற்றதாய் இருந்தன. அவர் தன் தனிப்பட்ட காமத்தையும் அரசியல் மோகத்தையும் வெற்றி கண்டவர். சமய, குறுங்குழு மனப்பான்மைகளுக்கு அப்பால் உயர்ந்தெழுந்தவர். கோட்பாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டகங்களுக்கும் அடங்காத அவரை பேராசையோ பொறாமையோ பீடிக்கவில்லை.

மகாத்மா சந்தேகத்துக்கிடமின்றி ஓர் இந்து, இறை நம்பிக்கை கொண்டவர் என்று தீர்மானமாய்ச் சொன்னார் மௌலானா. ஆனால் அவரது இந்து சமயம் குறுகிய வரைமுறைகளுக்கு கட்டுப்பட்டதல்ல. அது விரிந்த தன்மை கொண்டது. பிற சமய நம்பிக்கை கொண்டவர்களை தழுவிக் கொள்வதற்கும் மதிப்பதற்கும் அவர் இந்துவாய் இருந்தது ஒரு தடையாய் இருக்கவில்லை.

பண்டைய இந்து கலாசாரம் மிகவும் பரந்த உள்ளம் கொண்டது என்பதைச் சுட்டினார் ஆஸாத். அத்தனை மதங்கள் மற்றும் நம்பிக்கைகளிலும் இந்து சமயமே ஒற்றைத் தெய்வ வழிபாட்டை, அல்லது ஏகதெய்வ நம்பிக்கையை மிகவும் நெருக்கமாய் கடைபிடித்த ஒன்று. ஆனால் அந்த இந்து மத வடிவம் அருகி விட்டது, என்று வருந்தினார் அவர்.

பண்டைய இந்தியாவில் கிரேக்கர்கள் பிராமணர்கள் போல் நடத்தப்பட்டனர். ஏனெனில், அறிவிலும் அறிவியல் உணர்விலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட தேசம் என்று கிரேக்கம் அறியப்பட்டிருந்தது. ஆனால் அக்காலத்துக்குப் பிந்தைய இந்து சமயம் பிறரை ஏற்றுக் கொள்ளவும் பிறரை தனதாக்கிக் கொள்ளவும் உரிய ஆற்றலையும் இழந்து விட்டது என்று வருந்தினார் மௌலானா. சாஸ்திரத்தால் நியாயப்படுத்தப்பட்டு, வர்ணம், அல்லது சாதி அடிப்படையில் அடுக்கு முறையில் பிரிக்கப்பட்ட, ஒடுக்குமுறைச் சமூக அமைப்பைச் சுட்டிக் காட்டிய ஆஸாத், தீண்டாமை, இறுகிய தன்மை, ஆசாரம் ஆகிய எண்ணங்கள்  இந்து மதத்தை பலவீனப்படுத்தி விட்டன என்று குறிப்பிட்டார் ஆஸாத்.

ஆனால் காந்திஜி முன்னிறுத்திய தரம் உயர்ந்தது என்றார் அவர். அவரது இந்து மதம் அனைவரையும் ஏற்றுக் கொள்வது, உலகளாவியது, சடங்குகளுக்கு கட்டுப்பட்டதல்ல, மானுடம் தழுவியது.

மகாத்மா கொண்டிருந்த லட்சியத்தின் மகத்துவத்தையும் அவரது வாழ்வின் அணைத்துக் கொள்ளும் தத்துவத்தையும் வெளிப்படுத்தத் தவறுகிறது என்றால், அவருக்கு எழுப்பப்படும் எப்படிப்பட்ட நினைவகமும் நிறைவற்றதாகவே இருக்கும் என்பதை வலியுறுத்தி தன் உரையை முடித்துக் கொண்டார் ஆஸாத். பகலவனும் அதன் கதிர்களும் மானுடத்துக்கு ஒளியூட்டுவது போல் காந்திஜியின் அனுபவ உண்மை நமக்கும் விடிவிளக்காகி காழ்ப்பில்லாத வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லலாம்.

(தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு கற்பிக்கிறார் ரஜியுத்தின் அகில். மௌலானா அபுல் கலாம் ஆஸாத் ஆற்றிய உரைகளின் தொகுப்பின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

நன்றி: National Herald

Image Credit: Wikimedia

காந்தி என்ன சொல்வார்? - ஐசாக் பெண்ட்விச்

$
0
0
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் மாதம் இந்தியாவில் சிறுவன் ஒருவன் பிறந்தான். அவன் வரலாற்றின் போக்கை மாற்றுவான், அவனது செய்தி இன்று மேலும் பொருத்தமாக இருக்கிறது. அச்சிறுவனை நாம் மகாத்மா காந்தி என்று அறிகிறோம், அவன் மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மண்டியிட வைத்தவன், மார்டின் லூதர் கிங்கின் அகிம்சை போராட்டத்துக்கு உந்துதல் தந்து உத்வேகம் அளித்தவன், இவ்வகையில் அமெரிக்காவின் லிபரல் அறத்தின் திசைகாட்டியை வடிவமைத்தவன்.

நாம் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்கிறோம். அடிப்படை லிபரல் விழுமியங்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றன. வெறுப்பு, பிரிவினை, பொய்மை, முதலானவை நம் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைக்கின்றன, நம் மக்களாட்சியின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கின்றன. அதைவிட மோசம், இதன் எதிர்மறைச் சிந்தனை ஒரு அலையென நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது, தோல்வியிலிருந்து மீண்டெழும் ஆற்றலை அரித்துச் செல்கிறது, நாம் சிலபோது விரக்தியாலும் குழப்பத்தாலும் கலங்கி நிற்கிறோம். .

அண்மையில் நான் காந்திஜியை சான் பிரான்சிஸ்கோவில் சந்தித்தேன். சரி, அவரது 1998ஆம் ஆண்டுச் சிலையை. ஃபெர்ரி கட்டிடத்தையொட்டியுள்ள படகுத் துறையில், எப்போதும் போல் உற்சாகத்துடன், குறும்புப் புன்னகையில் கண்கள் கொப்பளிக்க 'நடந்து'சென்று கொண்டிருந்தார். இது போல் அவரை எழுபதுக்கும் மேற்பட்ட தேசங்களின் பெருநகர்களில் நீங்கள் 'சந்திக்கக்கூடும்.'அல்லது, என்னைப் போல் நீங்களும் இப்படி கேட்டுக் கொள்ளலாம்: காந்தி என்ன சொல்வார்? ஒல்லியான இந்த மனிதர், எதிர்கொள்ள முடியாத எதிர்ப்பு, பிரிவினை மற்றும் பொய்களைத் தாண்டி வாழ்ந்தவர்- நம் இன்றைய சிக்கலான நிலை பற்றி அவர் என்ன நினைப்பார்? பல லட்சம் பேருக்கு ஊக்கமளித்த, தன்னடக்கமுள்ள இந்த எதிர்-நாயகன்- அவருக்கு எங்கிருந்து ஊக்கம் கிடைத்தது, அது நமக்கு இங்கே, இப்போது, பொருந்துமா?

காந்தியும் கீதையும்

சந்தேகமேயில்லை, காந்தி கீதையை நோக்கிச் சுட்டுவார். அழிவற்ற ஞான மறை, அதுஅவரது ஒளிவிளக்காகவும் அடையாளமாகவும் ஆனது. "என் வாழ்க்கை துன்பம் நிறைந்தது,"என்றார் அவர் ஒரு முறை, "துன்ப அனுபவங்கள் வெளிப்படையான, அழிக்க முடியாத தாக்கத்தை என் மீது ஏற்படுத்தவில்லை என்றால், அதற்கு நான் பகவத் கீதைக்கே கடமைப்பட்டிருக்கிறேன். ஐயங்கள் என்னைச் சூழும்போது, ஏமாற்றங்கள் என் முன் வந்து நிற்கும்போது, தொடுவானில் ஒளியின் ஒரு கதிரும் என் கண்ணில் தென்படாதபோது, நான் கீதையை நோக்கித் திரும்பி எனக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு ஸ்லோகத்தைக் கண்ணுறுகிறேன். உடனே, என்னை அழுத்தும் சோகங்களுக்கிடையே, நான் புன்னகைக்கத் துவங்குகிறேன்."

மகிழ்ச்சி, தியானம், ஆன்மீக அக வளர்ச்சி மற்றும் புத்துயிர்ப்பு பெற உலகின் மிகவும் நம்பத்தகுந்த வழிகாட்டிகளில் ஒன்று கீதை. கீதை அளித்த உந்துதலில், வாழ்வின் புறச் சவால்களை செயல்வழி எதிர்கொள்ளும் அதே வேளை மனத்தைக் கட்டுப்படுத்தும் "அகப் பணியில்"கவனம் குவிக்கவும் காந்தி கற்றுக் கொண்டார். தன் சகாக்களையும் தொண்டர்களையும், "நாம் நம்மை மாற்றிக் கொண்டோமானால், இவ்வுலகின் போக்கும் மாறும்,"என்று விளித்தார். அவ்வழியில், அவரது வாழ்வே அக புத்துயிர்ப்பின் 'பரிசோதனையானது', இந்த அகத்தேடலில் கீதை அவர் நம்பிக்கைக்குரிய கையேடும் வழிகாட்டியுமானது.

கீதை சுலோகம் ஒன்று மிக அழகாகச் சொல்கிறது:



நம் அந்தராத்மாவே சத்தியம்

காந்தி தன் போராட்ட இயக்கத்தை, “சத்தியத்தைப் பற்றிக் கொள்தல்”, சத்தியாகிரகம் என்று அழைத்தார். அவரது பாதை ஒருவன் தன் அந்தராத்மாவுடன் தன்னை இணைத்துக் கொள்வதைக் கொண்டு எதிர்ப்புகளையும் பொய்களையும் வெல்வதாக இருந்தது. எண்ணங்களும் உணர்ச்சிகளும் முடிவில்லாமல் உள்ளத்தில் ஒலிப்பது, அற்ப அகங்காரம், இவற்றுக்கு அப்பால் அகத்தினுள் நிலவும் நிச்சலனம், அதைப் பற்றிக் கொள்ள வேண்டும். இந்த சத்தியத்துடன் எந்த அளவுக்கு நம்மை இணைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடன் பகைமை பாராட்டுபவனை இதயத்தில் எந்தவித பகைமையும் இல்லாமல் எதிர்கொள்ள இயலும். ‘தார்மீக’ கோபத்தையும் நியாயமான குறைகளையும் வெறுமே அடக்கிக் கொண்டிருப்பது அல்ல இது. அதைக் காட்டிலும், பகை பாராட்டுபவனும் குற்றம் சொல்பவனும் ஒருவனே என்ற நம் ஒறுமைப்பாட்டில் உறுதியாய் நிலைத்து நிற்றல். இந்த அந்தரங்க உண்மை, உள்ளிருந்து பிரகாசிக்கும் ஒளி என்கிறது கீதை. இது நம் அறியாமையாகிய இருளை நீக்குவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள உலகுக்கும் ஒளியூட்டுகிறது.



காந்தி இன்று நமக்கென விட்டுச் சென்றது

இன்றைய இக்கட்டான காலகட்டம் நம் கலாசாரத்தில் உள்ள ஆழமான ஏற்றத்தாழ்வுகளை உடனே சரி செய்ய வேண்டுமென்று சுட்டுகிறது. புத்திசாலித்தனமான அறிவியலும் தொழில்நுட்பமும் மானுட இனத்தை மகிழ்விப்பதில்லை, கருணையுள்ளவர்களாய்ச் செய்வதில்லை, சகிப்புத்தன்மையை வளர்ப்பதில்லை, பேராசையைத் தணிப்பதில்லை. நாம் ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டிருந்தாலும் முன் எப்போதும் இல்லாத வகையில் தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றிருந்தாலும் அது நம்மை ஞானத்தின் அருகில் இட்டுச் செல்வதுமில்லை, நம்மை நெருக்கமானவர்களாக ஆக்குவதுமில்லை. நம் சமூகம், நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள்- அவர்களை இயக்கும் ஆதர்சங்களும் அவர்கள் வெளிப்படுத்தும் லட்சியங்கள் நமக்கு ஊக்கம் அளிப்பதாக இல்லை.

நாம் வாழும் சவாலான காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு தனித்தன்மையான பொருத்தம் கொண்ட காந்தியின் நேசத்துக்குரிய கீதை நமக்கு உதவக்கூடியது. நாம் புத்துயிர்ப்பு பெறுவதற்கும் அகவளர்ச்சி அடைவதற்கும் அது ஆற்ற்ல் வாய்ந்த கருவிகள் அளிக்கிற்து. இக்கருவிகள், வாழும் கலையில் அறிவுடைமையுடன் தேர்ச்சி பெற நமக்கு பயிற்சி அளிக்கின்றன. நம் தனி வாழ்விலும் நம் ச்மூகத்தில் நிலவும் சவால்களின் தன்மையை மாற்றி அக வளர்ச்சியடையும் வாய்ப்பு நல்குகின்றன.

இன்று நாம் சவால்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில் கீதையை நோக்கி காந்தி நமக்கு விடுக்கும் அழைப்பு எப்போதும் உள்ளது போல் இப்போதும் நம் உள்ளத்தில் எதிரொலிக்கிறது. “இன்று கீதை என் விவிலியமும் குரானும் மட்டுமல்ல, அவற்றுக்கும் மேலானது- அதுவே என் தாய். நான் துன்பத்தில் இருக்கும்போதும் துயரத்தில் தவிக்கும்போதும் அவளது நெஞ்சத்தில் தஞ்சம் புகுகிறேன்.”

(டாக்டர் பெண்ட்விச் கீதையை ஆங்கிலத்தில் கவிதை நூலாக மொழியாக்கம் செய்துள்ளார். மருத்துவம், மரபணு, இயற்கை பாதுகாப்பு ஆகிய துறைகளில் புரட்சிகரமான மாற்ற்ங்கள் நிகழ காரணமான மூன்று தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கியவர் அவர்.)

நன்றி : https://thriveglobal.com/stories/what-would-gandhi-say/

மகாத்மாவின் போதனைகள் இவ்வுலகுக்கு அவசியம்- தலாய் லாமா, பேட்டியாளர்கள்: எலிஸபெத் ரோஷ், ஷாலினி உமாச்சந்திரன்

$
0
0
(கருணை ஒன்று மட்டுமே மதம் என்று பல பத்தாண்டுகளாக பதினான்காம் தலாய் லாமா கூறி வந்திருக்கிறார். தம்மைக காட்டிலும் பரந்த உலகளாவிய சமூகத்துக்குச் சொந்தமானவர்களாய் மனிதர்கள் தம்மைக் கருதிக் கொள்வார்கள் என்றால், வேறுபாடுகள் விலகி விடும் என்று கூறிவந்திருக்கிறார் அவர்.  காந்தியின் சொற்களும் பௌத்த ஞானிகளின் போதனைகளும் தனக்கு வழிகாட்டியிருப்பதாக அவர் கூறுகிறார். 1989ஆம் ஆண்டு ஆஸ்லோவில் நோபல் பரிசு பெற்றுக் கொள்ளும்போது அந்த விருதை, “மாற்றத்துக்கான அகிம்சை வழி போராட்டத்தின் நவீன மரபை உருவாக்கியவரான மகாத்மா காந்தி, அவரது வாழ்விலிருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன், உந்துவிசை பெற்றுக் கொண்டிருக்கிறேன், அவருக்கே விருதை அர்ப்பணிக்கிறேன்,” என்று அவர் கூறினார். காந்தியின் 150ஆவது ஆண்டு பிறந்த தின நினைவாக, காந்தி இன்றும் முக்கியமானவராக இருப்பது பற்றியும் அவரது அகிம்சை, கருணை பற்றிய எண்ணங்கள் பற்றியும் தலாய் லாமா மிண்ட் தளத்துடன் உரையாடினார்.)




கேள்வி: மகாத்மா காந்தியிடம் நீங்கள் காண்பதில் எது உங்களுக்கு செயலூக்கம் அளிக்கிறது?

தலாய் லாமா: அகிம்சை சிந்தனையின் காரணமாய், அவரே இருபதாம் நூற்றாண்டில் மிகவும் தாக்கம் செலுத்திய நபராக இருந்தார். அகிம்சை, கருணை ஆகியவற்றை உள்ளடக்கிய 3000 ஆண்டு கால இந்திய மரபை அவர் எடுத்துக் கொண்டு, அதை உயிருள்ளதாகவும் சமகால பொருத்தம் உள்ளதாகவும் செய்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் கொண்டு சென்ற காரணத்தால் அதற்கு சமகால முக்கியத்துவம்  அளித்தார். இது அருமையான விஷயம்.

அக்காலத்தில் காந்தியின் அகிம்சை பலவீனத்தின் குறியீடு என்று ஒரு சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், கடினமான சூழலில் முன்னெடுக்கப்படும் அகிம்சை ஒரு வலிமை, அது பலவீனம் அல்ல. எனக்குத் தெரிந்தவரை, நெல்சன் மண்டெலா முழுக்க முழுக்க மகாத்மா காந்தியின் பாதையைப் பின்பற்றினார். மார்ட்டின் லூதர் கிங், ஜூனியரும் அவ்வண்ணமே செய்தார்.

தனிப்பட்ட வகையில், என் குழந்தைப் பருவம் முதலே நாங்கள், “இந்தியாவைச் சேர்ந்த மகாத்மா காந்தி,” என்பதை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு முறை நான் கனவில் மகாத்மா காந்தியைச் சந்தித்திருக்கிறேன் (சிரிக்கிறார்). நாங்கள் பேசிக் கொள்ளவில்லை, அவர் முகம் மட்டும் தோன்றியது. குளிர் காலத்தில் நான் பொடாலா அரண்மனையில் தங்கியிருப்பேன், கோடையில் நோர்புலிங்கா அரண்மனையில் தங்கியிருப்பது வழக்கம். ஒரு முறை, பொடாலாவில் குளிர்காலத்தில், என் கனவில் மகாத்மா காந்தி தோன்றினார். நாம் புகைப்படங்களில் பார்க்கும் காந்தியல்ல, நிஜமான காந்தி (சிரிக்கிறார்).

கேள்வி: காந்திய சிந்தனைகள் மற்றும் அகிம்சையின் இன்றைய இடம் என்ன?

தலாய் லாமா: மிக எளிய பதில் சொல்லி விடலாம். அடிப்படையில் மானுட இயல்பு கருணை கொண்டது என்று பல விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஏனெனில், நாம் சமூக உயிரிகள். பழங்காலத்தில் சமூகம் என்றால் உங்கள் குடும்பம், உங்கள் கிராமம் என்று பொருள்பட்டது. நவீன காலத்தில், முழு உலகுமே சமூகமாகிறது. உலகனைத்தும் ஒரே மனிதச் சமூகம். இப்படி நினைப்பீர்கள் என்றால், அகிம்சை மிகவும் முக்கியமாகிறது. தனி மனிதர்களாக, நம் எதிர்காலமும் நம் வளமையும் உலகளாவியச் சமூகத்தை, அனைத்துச் சமூகங்களையும் சார்ந்திருக்கிறது.

திபெத்தியர்களாகிய நாங்கள் இந்தியாவை எங்கள் புனித அண்டை மக்களாய் கருதுகிறோம். காரணம், புத்த தர்மம் இந்தியாவில் தோன்றியது. விளையாட்டாக நான் இப்படிச் சொல்வதுண்டு, காலம் காலமாக நாங்கள் இந்தியர்களை எங்கள் குரு நிலையில் வைத்திருந்திருக்கிறோம், நாங்கள் சிஷ்ய நிலையில் இருந்தோம். மிகவும் விசுவாசமான சிஷ்யர்கள். குருவின் மண்ணிலேயே, நலந்தா மரபு பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருக்கிறது. அக்காலகட்டங்களில், விசுவாசமான சீடர்களாய், நாங்கள் நலந்தா பாரம்பரியத்தைக் காப்பாற்றியிருக்கிறோம்.

கடந்த காலத்தில், நீங்கள் குருவாய் இருந்தீர்கள், நாங்கள் சீடர்களாய் இருந்தோம். இப்போது நிலைமை மாறியிருக்கிறது என்று நினைக்கிறேன் (சிரிக்கிறார்). நீங்கள் நலந்தா பாரம்பரியத்தை மறந்து விட்டீர்கள், நாங்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இங்கே, புலம் பெயர்ந்த நிலையிலும், எங்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பு இருக்கிறது, இந்த தேசத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சன்னியாச பாரம்பரியத்தை மீண்டும் நிறுவியிருக்கிறோம். இப்போது, நான் எடுத்துக் கொண்டுள்ள சங்கல்பங்களில் ஒன்று, அகிம்சை, கருணை, ஆகிய பண்டைய இந்திய ஞானத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும், என்பது. இதைச் செய்வது பிரார்த்தனைகளால் அல்ல, மனத்தையும் உணர்ச்சிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

கேள்வி: மகாத்மா காந்தி தாக்கம் செலுத்தும் குருவாய் இருந்தார் என்று நினைக்கிறீர்களா, அல்லது ஒரு வினயமான சீடராய் இருந்தாரா?

தலாய் லாமா: முதலாவதாக, அவர் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு கால மரபின் மாணவராய் இருந்தார். அதன் பின், பல பத்து லட்சம் பேர் அவரைப் பின்பற்ற  வந்தார்கள், அவர்கள் மகாத்மா காந்தியை ஒரு குருவெனக் கருதினார்கள்.

கேள்வி: காந்தி தன்னை ஒரு குருவென்று கருதவில்லை, ஒரு சீடராகவே நினைத்துக் கொண்டார் என்பதால்தான் அவரால் தாக்கம் செலுத்த முடிந்தது என்று எண்ணுகிறீர்களா?

தலாய் லாமா: முழுக்க முழுக்க உடன்படுகிறேன். அது உண்மைதான். வெளிப்படையாகச் சொன்னால், என்னையும்கூட பலர் பின்பற்றுகிறார்கள். நான் என்னை ஒரு எளிய புத்த பிட்சுவாகவே நினைத்துக் கொள்கிறேன். உலகில் உள்ள ஏழு பில்லியன் மனிதர்களும் உணர்விலும் உடல் வடிவத்திலும் உளப்பாங்கிலும் ஒத்த இயல்பு  கொண்டவர்கள். இந்த உறுதியான நம்பிக்கை ஏழு பில்லியன் மக்களுடனும் ஒருமைப்பாட்டு உணர்வை உருவாக்குகிறது. சில இந்திய மதகுருக்கள் உட்பட சில லாமாக்கள், தம்மிடம் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் (சிரிக்கிறார்).

மிகையாகப் புகழப்படும் ஆபத்து எனக்கும் இருக்கிறது. அப்போது, “நீ புத்தரைப் பின்பற்றும் எளியவன்,” என்று உனக்கு நீயே சொல்லிக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம். அழிவுத்தன்மை கொண்ட உணர்ச்சிகளுக்கு நீயே அடிமையாகி விட்டால், உன்னால் எப்படி மற்றவர்களுக்கு வழி காட்ட செய்ய முடியும்?

கேள்வி: அப்படியென்றால் குறைகள் உயர்வின் அங்கம் என்று நினைக்கிறீர்களா?

தலாய் லாமா: இது மிகவும் தத்துவார்த்தமான கேள்வி (சிரிக்கிறார்). உங்கள் குறைகளை நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். அப்போது உங்களால் முன்னேற முடியும். சில திபெத்திய லாமாக்களும் இந்திய லாமாக்களும் தங்களை மகத்தான மனிதர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் என்றால், அதைச் சோதித்துப் பார்ப்பது முக்கியம், அவர்களை விமரிசிக்க வேண்டும், அவர்களை கேலி செய்ய வேண்டும். அப்போதும்கூட அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மற்றவர்களுக்கு போதனை செய்வதை உன்மையாகவே பின்பற்றுகிறார்கள், அல்லது வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துகிறார்கள், என்பதை அது காட்டுகிறது.

கேள்வி: இன்று தொழில்நுட்பம் காரணமாய் உலகில் மிக அதிக ஏற்றத்தாழ்வுகளும் கவனக்குலைவுகளும் இருக்கும்போது, அகங்காரமில்லாமல், ஆத்திரப்படாமல், பண்டைய மரபுகளைக் கடைபிடிப்பவர்களாக, எளிய வாழ்வு வாழ முடியுமா?

தலாய் லாமா: நவீன கல்வி மேற்கிலிருந்து வந்தது, பிரிட்டிஷ் அறிமுகப்படுத்தியது. உணர்ச்சிகளால் உருவாகும் சிக்கல்களை தியானத்தைக் கொண்டு எதிர்கொள்வது எப்படி என்பது இதன் வழிமுறையில் இல்லை. நவீன கல்வி பொருள் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, கோபம் வரும்போது, பொறாமைப்படும்போது, அச்சம் எழும்போது, அல்லது, வெறுப்பு கொள்ளும்போது, அதை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. சிந்தனை வழி தியானத்தைக் கொண்டு அழிவுக்கு கொண்டு செல்லும் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தவும் ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகளை வளர்த்தெடுக்கவும் உதவும் பண்டைய அறிவை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்.

நவீன இந்தியாவில் இந்த பண்டைய அறிவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில்  நான் அண்மைக் காலமாக உறுதி பூண்டுள்ளேன். நவீன கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த விஷயங்களையும் மன அமைதியை உருவாக்குவது எப்படி என்ற பண்டைய அறிவையும் ஒருங்கிணைக்கக்கூடிய சக்தி இந்த ஒரு தேசத்துக்கு மட்டுமே உண்டு.

கேள்வி: காந்தி, பண்டைய காலத்துக்கும் நவீன காலத்துக்கும் இடையில் உள்ள இணைப்பாக விளங்குகிறாரா?

தலாய் லாமா: காந்திஜி தன்னை முழுமையாக அகிம்சைக்கு அர்ப்பணித்துக் கொண்டார். ஆனால், மனம் பற்றிய பண்டைய இந்திய கல்வியையும் நவீன கல்வியையும் ஒருங்கிணைக்க அவர் எந்த அளவு உதவினார் என்பது எனக்கு தெரியவில்லை. காந்திஜி மிகவும் யதார்த்தவாதி, இங்கிலாந்தில் படித்தவர். அவர் அகிம்சைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர், ஆனால் கருணை, அதைப் பற்றி எனக்கு தெரியவில்லை.

கேள்வி: மகாத்மா காந்தி பிறந்து 150 ஆண்டுகளுக்குப் பின் அவர் இன்னும் இக்காலத்துக்கு உரியவராக இருக்கிறார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? இளைய தலைமுறை அவரை இந்திய கரன்சி நோட்டுக்களில் மட்டும்தான் பார்க்கிறது...

தலாய் லாமா: (சிரிக்கிறார்) மகாத்மா காந்தியின் போதனைகளும் அகிம்சையின் நடைமுறை பயன்பாடும் இவ்வுலகுக்கு தேவைப்படுகிறது. இவ்வுலகில் உள்ள பல பிரச்சினைகளும் நாமாக உருவாக்கிக் கொண்டவை. நாம் எப்போது ஒரு பிரச்சினையைப் பார்க்கும்போதும் முதலில் நம் வலிமையால் தீர்வு காண முடியுமா என்றுதான் கேட்கிறோம். அது முழுக்கவே தவறானது. வன்முறை நேர்மையான நோக்கங்களுக்காக தெரிவு செய்யப்படலாம், ஆனால் அது தவறான வழிமுறை. வன்முறை பரஸ்பர அழிவுக்கு இட்டுச் செல்வது. மனித வரலாற்றில் ஆயுதம் மிக முக்கியமாக ஆகிவிட்டிருக்கிறது. அது காலாவதியாகிப் போன வழிமுறை. தன்னுடன் நட்பு பாராட்டாத அத்தனை தேசங்களையும் ஒரு தேசம் அழித்துவிட முடியாது. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நாம் அருகருகில்தான் வாழ்ந்தாக வேண்டும்- இதுதான் யதார்த்த உண்மை.

நவீன கல்வி பொருட்செல்வத்துக்குதான் முக்கியத்துவம் அளிக்கிறது. இது போதாது. கோபத்தை எப்படி எதிர்கொள்வது, அச்சத்தை எப்படி சமாளிப்பது- இதெல்லாம் மத விஷயங்கள் அல்ல, இவை மனிதனின் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கேள்விகள். கல்வியென்றால், மன அமைதியும் அதில் இருக்க வேண்டும், மத நம்பிக்கை அடிப்படையில் அல்ல, யதார்த்த அறிவு அடிப்படையில் இக்கல்வி புகட்டப்பட வேண்டும்.

கேள்வி: மகாத்மா காந்தி அகிம்சை போதித்தார். நீங்கள் கருணை போதிக்கிறீர்கள். இரண்டும் எப்படி வேறுபடுகின்றன, அல்லது, ஒன்றுபடுகின்றன?

தலாய் லாமா: அது தெரியவில்லை. நீங்கள்தான் கண்டறிய வேண்டும். ஆனால் சில சமயம், என் பணி மனத் தளத்தில் இருக்கிறது, அவருடையது செயல் தளத்தில் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது (சிரிக்கிறார்). நான் நலந்தா பாரம்பரியத்தின் மாணவன். குழந்தைப் பருவம் முதலே தர்க்கமும் உளவியலும் கற்கிறோம்.

கேள்வி: மகாத்மா காந்தி ஆன்மீக தலைவராய் இருந்ததைவிட அதிகம் அரசியல்வாதியாய் இருந்தார் என்று நினைக்கிறீர்களா?

தலாய் லாமா: இங்கிலாந்திலிருந்து திரும்பியவுடன் காந்தி தென்னாப்பிரிக்காவில் அகிம்சைப் போராட்டத்தை துவக்கினார். இது முழுக்க முழுக்க அறம் மற்றும் ஆன்மீக விஷயம். அதன்பின் அவர் இந்தியா வந்தார். இங்கும் அகிம்சை கடைபிடித்தார். இந்தியாவில் அவர் தன்னை ஓர் இந்தியராய்க் கண்டார், எனவே அதன் தாக்கம் ஓரளவு இருந்திருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் அது முழுக்க முழுக்க கோட்பாடு, தத்துவமாக இருந்தது; அவர் ஓர் ஆன்மீக தலைவராய் இருந்தார்.

நான் எப்போதும் மகாத்மா காந்திஜியைப் பின்பற்றுபவனாகவே என்னைக் கருதிக் கொள்கிறேன். தத்துவத் துறையில், எனக்கு காந்திஜியைவிட அதிகம் தெரிந்திருக்கலாம் (சிரிக்கிறார்). ஏனென்றால், குழந்தைப் பருவம் முதலே நாங்கள் நலந்தா பிரதிகள் கற்கிறோம். அவை குவாண்டம் இயற்பியல் பற்றி பேசுகின்றன. குவாண்டம் இயற்பியல் பற்றி விஞ்ஞானிகளுடன் பேசும்போது, அவர்களை மரியாதையுடன் நடத்துகிறேன், ஆனால் உள்ளூர, அவர்களை விட நானே உண்மை அறிந்தவன் என்று தோ ன்றுகிறது (சிரிக்கிறார்). தோற்றத்துக்கும் நிதர்சனத்துக்கும் உள்ள வேறுபாடுகளை குவாண்டம் இயற்பியல் தெளிவாக விளக்குகிறது. அச்சம், மிகையான பற்று போன்ற அழிவாற்றல் கொண்ட உணர்ச்சிகளைச் சமாளிக்க, நாம் இந்த இடைவெளியைப் புரிந்து கொண்டாக வேண்டும்- எதுவொன்றும் தோற்றத்தில் வெளிப்படும் வகையில் புறவயப்பட்ட உண்மையல்ல, அது முழுக்க முழுக்க காண்போனைச் சார்ந்தது.

கேள்வி: காந்திஜியைப் போலவே நீங்களும் உங்கள் குறிக்கோளை அடைவதில் மாபெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்கள். உங்களால் எப்படி எதிர்காலம் குறித்து நன்னம்பிக்கை கொண்டவராக இருக்க முடிகிறது?

தலாய் லாமா: முதலாவதாக, நான் என்னை ஏழு பில்லியன் மனிதர்களில் ஒருவனாகவே கருதுகிறேன். எனக்கு எந்த வேறுபாடும் தெரியவில்லை. சீனர்கள், திபெத்தியர்கள், இந்தியர்கள், ஐரோப்பியர்கள்... .உணர்ச்சிகளில், உடலளவில், உளரீதியாக, நாமெல்லாரும் ஒருவரே. அந்த தளத்தில், ஏழு பில்லியன் உயிர்களின் மன அமைதியையும் மேம்படுத்துவதுதான் என் கடமை. அவர்களுக்காக கருணை கொண்டிருக்க வேண்டும். இதை உறுதியாக சமய சார்பின்றிச் செய்ய வேண்டும், இது மத அடிப்படையில் அமைந்திருக்கக்கூடாது.

ஒரு பௌத்த பிட்சுவாக என் இரண்டாவது உறுதிப்பாடு, சமய நல்லிணக்கத்தை மேம்படுத்துவது. சமய நல்லிணக்கம் சாத்தியம்தான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இந்தியாவைப் பாருங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மண்ணுக்கு வெளியிலிருந்து வந்த பல சமயங்கள் இந்திய சம்பிரதாயத்தில் வந்த சமயங்களுடன் இணக்கமாக வாழ்ந்து வந்திருக்கின்றன. சிறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு முக்கிய காரணம், அரசியல்வாதிகள் மக்களை ஆட்டுவிப்பதுதான்.  ஆனால், அடிப்படையில், சமய நல்லிணக்கம் மிக நன்றாகவே உயிருடன் இருக்கிறது.

நான் எப்போதுமே திபெத்தியர்களிடம் சொல்வதுண்டு, சீனர்களை நம் எதிரிகளாய் நினைப்பதைவிட அவர்களை சகோதர சகோதரிகளாக வைத்துக் கொள்வ்து நல்லது. எதிரிகளாய் நினைப்பதில் பயனில்லை. தற்காலிகமாய், அடுத்த வீட்டில் இருக்கும் சீனர்களுடன் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனால் அதுவும்கூட கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ஒரு சில தனிமனிதர்கள்தான். எழுபது ஆண்டுகளாக திபெத் விஷயத்தில் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறை நடைமுறைக்கு உதவாது என்று பல சீனத் தலைவர்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள். வன்முறையைப் பயன்படுத்த மிகையான அழுத்தம் அளிக்கப்பட்டது. அதனால் அவர்கள் இப்போது ஒரு இக்கட்டில் சிக்கிக் கொண்டு விட்டார்கள்: திபெத் பிரச்சினையை எப்படி கையாள்வது? என்வே, இப்போது நிலைமை மாறி வருகிறது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் நான் சீனா செல்லும் சாத்தியம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் நான் சுதந்திரத்தை நேசிக்கிறேன், நான் இந்தியாவின் சுதந்திரத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அறுபது ஆண்டுகளாக நான் அனுபவித்து வரும் இந்திய சுதந்திரம் என்னைக் கெடுத்து விட்டது (சிரிக்கிறார்).

கேள்வி: உலகில் உள்ள சச்சரவுகளுக்கும் நாம் வாழும் வகைக்கும் தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

தலாய் லாமா: தன்னை மையப்படுத்திக் கொள்ளும் மனநிலைதான் பிரச்சினைகளின் ஆணிவேர். தர்ம சிந்தையே அதற்கு மாற்று மருந்து. தர்ம சிந்தை பெருகும்போது, தன் மைய மனநிலை குறைகிறது. இந்த மனநிலை கோபம், வெறுப்பு, அச்சம் ஆகியவற்றுக்கு காரணமாகிறது. கருணையை அடிப்படை மனித இயல்பு என்று அறிவியல் கண்டறிந்துள்ளது. நம் அடிப்படை இயல்பு கூடியிருத்தல், மற்றவர்களின் கருணையை பாராட்டுதல், சிரித்தல். காருண்ய வாழ்வு.

கேள்வி: பேட்டியின் துவக்கத்தில் நீங்கள் காந்தியை கனவில் பார்த்தாகச் சொன்னீர்கள். இன்று அவரை நிஜமாகவே சந்திக்க முடியும் என்றால், அவரிடம் நீங்கள் சொல்லும் முதல் விஷயம் எதுவாக இருக்கும்?

தலாய் லாமா: நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன், முதலில் அவர் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும். அதன்பின், .சீனாவை எப்படி கையாள்வது என்பது பற்றி அவருக்குச் சில எண்ணங்கள் இருக்கலாம்

நன்றி: 'Our world is in need of the Mahatma’s teachings: Dalai Lama', Elizabeth Roche, Shalini Umachandran, Livemint

Image Credit: By Cmichel67 - Own work, CC BY-SA 4.0

இந்திய மொழிகளை ஊக்குவித்தார் காந்தி - மிருணால் பாண்டே

$
0
0


1920 ஆம் ஆண்டு வாக்கில் மோகன்தாஸ் கே. காந்தி என்ற மனிதரது முனைப்பினால் ஹிந்தி, குஜராத்தி ஆகிய இரு இந்திய மொழி பிரசுரங்கள் வெளிவந்தபோது, மிகப்பெரிய தாக்கம் கொண்ட பொதுவெளி ஒன்றன் உருவாக்கம் பிரமாதமான ஊக்குவிப்பு பெற்றது என்பதை மிகச் சிலரே அறிந்திருக்கின்றனர். 1919 ஆம் ஆண்டு. தென்னாப்பிரிக்கா வில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்த காந்தி இந்தியா திரும்பியிருந்தார். அவர் சத்தியாகிரக போராட்டம்  துவக்கத் தயாராக இருந்தார். தென்னாப்பிரிக்காவில் ஆங்கில மொழி நாளிதழ்களுடன் நீண்ட, நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் காந்தி. இந்தியாவில், ஆங்கில மொழி வாசிக்கும் வாய்ப்பில்லாத பெருந்திரள் மக்களுடன் உரையாட உள்ளூர் மொழிகளில் பதிப்பிப்பதன் சாதகங்களை காந்தி உணர்ந்தார். ஆங்கிலத்தில் 'யங் இந்தியா, 'குஜராத்தியில் 'நவஜீவன் ,'என்ற இரு இதழ்கள்  துவங்க நேர்ந்த சூழல் பற்றி காந்திஜியின் சுயசரிதை, 'சத்திய சோதனை' 157 ஆம் அத்தியாயத்தில் விவரிக்கிறது.

இந்திய பொதுமக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் சத்தியாகிரக கொள்கையை விளக்க விரும்பினார் காந்தி. எனவே, தான் பொறுப்பேற்றுக் கொண்டு பதிப்பிக்கக்கூடிய பிரசுரங்களைத் தேடினார். உமர் சோபானி , ஷங்கர்லால் பாங்கர், சபர்மதியை சேர்ந்த இந்துலால் யக்நிக் ஆகிய மூன்று நண்பர்கள் ஆங்கிலத்தில் 'யங் இந்தியா'என்ற பத்திரிக்கையையும் குஜராத்தி மொழியில் 'நவஜீவன் ஆனே சத்யா'என்ற மாத இதழையும் காந்திக்கு அளித்தனர். அவற்றை வார இதழ்களாக மாற்றி காந்தி தன் பிரசாரத்தின் இரட்டை வாகனங்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். குஜராத்தி மொழி பத்திரிகையின் பெயர் 'நவஜீவன் ஆனே சத்யா'என்பதிலிருந்து வெறும் 'நவஜீவன்'என்று ஆனது. அந்த ஆண்டே அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் படுகொலையும் நிகழ்ந்தது.

உடனடியாக பஞ்சாப் செல்ல விரும்பினார் காந்திஜி, ஆனால் அவரை தடுத்து நிறுத்தி விட்டார்கள். அசத்தியத்துக்கு எதிராய் அனைவரும் இணைந்து தீவிரமாய் போராடும் வகையில் சத்தியாகிரக பிரசாரத்தை பொதுமக்கள் இடையே துவங்க வேண்டும் என்ற தீர்மானித்த காந்தியின் மனதில் இது உறுதி கூட்டியது. "சத்தியாகிரகத்தின் உட்பொருளை மக்களிடையே விளக்க வேண்டும் என்று எனக்கு ஆவலாதியாக இருந்தது... எனவே இந்த நண்பர்கள் தந்த பரிந்துரையை உடனே ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஆங்கில மொழி ஊடகத்தைக் கொண்டு பொதுமக்களுக்கு சத்தியாகிரக பயிற்சி அளிப்பது எப்படி முடியும்? என் பணி குஜராத்தை பிரதான களமாய்க் கொண்டது. இந்த நண்பர்களின் பண உதவியுடன் இந்துலால் யக்னிக்... நவஜீவன் என்ற குஜராத்தி மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார். அவர்கள் அந்த மாத இதழை என் பொறுப்பில் ஒப்படைத்தார்கள். இது ஒரு வாராந்தரியாக மாற்றப்பட்டது... இருவேறு இடங்களில் இருந்து இரு வார இதழ்கள் பதிப்பிப்பது எனக்கு வசதியாக இருக்காது... நவஜீவன் அகமதாபாத்தில் வெளிவந்த காரணத்தால் என் விருப்பத்துக்கு ஏற்ப யங் இந்தியாவும் அங்கே மாற்றப்பட்டது... அவற்றுக்கு என்று தனி அச்சகம் தேவைப்பட்டது... ஏற்கனவே இருக்கும் அச்சகங்கள்... பதிப்பிக்க தயக்கம் காட்டக்கூடும்... இதை எந்த பிரச்சினையும் இல்லாமல் அகமதாபாத்தில் செய்யலாம்... இந்த பத்திரிக்கைகள் என் மனதில் ஓரளவு அமைதி ஏற்படுத்தின... இந்த இரு பத்திரிகைகளும் சோதனையான காலகட்டத்தில் மக்களுக்கு சிறந்த சேவை செய்தன, சட்டத்தின் சர்வாதிகாரத்தை லகுவாக்க தம்மால் இயன்ற சிறு பணியாற்றின என்று நினைக்கிறேன்,"என்று எழுதுகிறார் காந்தி.

வார இதழான பின் ஓராண்டிலேயே குஜராத்தி 'நவஜீவனி'ன் விற்பனை எண்ணிக்கை 20000 ஐத் தொட்டது என்று எழுதுகிறார் பழம்பெரும் பதிப்பாசிரியர் விஜய்தத் ஸ்ரீதர் (பாரதீய பத்ரிகாரித கோஷ், பக்கம் 625). இதைக் கண்டதும்   இந்திய மொழிகளில் இன்னும் அதிக பிரசுரங்கள் வர வேண்டும் என்ற பாபுவின் எண்ணம் உறுதியானது. எனவே, இரண்டாண்டுகளுக்குப் பின், ஆகஸ்ட் 19, 1921 அன்று ஸ்வதேசி அந்தோலன் வலுவாய் வேரூன்றிய பின், அந்நிய துணிகள் பொது இடங்களில் தீக்கிரையாக்கப்படுகையில், நவஜீவன் முத்ரானாலய அச்சகம் 'நவஜீவனை'இந்தி மொழியிலும் அச்சிடத் துவங்கியது. பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்க ஆற்றல் வாய்ந்த ஊடகங்கள் உதவும் என்பதை காந்தி நிறுவி, அடிக்கோடிட்டதும் இந்திய சுதந்திர போராட்டத்தின் பெருந்தலைவர்கள் பிறர் (திலக், மதன் மோகன் மாளவியா) இந்தி செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் துவக்கி வடக்கு, மற்றும் மத்திய இந்தியாவில் வாழும் பெருந்திரள் மக்களின் ஆதரவைப் பெறத் துவங்கினர். காந்தியின் 'நவஜீவன்'துவக்கம் முதலே போர்க்குரல் எழுப்பியது. பண்டித ராம்தாஸ் கௌர் என்பவர் எழுதிய 'ஹிந்தி ரீடர்'என்ற நூலை தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் பறிமுதல் செய்ய மிகவும் கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்ட வெர்னாகுலர் பிரஸ் ஆக்ட், 1878, பயன்படுத்தப்பட்டது.  இது சட்டத்துக்கு புறம்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று 'நவஜீவன்'இந்த நடவடிக்கையை விமரிசித்தது. ஏப்ரல் 10, 1930, அன்று பாபு நவஜீவன் பத்திரிகையில், "பூரண ஸ்வராஜ்யம் எம் பிறப்புரிமை. மனமாற்றம் நிகழ்ந்தால் மட்டும் போதும், அது சாத்தியப்பட்டு விடும் ,"என்று பொருள்பட அறிவித்தார். காந்தி எழுதிய 'தென்னாபிரிக்காவில்  சத்தியாகிரகம்', 'சத்திய சோதனை,'என்ற இரு புத்தகங்களும் மிக்கப்பெரிய எண்ணிக்கையில் வாசிக்கப்பட்டவை . இவை முதலில் குஜராத்தி மொழியில் 'நவஜீவன்'இதழிலும் பின்னர் 'யங் இந்தியாவிலு'ம் 1925-29 ஆண்டுகளில் தொடராய் வந்தன .  1926-27 ஆகிய இரு ஆண்டுகளில் காந்தி கீதை மீது அளித்த உரைகளும் 'நவஜீவனி'ல் தொடராய் பதிப்பிக்கப்பட்டன. 1930 களின் மத்திய காலகட்டத்தில், பாபு ஏர்வாடா சிறையில் இருக்கும்போது, அவரது பத்திரிகைகளை முடக்க வெர்னாகுலர் பிரஸ் ஆக்ட் பயன்படுத்தப்பட்டது.

நவஜீவன் அச்சகம் அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. 'யங் இந்தியா'வும் ஹிந்தி 'நவஜீவனு'ம் முடக்கப்பட்டன. ஆங்கில, இந்தி, குஜராத்தி பிரசுரங்கள் தொடர்வதை உறுதி செய்து கொள்ளும்படி ஜவஹர்லால் நெருவிடம் காந்தி கேட்டுக் கொண்டார். காந்திஜியால் விரிவடைந்த  பொதுவெளி பிற இந்திய மொழி பதிப்பகங்கள் பிறக்கவும் வளரவும் உந்துவிசை அளித்தது. இந்திய மொழிகள் குறித்து காந்தி கொண்டிருந்த தரிசனத்தை 1930 ஆம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த காந்தியர் பி. எஸ். மூர்த்தி தென்திசையில் கொண்டு சென்றார். அவர் 'நவஜீவன்'என்ற தெலுங்கு பத்திரிக்கையை பிரதி ஓரணா விலைக்கு பதிப்பித்தார், அதன் ஆண்டுச் சந்தா நான்கு ரூபாய் என்றிருந்தது. இந்தப் பத்திரிகைகளை இந்தி பேசப்படும் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் வாசித்தனர். சமூக படிநிலையில் தாழ்ந்த நிலையில் இருந்த மத்திய வர்க்கம் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் மட்டும் வாசித்த ஆங்கில மொழி மைய, தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார வளர்ச்சி காணும், பிற இந்திய மொழிகளை பொருட்படுத்தாத  பத்ரலோகிடமிருந்து மிகவும் மாறுபட்டதாய் இருந்தது. காந்திஜி உருவாக்கிய, ஊக்குவித்த, இந்தி செய்தித்தாள் புரட்சி இந்தியாவின் பேச்சுமொழிகளின் நவீன பத்திரிக்கைத் துறை முதிர்ச்சி பெற்றுவிட்டதன் அடையாளமாக இருந்தது . இதன் விளைவாய், பத்திரிக்கைத்துறை 1920 முதல் 1940 வரை இந்தியாவில் வாழ்ந்த சாதாரண குடிமக்களிடையே   நிலவிய பல்வகைப்பட்ட ரசனைகளுக்கும் கருத்துகளுக்கும் இடம் அளிப்பதாக மாறியது. இது போக, முதல் முறையாய், இந்தி எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளர்களும் தம் பொதுக் குரலையும் தேசீய வாழ்வில் தம் அதிகாரத்தையும் உணரக் காரணமானது.

நன்றி: Gandhi promoted language press, Mrinal Pande, National Herald 

Image Credit: Kanu Gandhi [Public domain], via Wikimedia Commons

காந்தியை நிராகரித்தல் - அடூர் கோபாலகிருஷ்ணன்

$
0
0


இவ்வாண்டு ஜனவரி 30 ஆம் தேதி, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள், சிலர் ஒரு பெண் தலைமையில் காந்திஜியின் பெரிய உருவ கட்-அவுட் ஒன்றின் முன் நின்றனர். அந்தப் பெண் ஏர் பிஸ்டல் வைத்திருந்தாள் . அதை காந்தியின் உருவத்தை நோக்கி நீட்டி, பாயிண்ட்-பிளாங்க் ரேஞ்சில் சுட்டாள். நாதுராம் விநாயக் கோட்சே செய்த நிஜக் கொலையை இது நினைவுபடுத்தியது. அதன் பின், அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வரிசையாய்ச் சுட்டனர். இனி இது ஒரு ஆண்டு நிகழ்வாக இருக்கும் என்று அதன்பின் அறிவிக்கப்பட்டது.

நாடெங்கும் பரவிக் கொண்டிருந்த இந்த நிகழ்வின் நம்புவதற்கே கடினமாக இருக்கும் காணொளித்  தூண்டத்தைப் பார்த்தபோது என் இதயமே உடைந்து விடும் போல் இருந்தது. இந்தக் குற்றவாளிகள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு , தேசப்பிதாவுக்கு இழைத்த இந்த மிக மோசமான அவமரியாதைக்கும் களங்கத்துக்கும் சிறையிடப்படுவார்கள்  என்று என் பேதை மனம் நினைத்தது.

அதன்பின் நாங்கள் சிலர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு செயலகத்தின் முன் கூடினோம். அத்தனை உயிரோட்டத்துடன் படம் பிடிக்கப்பட்டு அனைவரும் பார்க்க வேண்டும் என்று புழக்கத்துக்கு பகிரப்பட்ட எங்கள் சகாக்களின் நன்றியின்மைக்கும் களங்கப்படுத்தும் நாசகார உணர்ச்சி வெளிப்பாட்டுக்கும் பாபுவிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் ஒரு கூட்டம் நடத்தினோம். 

ஆனால் சோகம், இப்படிப்பட்ட தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் தாம் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்பியது தவறு. இதே போன்ற தீவிர நம்பிக்கைகள் கொண்ட மற்றொரு பெண் திகைக்க வைக்கும் வாக்கு வித்தியாசத்தில் லோக் சபா தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

எந்த தேசத்துக்காகப் போராடினாரோ, உயிர் துறந்தாரோ, அங்கு காந்திஜியும் ஒரு நாள் காழ்ப்புக்கும் வெறுப்புக்கும் உரியவராவார் என்பதை யாரும் எதிரபார்த்திருக்க முடியாது. அவரது 150 ஆவது பிறந்த தின  ஆண்டு விழாவையொட்டி உலகெங்கும் அவரது சிலைகள் நகரச் சதுக்கங்களில் நிறுவப்படுகின்றன, சாலைகளுக்கு அவர் பெயர் இடப்படுகின்றன என்ற பின்னணியில் இதைக் காண வேண்டும்.

நம் நினைவாற்றல் அவ்வளவு குறுகியதாய் இருக்கிறதா? காந்திஜியின் ஆன்மீக வழிகாட்டுதல் இல்லாத ஒரு இந்தியாவை நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? அவர் தலைமை தாங்கிப் போராடிய இந்திய சுதந்திர இயக்கத்துக்கு வரலாற்று முன்னோடி எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் ராஜ் போன்ற ஒரு பிரமாண்டமான பேரரசை  எதிர்த்து அகிம்சையையும்  ஒத்துழையாமையையும்  மட்டுமே ஆயுதமாய்  தரித்த காரணத்தால் அவரது போராட்டத்துக்கு ஒரு காவியத்தன்மை உண்டு. சுயமரியாதையும் சிந்திக்கும் திறனும் கொண்ட ஒவ்வொரு இந்தியனின் ஆதரவையும் பங்களிப்பையும் போராட்டத்துக்கு ஆதரவாய் அவரால் திரட்ட முடிந்தது. காலனிய தளைகளிலிருந்து விடுதலை பெறுவது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் பிறப்புரிமை, என்று அவர் பிரகடனம் செய்திருந்தார்.

காந்தி முழுக்க முழுக்க துறவு மனப்பான்மையுடன் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்திருந்ததால் அவர் வாழ்வை கவனித்த யாரும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டு பின்பற்ற விரும்புவதை தவிர்க்க முடியாது. என் வாழ்வே என் செய்தி என்று சொல்வதை அவர் வழக்கமாய் வைத்திருந்தார்- அவரது பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் வேற்றுமை இருந்தது கிடையாது. பிறருடன் பழகத் தயங்கும் ஒருவர் எப்படி தன் தடைகளை மீறினார், தனிமனித விழுமியங்களைக் கடைபிடித்தது எப்படி அவரை கொள்கைகளுக்காக- சமூகத்துக்கும் தேசத்துக்கும்- போராட அஞ்சாத தனி மனிதனாய் வளர்த்தது என்பதற்கு அவரது சுயசரிதை, 'சத்திய சோதனை,'ஒரு அத்தாட்சி.

பகைமைக்கும் வெறுப்புக்கும் அவர் மனதில் இடம் இருந்ததில்லை. பிரிட்டிஷ் உடன் நிகழ்ந்த ஒவ்வொரு மோசமான மோதலிலும், வன்முறையில் நாட்டம் கொண்ட மதவெறியர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டபோதும், அவர் அசத்தியத்தையும் சினத்தையும் நீக்கி தன் மனசாட்சியைச் சுத்திகரித்துக் கொள்ள சத்தியாக்கிரகம் மேற்கொண்டார்.

பக்தி மிக்க  இந்துவான அவர் பிற மதங்களுடன் இணக்கத்துதான் இணைந்திருப்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தார். தான் ஏககாலத்தில் இந்துவாகவும் முஸ்லிமாகவும் கிறித்தவனாகவும் இருப்பதாக அவர் கூறினார். கிறித்தவம், இஸ்லாம் இரு மத போதனைகளையும் அறிந்திருந்தார், அதே போல், இம்மண்ணுக்கு இன்னும்  நெருக்கமான சீக்கியம், சமணம், பௌத்தம் முதலான மதக் கொள்கைகளையும் அறிந்திருந்தார். அவர் சனாதன தர்மத்தின்படி வாழ்வதற்கு இந்த மதங்கள் எதுவும் பகையாய் இருந்ததென அவர் ஒரு போதும் உணர்ந்ததில்லை. காந்தி அடிப்படையில் இந்தியனின் ஆதார உருவம்.

காந்திஜியின் விருப்ப தெய்வம் ராமன். ஆனால், அவருக்கு கிருஷ்ணரின் தாக்கமும் உண்டென்று நினைக்கிறேன். கிருஷ்ணர் தேர்ந்த ராஜதந்திரி , சிக்கலான லௌகீக பிரச்சினைகளை மிகவும் நாசூக்காக தீர்க்கும் ஆற்றல் கொண்டவர். இவ்விரு புராண புருஷர்களின் தனித்தன்மை கொண்ட கலவையே காந்தியின் ஆளுமை. இப்படியில்லாமல் அவரால் பிரிட்டிஷ் உடன் அவ்வளவு நீண்ட காலம் நாம் சுதந்திரம் அடையும்வரை பேச்சுவார்த்தை நடத்தியிருக்க முடியாது. முதல் உலக யுத்தத்தில் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து காந்தி எடுத்த நிலைப்பாட்டை மட்டுமே பார்த்தால் போதும். போர் முடிந்ததும் இந்திய அரசின் விடுதலை கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரிட்டிஷ் காப்பாற்றவில்லை. இதனால் மனம் தளராமல், பேச்சுவார்த்தைகளில் வலிமையான நிலை எடுக்க உதவும் வகையீல்  இரண்டாம் உலக யுத்தத்தில் பெருமளவில் இந்தியர்கள் பங்கேற்பதை அவர் உறுதி செய்தார். இம்முறை போர் முடிந்ததும் பிரிட்டிஷ் இறங்கி வந்தனர், பேச்சுவார்த்தைகள் துவங்கின.

அவருக்கு 'மகாத்மா'என்ற அடைமொழி அளித்தது ரபீந்திரநாத் தாகூர் என்ற மாபெரும் ஆளுமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாந்தி நிகேதன்  சென்றிருந்தபோது காந்திஜி தாகூரை குருதேவ் என்று அழைத்ததற்கு பதிலளிக்கும்போது தாகூர் அவரை மகாத்மா என்று அழைத்தார். அதன் பின் தேசம் முழுவதற்கும் பிற உலகு அனைத்துக்கும் காந்திஜி மகாத்மா ஆனார்.

இந்திய தேசிய காங்கிரஸ்சும் காந்திஜியும், அவரது நெருங்கிய சகாக்கள்- ஜவஹர்லால் நேரு, வல்லப்பாய் படேல், பி. ஆர். அம்பேத்கார், அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், மற்றும் பல தலைவர்களும் ஒவ்வொரு இந்தியன் உள்ளத்திலும் சுதந்திர தாகத்தையும் தியாக மனப்பான்மையையும் விதைத்தனர். அவர்களில் உறுதியானவர், சில சமயம் பிடிவாதம் மிகுந்தவர், காந்திஜி. ஆனால் அவரே மிகவும் மென்மையாக பேசுபவராகவும் பிறரைப் புரிந்து கொள்பராகவும் இருந்தார். தான் இருக்கும் பிராந்தியத்துக்கு ஏற்ப அவர் குஜராத்தி, ஹிந்தி, ஆங்கில மொழிகளில் பேசினார். அவரது மொழி எளிமையாகவும் நேரடியாகவும் இருந்தது, அதன் அழைப்பு எப்போதும் ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தது.

காந்திஜியின் வாழ்வையும் போதனைகளையும் போற்றுபவர்கள் பலர் இருந்தனர் - நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதலிய உலக தலைவர்கள் அவர்களில் அடக்கம். நோபல் பரிசு பெறாதிருந்த போதும்  அவர் பல்வேறு சமயங்கள் மற்றும் பணிகளில் இருந்தவர்களுக்கு  அமைதியும் நல்லிணக்கமும் போதிக்கும் இறைப்பணியாளராக இருந்தார்.

சுதந்திர இந்தியாவில் வேர்ப்பகுதிகளில் துவங்கி அதிகாரம் உயரந்தெழும் வகையில் மக்களாட்சி நிலவிய வேண்டும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார் காந்திஜி.  கிராம பஞ்சாயத்துகள் அவரது கனவு. வாக்காளர்களின் பிரதிநிதிகளாகிய ஆண்களும் பெண்களும் அப்பழுக்கற்ற ஆளுமை கொண்ட தலைவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் மக்கள் பணியில் தம்மை தன்னலமின்றி அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அவர்.

ஒவ்வொரு இந்தியனும் பிறரைச் சாராது தன்னாற்றல் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது அவரது மந்திரமாக இருந்தது. உதாரணத்துக்கு , அவர் பருத்தியிலிருந்து சர்க்கா கொண்டு நூல் நூற்றார், அந்த நூல் நெசவு செய்ய எடுத்துச் செல்லப்படும், அதன் பின் ஆடையாய் தைக்கப்படும். ஒவ்வொரு கிராமமும் தன்னிடத்தில் உள்ளவற்றைக் கொண்டு உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று அவர் நம்பினார். நமக்கு தேவையானவற்றை இயற்கை நமக்கு அளிக்கும், ஆனால் நம் பேராசையை அது நிறைவு செய்ய இயலாது, என்று வலியுறுத்தினார் அவர்.

மகாத்மா காந்தியின் மனிதாபிமான தத்துவம் அழியாதது. அவரது பங்களிப்புகளைப் புறக்கணிப்பது மானுடத்துக்கு நல்லதல்ல, குறிப்பாய், நம் தேசத்துக்கு நல்லதல்ல. இந்தியாவின் இந்த மகத்தான புதல்வன் நாம் கொண்டாடுவதற்கும் பெருமை கொள்வதற்கும் உரியவன், இழிவு செய்வதற்கல்ல.

நன்றி: The Indian Express

Image Credit: Fineartamerica

அரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்

$
0
0



"இந்தியாவின் தேசப்பிதா"என்றும் "பிச்சைக்கார உடை தரித்த மகாத்மா"என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். அரசியல் மாற்றம் குறித்த அவரது அகிம்சை அணுகுமுறை, கிட்டத்தட்ட நூறாண்டு கால பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெற உதவியது. இரும்பு உள்ளம் கொண்ட எளிய மனிதர், அவர் உலகளாவிய எதிர்கால சமூக இயக்கங்களுக்கு ஒரு வரைபடம் அளித்துச் சென்றார். அவரே மகாத்மா காந்தி, நவீன அரசியலில் அதிகம் போற்றப்படும் ஆளுமைகளில் ஒருவராய் இன்றும் நீடிக்கிறார்.

1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத்தில் உயர்குடியில் பிறந்தவர் மோகன்தாஸ் காந்தி. பதின்ம வயதுக்குரிய கலக காலகட்டம் கடந்தபின், சட்டக்கல்வி பெற இந்தியாவை விட்டு லண்டன் சென்றார். கிளம்புவதற்கு முன் அவர், கடுமையான இந்து ஒழுக்கங்களை மீண்டும் கடைபிடிக்கும் வகையில் மது, மாது மற்றும் மாமிசம் விலக்குவேன் என்று தன் அன்னைக்கு உறுதிமொழி அளித்தார்.

1893 ஆம் ஆண்டு, 24 வயதில், புதிதாய் வக்கீல் பட்டம் பெற்ற காந்தி தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நடால் என்ற பிரிட்டிஷ் காலனிக்கு வழக்கறிஞர் பணி செய்யச் சென்றார். நடாலில்  செல்வம் திரளக் காரணமாக இருந்த உழைப்பாளிகள், ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தாயகமாக நடால் இருந்தது. ஆனால், இந்திய பூர்வகுடியினருக்கு எதிராக முறைப்படியும், மறைமுகமாகவும் பாரபட்சம் காட்டும் போக்கை காலனி அரசு ஊக்குவித்தது. ரயில் பெட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும் பொதுச் சாலைகளைப் பயன்படுத்துகையில்  தாக்கப்பட்டப்போதும், சாலை வாகனங்களில் ஐரோப்பிய பயணிகளிடமிருந்து பிரித்து அமர்த்தப்பட்டபோதும் காந்தி அதிர்ச்சியடைந்தார்.

1894 ஆம் ஆண்டு இந்தியர்களின் வாக்குரிமையை நடால் பறித்தது. காந்தி இந்தியர்களின் எதிர்ப்பு போராட்டத்தை வழிநடத்தினார், இந்தியர்களுக்கு எதிரான சட்டங்கள் மீது சட்டமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார், காலனிய அரசுக்கு எதிராய் மாபெரும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். இந்தப் போராட்ட அனுபவங்களினூடே அவர் ஒரு பொது ஆளுமையையும், உண்மை மீது மையம் கொண்ட, அகிம்சை வழி சத்தியாகிரக போராட்ட தத்துவத்தையும் உருவாக்கிக் கொண்டார்

1915 ஆம் ஆண்டு காந்தி இந்தியாவுக்கு சத்தியாகிரகத்தை அறிமுகப்படுத்தினார். விரைவில் அவர் தேசீய காங்கிரஸ் அரசியல் கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். யுனைட்டட் கிங்டம் இந்தியாவுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கத் துவங்கினார். சந்தேகத்துக்குரிய புரட்சியாளர்களை சிறையிடும் முழு அதிகாரத்தை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு  அளித்த 1919 ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிராய் அவர் போராட்டம் துவங்கினார். இந்தப் போராட்டத்தை பிரிட்டன் கொடூரமாக ஒடுக்கியது, அம்ரித்ஸர் படுகொலையில் நானூறு நிராயுதபாணி போராட்டக்காரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இப்போது காந்தி ஹோம் ரூல் கோரிக்கையை இன்னும் கடுமையாய் முன்னெடுத்தார். பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிக்கக் கோரிக்கை விடுத்தார், பெருந்திரள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். உள்ளூர் உப்புக்கு பதில் இறக்குமதி செய்யப்பட்ட பிரிட்டிஷ் உப்பு வாங்க வேண்டும் என்று இந்தியர்களைக் கட்டாயப்படுத்தி . 1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இயற்றிய சட்டத்துக்கு எதிராய் மாபெரும் சத்தியாகிரக போராட்டம் ஒன்றைத் துவங்கினார். குஜராத்தின் மேற்கு கடற்கரையை நோக்கி 241 மைல் நீள நடைப்பயண போராட்டம் மேற்கொண்டு அரபிக் கடலில் அவரும் அவரது சகாக்களும் உப்பு எடுத்தார்கள். இதன் எதிர்வினையாய் பிரிட்டன் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட அமைதியான போராட்டக்காரர்களை சிறையிட்டு, ஹோம் ரூல் கோரிக்கைக்கு இன்னும் பலமான ஆதரவு உருவாக்கித் தந்தது.

இதற்குள் காந்திக்கு ஒரு தேசீய அடையாளம் கிடைத்திருந்தது, பரவலாக மகாத்மா என்று அழைக்கப்பட்டார். உப்புச் சத்தியாகிரகம் காரணமாய் அவர் ஓராண்டு சிறையிடப்பட்டார், முன் எப்போதும் இல்லாத செல்வாக்கு பெற்றார். இதையடுத்து, இந்தியாவின் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கேடிழைக்கும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் மேற்கொண்டார், ஹோம் ரூல் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தோல்வி கண்டார். இதனால் மனம் தளராமல் 'வெள்ளையனே வெளியேறு'போராட்டம் துவக்கினார். இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த  காலத்தில் இந்தியாவை விட்டு பிரிட்டன் தானாக வெளியேற வேண்டும் என்பது இப்போராட்டத்தின் கோரிக்கை. பிரிட்டன் அதை ஏற்கவில்லை, காந்தியை மீண்டுமொரு முறை கைது செய்தது.

இதையடுத்து மாபெரும் போராட்டம் வெடித்தது. ஹோம் ரூல் கோரிக்கைக்காக போராடிய ஒரு லட்சம் பேரை பிரிட்டிஷ் அரசு கைது செய்தபோதும், இறுதியில் இந்திய விடுதலை கோரிக்கை வலுப்பெற்றது. உடல் நலிவடைந்த காந்தி 1944 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இந்திய துணைக்கண்டத்தை விட்டு வெளியேற பிரிட்டன் திட்டமிடத் துவங்கியது. இந்திய பிரிவினையை எதிர்த்த, இந்து முஸ்லிம் பகைமைக்கு தீர்வு காண விரும்பிய, காந்திக்கு பிரிவினையும் 1947 ஆம் ஆண்டின் படுகொலைக் கலவரங்களும் கலந்து எய்திய சுதந்திரம் கசப்பான இனிப்பாய் அமைந்தது.

சுதந்திர இந்தியாவில் காந்தி நீண்ட நாள் வாழவில்லை. ஜனவரி 30, 1948 அன்று ஒரு இந்து அடிப்படைவாதி அவரைச் சுட்டுக் கொன்றார். பத்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

துறவு மனப்பான்மை கொண்டவர், எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர், காந்தி உலகெங்கும் ஒத்துழையாமை இயக்கத்தின் முகத்தை வடிவமைத்தவர். குடிமை இயக்க போராட்ட உத்திகளை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், காந்தியிடம் பெற்றுக் கொண்டார். தலாய் லாமாவும் காந்தியை முன்மாதிரியாய்க் கொண்டார். வன்முறையை நிராகரித்து மாற்றத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்படுபவர்கள் காந்தியின் அகிம்சை போராட்ட அழைப்பை இன்றும் ஏற்கின்றனர்.

காந்தி விட்டுச் சென்ற கொடை இன்றும் பெறுமதி கொண்டதாக நிலவுகிறது என்றாலும் சிலர் காந்தி வழிபாட்டுக்கு உரியவரா என்று கேள்வி எழுப்பவே செய்கின்றனர். முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்த காரணத்தால் சில இந்திய இந்துக்கள் அவரை பிரச்சினைக்குரியவராய் காண்கின்றனர். இந்திய சாதி அமைப்புக்கு எதிராய் அவர் போதுமான அளவு போராடவில்லை என்று வேறு சிலர் ஐயம் கொள்கின்றனர். வெள்ளை மற்றும் கருப்பு தென்னாப்பிரிக்கர்களுக்கு இடையில் இனவாத நிறப்பாகுபாட்டுச் சட்டங்களை ஆதரித்தார், கருப்பு மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் என்று அவர் விமரிசிக்கப்பட்டிருக்கிறார். ஒரு சில வகையில் அவர் பெண் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், கருத்தடையை எதிர்த்தார், தன் பாலுணர்வு சுயக்கட்டுப்பாட்டை சோதிக்க இளம் பெண்களை நிர்வாணமாய் தன்னுடன் உறங்க அழைத்தார்.

மோகன்தாஸ் காந்தி சிக்கலான மனிதர், குறைபட்ட மனிதர். ஆனால் மகாத்மா காந்தி என்ற பொது ஆளுமை இந்திய வரலாற்றிலும் உலகளாவிய சட்டமறுப்பு போராட்டங்களிலும் அழிக்க முடியாத தடம் பதித்திருக்கிறார். "நான் இறந்த பின் எந்த ஒரு தனி மனிதரும் முழுமையாய் என் பிரதிநிதியாக இருக்க முடியாது,"என்றார் அவர். "ஆனால் என்னில் ஒரு பகுதி உங்களில் பலரில் வாழும். ஒவ்வொருவரும் கொள்கைக்கு முன்னுரிமை அளித்து தன்னலத்தை இறுதியில் வைத்தால், வெற்றிடம் பெருமளவு நிரப்பப்படும். "

நன்றி: How Mahatma Gandhi changed political protest, Erin Blakemore, The National Geographic.

Image Credit: M.F. Husain, Architectural Digest

காந்திய பொருப்பாண்மை: ஒரு மறுபார்வை - ரூபீந்தர் ஓபராய்

$
0
0


நவீன முதலியமும் மிகை உலகமயமாக்கமும் ஏற்றத்தாழ்வுகளையும் அரசியல் அடிப்படைவாதத்தையும் அந்நிய வெறுப்பையும் பருவநிலை மாற்றப் பிரச்சினையையும் உலக அளவில் அதிகரித்திருக்கின்றன. நீக்க முடியாத சந்தைப் பிளவுகள் மக்களை இருவேறு தளங்களில் வாழச் செய்திருக்கின்றன- ஒடுக்கப்பட்டவர்கள், வசதியானவர்கள். இது நிலையின்மை, விரோதம் மற்றும் வன்முறைக்கு காரணமாகியிருக்கிறது. ஒழிவற்ற முதலிய பொருளாதார அமைப்பும் எவ்விலை தந்தும் லாபமீட்ட வேண்டுமென்ற தணியாத தேடலும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாத பொருளாதார வளர்ச்சியைச் சுகிக்கக் காரணமாகி  விட்டிருக்கிறது.  இந்தப் பின்னணியில்தான் நாம் காந்திய பொருளாதார, சமூக அமைப்பின் தத்துவத்தையும் பண்பாட்டையும் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் என்று நாம் சொல்வதன் தூய பொருளில் காந்திய பொருளாதார அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது. பல்வகைப்பட்ட சிந்தனைகள் கூடியெழுவது அது. முதலியத்தின் ஒட்டுண்ணித் தன்மை, அதன் சமநிலையற்ற வளர்ச்சி ஆகியவற்றை காந்தி விமரிசித்தார். அவரது பொருளாதார சிந்தனை சில விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, மீபொருண்மை சார்ந்த ஒழுக்க நியதிகளின் அடிப்படையில் அமைந்தது. நவீன சமூக அமைப்பில் பொருளாதார வளர்ச்சி சமதர்ம, நிலைத்த வளர்ச்சியுடன் முரண்படுகிறதா என்ற ஆழமான கேள்வியை அவர் எழுப்புகிறார்.

காந்தியைப் பொறுத்தவரை, வளர்ச்சியடைந்த முதலிய அமைப்பு முழு வேலைவாய்ப்பை அனுமதிக்காது, இதனால் பல்வகைப்பட்ட நிலையின்மையும் தடுமாற்றங்களும் உருவாகும். சிந்தனையின்றி ஒருவரின் தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வது அவனை இடையறாத விழைவுகளின் தொடர் வரிசைக்கு அடிமையாக்குகிறது என்பதை காந்தி வலியுறுத்தினார்.  விழைவுகளைப் பெருக்கிக் கொள்ள வெறி கொண்டு விரைபவர்களில் ஒருவராய் இருப்பவர் தம் உடைமைகள் உண்மையாகவே பெருகும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 1909 ஆம் ஆண்டு அவர் இப்படி எழுதினார்: "மனநிறைவே மகிழ்ச்சி. இதையன்றி வேறு மகிழ்ச்சியை அறிந்தவர் எவர்? வேறு எவ்வகை மகிழ்வும் கானல் நீரே. நாம் எவ்வளவு நெருங்குகிறோமோ, அவ்வளவு விலகிச் செல்கிறது."

பொருளாதார நீதி, அல்லது, சமத்துவம் என்ற சிந்தனையிலிருந்து பொருப்பாண்மை கோட்பாடு வளர்கிறது. ஒரு பொருளாதார முறை என்ற அளவில் பொருப்பாண்மை பொருப்புணர்வை உணர்த்துகிறது . தனி மனித தொழில் முனைப்பையும் அறத்தையொட்டி வாழ்வதையும் ஒரே பொருளாதாரச் சரட்டில், தொழிலையும் சமூகத்தையும் இணைத்து, அது பிணைக்க முற்படுகிறது.  எல்லா செல்வங்களும் வளங்களும் சமூகம் முழுமையின் சார்பாக  'பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவை'என்று நம்பினார் காந்தி.  மானுடமனைத்துக்கும் நன்மை பயக்கும்போது மட்டுமே உடமை பொருளுடையது என்ற பார்வை கொண்டிருந்தார் அவர். பொருப்பாண்மை என்ற காந்திய சிந்தனை சமூக அமைப்பில் தொழில்துறையின் பொறுப்பு என்ன என்பது குறித்த முக்கியமான இந்திய பரிசீலனையாகும்.

முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாக தொழில்துறை உறுதி செய்வதன் அடிப்படையில் அமைந்த தொழில் அறத்தின் சான்றே பொருப்பாண்மை. 'உலகுக்கு இந்தியா அளித்த கோடை'பொருப்பாண்மை என்றார் காந்தி. மனிதர்களின் தார்மீக நியாயவுணர்வில் காந்தி கொண்டிருந்த கலப்படமற்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. பொருப்பாண்மை பகற்கனவல்ல. தாம் உறுப்பினர்களாய் உள்ள சமூகத்துக்கு உறுதியளித்த வகையில் அறத்தைப்  பாதுகாக்க மக்கள் முனைவார்கள் எனில் இந்த முயற்சி வெற்றி காணும். வளர்ச்சியில் தன் பங்கினை ஆற்ற தொழில்துறை முன்வருவதில் அது தன் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது என்பதன் அத்தாட்சி இது.

அபரிக்கிரகம், அகிம்சை போன்ற ஆதர்சங்கள் பொருப்பாண்மை என்ற சிந்தனையின் அடிப்படை என்பதில் சந்தேகமில்லை. எதற்கும் சொந்தம் பாராட்டாதிருத்தல், உடைமைகளுக்கு உரிமை கோராதிருத்தல், ஒருவனைப் பந்தப்படுத்தும் உடமைகளின் பருண்ம முதல் நுட்படித் தளைகளிலிருந்து விடுதலை அடைதல்  என்ற அற ஆதர்சம் அபரிக்கிரகம். இந்திய தத்துவத்தின் இரு மிக மறைதன்மை கொண்ட அடிப்படைக் கூறுகளுகளை சமநிலைப்படுத்தும் இணைப்பை காந்தி பகவத் கீதையில் கண்டு கொண்டார்: நிவ்ருத்தி (துறவு வழி தியான மார்க்கம்), ப்ரவருத்தி (வினையூக்கம் கொண்ட வாழ்வு). அக ஸ்மரணையும் சமூக வினையாற்றலும் கீதையில் இணைந்திருப்பதை காந்தி உணர்ந்தார். இதுவே, "தியானத்துடன் கூடிய வினை"என்ற அவருக்கே உரிய வாழ்வு அணுகுமுறையின் பாணியாயிற்று.

இது கீதையின் அற, சமூக தத்துவம். இதனை காந்தி, பற்றின்மையின் பாதை என்று பொருள்பட, அனாசக்தி யோகம் என்று அழைத்தார். இக்கொள்கையை கடைபிடிக்க காந்தி அபரிக்கிரகம் என்ற நெறியை பின்பற்றினார். பிரதான யோக நூலான பதஞ்சலி யோக சூத்திரத்தில் இது இடம் பெறுகிறது. நியாயமாக நடந்து கொள்வதையும் பொருளாதார செயல்திறனை வளர்க்கவும் குறைந்த அளவு சொத்து சேர்ப்பதை காந்தி ஊக்குவித்தார். எதுவொன்றும், "உண்மையில், தேவைதானா,"என்று கேள்வி எழுப்பி தனி மனித மனசாட்சியைத் தூண்டினார்.

இது காந்தியின் எழுத்தில் தெளிவாக வெளிப்படுகிறது: "எனவே இந்தியாவின் முன் தியாகம் என்று பழம்பெரும் விதியை முன்வைக்க துணிந்துள்ளேன். சத்தியாக்கிரகம், மற்றும் அதில் விளைந்த ஒத்துழையாமை மற்றும் குடிமைப் போராட்டம், என்றனைத்தும் துன்புறுதல் எனும் விதியின் புதுப் பெயர்களே."உடமை வகுப்பினரை நோக்கி சீரான வளப் பகிர்தலுக்கான கோரிக்கை எழுப்புவதைக் கொண்டு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் தோன்றிய தரிசனத் தன்மை கொண்ட தத்துவமே பொருப்பாண்மை.

வழக்கமான தாராள மனப்பான்மையின் அடிப்படை கோட்பாட்டினது  முக்கியத்துவத்தை காந்தி அறிந்திருந்தார். ஆனால், சமூக-பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதன் வடிவத்தை திருத்தி அமைக்க அவர் முயற்சி செய்தார். ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலுள்ள உறவை படைப்பூக்கத் தன்மையுடன் வெளிப்படுத்தும் முயற்சி இது. ஆக, பொருப்பாண்மை பிறர் மனதை மாற்றும் கோட்பாடு. நிறுவன சமூக பொறுப்பின் அடிப்படைகள் இதில் உண்டு. ஏனெனில், பணக்காரர்கள் மனசாட்சி கொண்டவர்கள் என்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. நிறுவனம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, அதற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் சரி, இந்த நம்பிக்கை நிறுவன சமூக பொறுப்புக்கு முக்கியமாகும். காந்திய பொருளாதார வடிவம் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய சமூக அமைப்பை உருவாக்க உதவும் உறுதியான கருவியாகும்.

நன்றி : Revisiting Gandhian Trusteeship, Roopinder Oberoi, The Millenium Post

ஒளிப்பட உதவி - mkgandhi.org

ஹிந்த் ஸ்வராஜ், தகர்ந்த காந்தியின் கனவு - நசிகேத தேசாய்.

$
0
0


காந்தியின் வாழ்வின் கடைசி கட்டம் அவரது உறுதியான இயல்புக்கு ஏற்பட்ட இறுதி சோதனை போல் இருந்தது. புறப்பரப்பில் அவர் முழுமையாக தோற்று  விட்டது போல் தெரிந்தது, ஆனால் அவர் அகச் சமநிலை பேணுவதில்  நூறு சதவிகிதம் வெற்றி கண்டார்.

ஆகஸ்டு 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் தேசம் இரண்டாய் பிரிக்கப்பட்டது. பிளவுண்ட தேசத்தின் ஒரு பகுதியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தது. பிளவுண்ட பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் ஆட்சிக்கு வந்தது.

காந்தியின் கனவு கிட்டத்தட்ட முழுமையாக நொறுங்கிப் போனது. தேச ஒற்றுமையைக் காப்பாற்ற முடியவில்லை. பிளவுண்ட இரு தேசங்களுக்கும் இடையே சமாதானமில்லை. இந்தியாவின் மிகப் பெரிய அமைப்பு, இந்திய தேசீய காங்கிரஸ், தேச விடுதலை போராட்டத்தில் தலைமை தாங்கி வெற்றி பெறச் செய்த அமைப்பு, மக்களை ஆள வேண்டும் என்றுதான் விரும்பியதே தவிர மக்களுக்காக உழைக்கும் எண்ணம் அதற்கு ஒரு சிறிதும் இல்லை.

ஆனாலும் ஆன்மீக சாதகராய் காந்தி, தானறிந்த உண்மையில் இறுதி வரை உறுதியாய் இருந்தார், அன்பை நிலைநாட்ட முயன்று அவர் தன் உயிரையும் துறந்தார்.

தேசீய அளவில் பரவிய வன்முறையை ஆயுதமின்றி  எதிர்கொள்ளக்கூடிய அமைதிப் படையை அவரால் நிறுவ முடியவில்லை. தேசீய புனருத்தாரணப் பணிகள் ஆற்றும் நோக்கத்தில் அவர் அமைத்த பல்வேறு அமைப்புகள், சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டுமென்ற அவரது அறிவுரையைப் பின்பற்றவில்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு வாழ்விலும் தாழ்விலும் ஆதரவாய் இருந்த அவரது நெருங்கிய சகாக்கள் இப்போது அவரைக் கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் காந்தி மூன்று விஷயங்களில் உறுதியாய் இருந்தார் - தன் வாழ்வின் போக்கை இறைவனின் கரங்களில் ஒப்படைத்து விட்டவர், இரு தேச மக்களின் நலனையும் விரும்பினார், உண்மையின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார், ஓயாது உழைத்தார். 

தேசம் பிளவுபட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்தன. அதற்கு யார் முக்கியமான காரணம் என்ற கேள்விக்கு பல விடைகள் இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையை மறுக்க முடியாது- பிரிவினைக்கு ஏற்ற சூழ்நிலையை நாமேதான் உருவாக்கிக் கொண்டோம்.

இந்தியர்கள் வாழும் இடம் தவிர வேறு எங்கும் சாதி போன்ற ஓர் அமைப்பை நம்மால் காண முடியாது. பாகிஸ்தானுக்கும் வங்க தேசத்துக்கும் மட்டுமல்ல, மொரிஷியஸ், சுரினாம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மற்றும் இந்தியர்கள் குடியேறிய பல்வேறு தேசங்களுக்கும் நாம் நம்மோடு சாதி அமைப்பையும் கொண்டு சென்றோம்.

சாதிய அமைப்பு மனிதர்களிடையே வேற்றுமைகளை உருவாக்கிற்று. அதன் காரணமாய் மேலோர் கீழோர் என்ற உணர்வுகள் தோன்றின. வெவ்வேறு அளவில் தீண்டாமை என்றும் சமூக கேடு நிலவவும் அது காரணமானது. நம் சமூகத்தில் மதவாதம் புகுந்தபோது, பிளவுபடுத்தும் சக்திகள் மேலும் வெற்றி பெற்றன.

பிரிட்டிஷ் வரும்போது, நம் தேசத்தில் சாதியமும் மதவாதமும் உறுதியாய் வேரூன்றியிருந்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செழிக்க இது வளமான மண்ணானது.

பிரிட்டிஷார் முதலில் வணிகம் செய்யவும் பிறகு ஆட்சி செய்யவும் வந்தார்கள். இங்கு குடியேற அவர்கள் இந்தியாவை தம் மண்ணாய் கருதவில்லை. இங்கிருக்கும் செல்வத்தைத் திரட்டி ஏழ்கடல்களுக்கு அப்பால் உள்ள தம் இல்லங்களுக்கு கொண்டு சென்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் புகழ் பெற்ற கொள்கை, "பிரித்தாளும் சூழ்ச்சி". நம் தேசத்தை ஆள பிரிட்டிஷாருக்கு வசதியாக இருந்தது. அதற்குரிய சூழலை நம் சாதீயமும் மதவாதமும் உருவாக்கித் தந்தன.

இந்துக்களும் முஸ்லிம்களும் பல நூறாண்டுகளாக ஒன்று சேர்ந்திருந்த காலகட்டத்தில் மத வன்முறை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பிரிட்டிஷார் வந்த பின்னரே அப்படிப்பட்ட வன்முறைகள் நிகழத் துவங்கின. வன்முறை மோதல்களும் போர்களும் இருந்திருக்கின்றன, ஆனால் இவை மதவாத வன்முறையல்ல. இந்து அரசர்களும் முஸ்லிம் அரசர்களும் போரிட்டிருக்கின்றனர். ஆனால் இரு படைகளிலும் இந்து, முஸ்லிம் வீரர்கள் இருந்ததால் அதை மதவாத வன்முறை என்று சொல்ல முடியாது. 

பிரிட்டிஷார் வந்தபின் அவர்களுக்கு எதிராய் தேசீய அளவில் நிகழ்ந்த முதல் வன்முறை எதிர்ப்பு 1857 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இந்திய மக்கள் அதை, 'விடுதலை போராட்டம்,'என்று அழைத்தனர், பிரிட்டிஷார் அதை, 'கலகம்'என்றழைத்தனர்.

1857 ஆம் ஆண்டின் சுதந்திரப் போராட்டத்தில் அரசுக் குடியினரும் சிப்பாய்களுமே பங்கேற்றனர். ஆனால் இந்திய தலைவர்களிடையே தேசீய உணர்வு தோன்ற அது காரணமாக இருந்தது. அதன்பின் திட்டமிட்ட வகையில் "பிரித்தாளும்"கொள்கை கொண்டு இந்திய மக்களை அணுகுவது என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

உலகின் ஐந்து கண்டங்களிலும் ஆட்சி புரிந்த இங்கிலாந்தின் மகுடத்தில் மணிமுடியாய்த் திகழ்ந்தது இந்தியா. இங்கிலாந்தின் ஒட்டுமொத்த வளத்தின் அடிப்படையில் இந்தியாவில் கொள்ளையடித்த செல்வம் உள்ளது. அதன் ராணுவத்தின் பெரும்பகுதி இந்தியர்களைக் கொண்டது.

'பிரித்தாளும் கொள்கை'அவர்களின் நீண்ட கால செயல்திட்டத்தின் முக்கியமான அங்கமாய் இருந்தது. ஒரு வகையில், இரண்டு பூனைகளும் ஒரு குரங்கும் கதை போன்றது இது. 1857 முதல் 1947 வரை 90 ஆண்டுகள் அவர்கள் கூச்சமின்றி இந்த அணுகுமுறையைக் கையாண்டனர். 1857 சுதந்திரப் போரில் இந்து அரசர்களும் முஸ்லிம் அரசர்களும் இணைந்து தோளோடு தோள் நின்று போரிட்டிருந்தார்கள்.

ஆனால் தில்லியில் முஸ்லிம் பேரரசர் ஆட்சி புரிந்ததால், இந்தியர்கள் வெற்றி பெற்றால், முஸ்லிம் பேரரசர் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலுவான நிலை அடைவார் என்று பிரிட்டிஷார் நினைத்தார்கள். எனவே, இந்துக்களுக்கு சாதகமாகவும் முஸ்லிம்களுக்கு பாதகமாகவும் நடந்து கொள்ளும் ஏகாதிபத்திய விளையாட்டு துவங்கியது. முதலில் பாரசீக மொழி மீது தாக்குதல் துவங்கியது. முகலாய ஆட்சியில் அதுவே ஆட்சி மொழியாய் இருந்தது. சட்டமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பாரசீக மொழியின் இடத்தை ஆங்கிலம் கைப்பற்றியது.

1857 க்குப் பின் முப்பது ஆண்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சலுகை இந்துக்களுக்கு கிடைத்தது. 1885 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி துவங்கியதில் கூட பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு. எனினும், அதன் நிர்வாக அமைப்பு மேம்பட்டபோது, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காங்கிரஸ் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொண்டனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் துவங்கப்பட்டவுடன் அலிகார் முஸ்லிம் கல்லூரியும் துவங்கியது, பின்னர் அதற்கு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்ற உயர்நிலை அளிக்கப்பட்டது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக நிர்வாகத்தில் பிரிட்டிஷ் ரிஜிஸ்ட்ரார்கள் மிகவும் முக்கியமான பங்கு வகித்தனர்.

விரைவில், முஸ்லிம் அரசியலின் மையமாய் அலிகார் உருவானது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் ரிஜிஸ்ட்ரார் அளித்த தூண்டுதல் காரணமாகவே முஸ்லிம் குழுவினர் சிலர் வைஸ்ராயைச் சந்தித்தனர், அவர் அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு வெகு தொலைவில்  இருந்த டாக்காவில் முஸ்லிம் லீக் துவக்கப்பட்டது.

லீக்கை, கோகோநாடா காங்கிரஸ் மாநாட்டில் மவுலானா முகமது அலி, "கைப்பாவைகள்"என்று அழைத்தபோது அவர் இதையே சுட்டினார். இப்போது, 1906 ஆம் ஆண்டில், காங்கிரஸ் இந்தியர்களின் உரிமைகள் பற்றி பேசத் துவங்கியதும், அதைச் சமாளிக்க முஸ்லிம் லீக் துவக்கப்பட்டது.

இதே காலகட்டத்தில், 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மோர்லி திட்டத்தின் ஒரு பகுதியாக, முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் தனி வாக்குரிமை அளிக்கப்பட்டது. தேசத்தின் இரு பெரும் சமயங்களை பிரிக்க மேற்கொள்ளப்பட்ட  முதல் சதித்திட்டம் இது. முதலில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று போலவே கோரிக்கை எழுப்பினார். இரு அமைப்புகளின் வருடாந்தர கூட்டங்களும் ஒரே நகரங்களில் கிட்டத்தட்ட அடுத்தடுத்த தினங்கள் நிகழ்ந்தன. அவற்றின் தலைவர்கள் இரு அமைப்புகளிலும் உரையாற்ற இது வசதியாக இருந்தது. அது வரை இரு அமைப்புகளுமே இரட்டை அங்கத்தினர்களை அனுமதித்தன.

1905 ஆம் ஆண்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வேற்றுமையை உருவாக்கும் நோக்கத்தில் வங்கம் கிழக்கு மேற்காய் பிரிக்கப்பட்டது. ஆனால் இந்த முயற்சி எதிர்மறை விளைவு தந்தது. பிரிவினைக்கு எதிராய் மாபெரும் போராட்டம் வெடித்தது. இரு மதத்தினரும் ஒன்றுபட்டு இந்த முயற்சியை தோற்கடித்தார்கள்.

இந்த இயக்கத்தின் காரணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஸர் சையத் அகமது, இக்பால் போன்ற தலைவர்கள் இந்துஸ்தானில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களே என்று பிரகடனம் செய்தார்கள். மான்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் 1918 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டபோதுகூட, உள்ளாட்சி தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனி வாக்குரிமை அளித்து பிரித்தாளும் கொள்கையை நிரந்தரமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1914 முதல் 1924 வரை தொடர்ந்த கிலாபத் போராட்டத்தின்போது இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை கண்கூடாய் தெரிந்தது. அரை மனதாய் இருந்தது என்றாலும், காந்திஜியும் அலி சகோதரர்களும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளில் இந்த ஒற்றுமை உருவானது.

பிரித்தாளும் கொள்கை பெற்ற வெற்றியால் திருப்தியடைந்த இந்திய துறை அமைச்சர் ஸர் சாமுவேல் ஹோர் 2.10.1931 அன்று, இரண்டாம் வட்ட மேஜை மாநாடு நிகழும் தருவாயில் இப்படி எழுதினார்: "சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது பிரதிநிதிகள் இவ்வாண்டு இன்னும் தீவிரமான முரண் நிலைகளுக்கு நகர்ந்திருக்கிறார்கள். சிறுபான்மையினர் கமிட்டியில் மதப்பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் மிகக் குறைவு என்றே நம்புகிறேன்."

1937 தேர்தல்களுக்குப் பின் இந்த இடைவெளி மிகத் தீவிரமானது. அதிகாரத்தை கைப்பற்றும் தொலைதூர சாத்தியமும்கூட இந்த இடைவெளி உருவாக்குவதில் வெற்றி கண்டது. 1947 ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர தேசங்கள் ஆனபோது ஒன்றுபட்ட இந்திய தேசாப்பிதா என்று அறியப்பட்ட மகாத்மா காந்தி தான் ஓரம் கட்டப்பட்டு விட்டதை உணர்ந்தார். ஜனவரி 30 அன்று இந்து மதவெறியன் ஒருவனின் தோட்டாக்களுக்கு பலியாகும் கடைசி கணம் வரை அவர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

நன்றி: The Leaflet

ஒளிப்பட உதவி - Outlook

மூதைப் பெண்ணியவாதி - மகாத்மா காந்தியும் இந்தியாவின் சமத்துவச் சோதனைகளும் - பாரவி தாஸோன்

$
0
0


"பெண் வலுவற்றவள் என்று சொல்வது அவதூறு, அது பெண்ணுக்கு ஆண் இழைக்கும் அநீதி. வலிமை என்பதன் பொருள் மூர்க்க பலம் என்றால், ஆம், பெண்ணின் மூர்க்கத்தனம் ஆணைவிடக் குறைவுதான்,"என்றார் மோகன்தாஸ்  கரம்சந்த் காந்தி, பாபு என்று அதைவிட அதிகம் அழைக்கப்பட்டவர், இந்தியாவின் சுதந்திரப் போராட்டப் பாதையை வடிவமைத்தவர் என்று அறியப்படுபவர். ஆண் பெண் வெறுபாடுகளைக் களைய அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள்  19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு மத்திய வர்க்க பெண்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாகக் காரணமாயின. 

இந்திய சமூக வாழ்வும் அரசியல் வாழ்வும் எப்போதும் ஆண்மையுடனும் ஆண் முதன்மையுடனும் இணைத்து புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிகாரப் போராட்டம், அடக்குமுறை, பேராசை, ஆதிக்கம், ரத்தம் சிந்துதல், எல்லாவற்றுக்கும் மேல், வன்முறை, பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் பெண்கள் பங்கேற்பதை தடுத்து வந்திருக்கிறது. எஸ். ஆர். பக்ஷி, "காந்தியும் பெண் நிலையும்"என்ற புத்தகத்தில், காந்தி பெண்களுக்கு விழிப்புணர்வு அளிக்க முனைந்தார் என்று எழுதுகிறார். அவர்கள் உள்ளத்தில் தேசபக்தியைத் தூண்டவும் பிரிட்டிஷ் ராஜுக்கு எதிராக ஆணோடு தோளோடு தோள் நின்று போராடவும் தேசீய அரசியல் இயக்கத்தில் பங்கேற்கவும் தூண்டினார் என்று எழுதுகிறார்.

1869 ஆம் ஆண்டு பிறந்த காந்தி, 1893 ஆம் ஆண்டு வழக்குரைஞர் பணியாற்றும் நோக்கத்துடன் தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு அவர் நிற வேற்றுமை கொள்கையால் பாதிக்கப்பட்டார். காழ்ப்புக்கு எதிரான தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தி 1896 ஆம் ஆண்டில் தன்னை ஒரு தென்னாப்பிரிக்க அரசியல் தலைவராய் நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். அதே ஆண்டு, அவர் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களுக்கு ஆதரவான கண்டன  ஆர்ப்பாட்டம் துவங்க ஆதரவு திரட்டும் நோக்கத்துடன் இந்தியா வந்தார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் காந்தி இந்தியா நெடுக பயணம் செய்தார். கல்கத்தாவில் நடந்த இந்திய தேசீய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார், பம்பாயில் தன் சட்ட அலுவலகத்தைத் துவக்கினார்.

இக்காலகட்டத்தில் பிரிட்டனின் தொழில்-முதலிய-ஏகாதிபத்தியம் இந்திய பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருந்தது. ஏகாதிபத்திய அமைப்பின் உள்ளார்ந்த வன்முறை இந்திய தேசத்தின் அடிப்படை பெண்ணியல்புக்கு சரி நிகர் எதிரான ஒரு கலாச்சாரத்துக்கு உரியதாக இருந்தது. இந்தியாவில் நிலைமை நாளுக்கு நாள் சீர்கெட்டுக் கொண்டிருந்தது. மானுட மக்கள்தொகையில் கணிசமானவர்கள் சமூகப் படிநிலையில் தீண்டத்தகாதவர்களாய் ஒதுக்கப்பட்டனர், பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன, வரதட்சிணைக் கொடுமையால் தீக்கிரையாதல், உடன்கட்டையேறுதல், பால்ய விவாகம் போன்ற குடும்ப வன்முறைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். மிகவும் கொடிய அநீதியில் இவையனைத்தும் வேர் கொண்டிருந்தன.

மூதைப் பெண்ணியவாதி யார்? 'பெண்ணியம்'என்ற சொல் அறியப்படாதிருக்கும்போதே நவீன பெண்ணியச் சிந்தனைகளை விவரிக்கும் தத்துவ மரபுக்குரியவர்களை, இருபதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இவர்களை, விவரிக்கும் பதம்  'மூதைப் பெண்ணியவாதி,'எனலாம். வீட்டிலும் தேச அளவிலும் தொடர்ந்து விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்த இந்திய பெண்களின் வலிமை அவர்களின் மென்மையில் விளங்குகிறது என்று நம்பினார் காந்தி. பிரிட்டிஷ் அதிகாரத்தின் மூர்க்க ஆண்மைக்கு எதிராய் பெண்கள் தம் அகிம்சைப் போராட்டத்தை நிறுவ வேண்டும் என்று இந்தியா திரும்பியதும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

காந்திக்கு பல நோக்கங்கள் இருந்தன. அவர் தேச விடுதலையை மட்டும் விரும்பவில்லை, சமூக மாற்றம் நிகழவும் விரும்பினார். தேசத்தில் சமத்துவம் மலர இடையறாது உழைத்தார். 'கோட்பாடும் காந்தியின் பெண்ணியத் தாக்கமும்'என்ற ஆய்வு முடிவுகள், காந்தி பெண் கல்வியை வலியுறுத்தினார் என்றும் அக்கல்விகள் இல்லக் கலைகள் கற்பிப்பதை மட்டும் நோக்கமாய் கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டுகின்றன. பொதுச் சேவைகளிலும் சமூக முன்னேற்றத்திலும் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினார் காந்தி. முறைப்படி கல்வி கற்ற பெண்களின் ஆற்றல் வீட்டு வேலைகளில் மட்டும் முடங்கி வீண் போகக் கூடாது என்று நினைத்தார் அவர்.

பெண் விடுதலைக்காக காந்தி மேற்கொண்ட போராட்டம் இந்தியாவெங்கும் பாராட்டப்பட்டது, புகழ் பெற்ற பெண்கள் பலர் அவருடன் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர். புகழ் பெற்ற கவிதாயினியும் அரசியல் ஆர்வலருமான  சரோஜினி தேவி, லண்டனில் காந்தியைச் சந்தித்து அவரது எழுத்தால் ஈர்க்கப்பட்ட பிரிட்டிஷ் பெண்ணுரிமை போராளி அன்னி பெசண்ட், மாதாங்கினீ ஹஸ்ரா, அலூ ஜே. தஸ்ரூர், உஷா ஹெச் மேத்தா ஆகியோர் இவர்களில் சிலர். படுதா அமைப்பை மீறி பெண்களை பொதுவெளிக்கு கொண்டு வந்ததால், முறைப்படி கல்வி கற்க அவர்களைத் தூண்டியதால், அன்னையின் அன்பிலும் அர்ப்பணிப்பிலும் உள்ள அசைக்க முடியாத வலிமையை முன்நிறுத்தியதால், காந்தி பெண்ணிய சீர்திருத்தவாதிகளில் சிறந்தவராய் விளங்குகிறார்.

எப்படியானாலும் இதை மறுக்க முடியாது. பெண்கள் தம் ஆற்றலின் வலிமையை உணர்வும், தம் விடுதலைக்குப் போராடவும் காந்தியின் தொடர்ந்த ஊக்குவிப்பும் தாக்கமும் காரணமாக இருந்தன. வீணா மஜூம்தார் (1927-2013) இந்தியன் கவுன்சில் பார் சோஷியல் சயன்ஸ் ரிஸர்ச் அமைப்பின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியர், 'இந்தியாவில் பெண் கேள்வி மேலோங்குதலும் பெண்ணாய்வுகளின் பங்கும்'என்ற ஆய்வுக் கட்டுரையில், பழக்க வழக்கங்கள் மற்றும் தனி நபர் அக்கறைகளைக் கடந்து இருபாலார் உறவுகளுக்கு அப்பால் புதிய சமூக, அற நடத்தையை வலியுறுத்தியவர் காந்தி ஒருவரே என்று எழுதுகிறார்.

நன்றி: Times Now

ஒளிப்பட உதவி - The Guardian

மகாத்மா: முன்னோடிகளின் முன்னோடி - டாக்டர் மோகன் காண்டா

$
0
0



காந்தி புனிதர், கடுமையான ஒழுக்கத்தை வலியுறுத்தும் தீவிரமான மனிதர் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் காந்திக்கு கூர்மையான, உடனே வெளிப்படும் நகைச்சுவை உணர்வும் இருந்தது.

தென்னாப்பிரிக்காவில் நீங்கள் ஏன் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தீர்கள், என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு, "அப்போது நான்காம் வகுப்பு இல்லை!,"என்று உடனே பதில் சொன்னார். வட்ட மேஜை மாநாட்டுக்கு அவர் செல்லவிருக்கையில், அரசரைச் சந்திக்கத் தக்க வகையில் உடை அணிந்திருப்பாரா, என்று ஒரு நிருபர் கேட்டார். "என் உடை பற்றி கவலைப்பட வேண்டாம். எங்கள் இருவருக்கும் சேர்த்து அரசர் ஆடை தரித்திருக்கிறார்,"என்றார் காந்தி.

காந்திக்கும் அவரது செய்தியின் நிலைத்த தாக்கத்துக்கும் வருவோம். அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் மோதி, இந்தியாவில் பிறந்திருந்தாலும் காந்தி இந்தியர்களுக்கு மட்டும் உரியவரல்ல என்றார்: பாபுவின் நோக்கு, சீர்திருத்தங்கள், போதனைகள் இன்றும் முக்கியமாக இருக்கின்றன என்பதை வலியுறுத்திய அவர், மக்களின் அக ஆற்றலைத் தட்டியெழுப்பிய காந்தி மக்கள் தம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று ஊக்குவித்தார் என்பதைக் குறிப்பிட்டார்.

உலகமயமாக்கம், சுதந்திரச் சந்தை, தனியார்மயமாக்கம், பொருளாதார தளர்வுமயமாக்கம், மற்றும், வன்முறை, தீவிரவாதம், அநீதி, ஏழ்மை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த காலகட்டத்தில் காந்தியின் தத்துவம் இந்த அளவுக்கு தேவைப்படுவது திகைக்கச் செய்கிறது என்கிறார் சாம் பிட்ரோடா. நம் சமூகத்துக்கு மிகவும் முக்கியமான அற, சமுதாய கண்ணாடியாய் காந்தியின் லட்சியங்களும் தலைமையும் செயல்படுகின்றன என்று மேலும் கூறுகிறார் அவர். காந்திய பொருளாதார முறையும் நவீன பொருளாதார அமைப்பும் நாளுக்கு நாள் நெருங்கி வருகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

"பெருந்திரள் மக்களின் உற்பத்தி முறை"மீது காந்தி நம்பிக்கை கொண்டிருந்தார், அவர் பெரும் இயந்திர உற்பத்தி முறையில் நாட்டம் கொள்ளவில்லை. நவீன தொழில்நுட்பம் அவரது தத்துவத்துக்கு நாளுக்கு நாள் வெளிப்பாட்டு சாத்தியம் அளிப்பது ஆச்சரியமாக, ஏன், ஒரு முரணுரையாகவும் இருக்கிறது என்கிறார் பிட்ரோடா. தொலைதொடர்பு துறையிலும் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் மாபெரும் முன்னேற்றங்கள் நடந்திருப்பதால், சிறுநகர்களிலும் தேசத்தின் தொலைதூர பகுதிகளிலும்கூட சிறிய, மத்திம அளவு தொழிற்சாலைகள் அமைப்பது இன்று சாத்தியமாகியிருக்கிறது.

புதிய தொழில்நுட்பம் மிகக் குறைந்த செலவில் பரவலான மின்தொடர்பு கட்டமைப்பு அமைத்திருக்கிறது. இதன் காரணமாய், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர்- P2P என்று அழைக்கப்படும் நபருக்கு நபர்- என்று உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் கணப்பொழுதில் தோடர்பு ஏற்பட்டு விடுகிறது. தொழில்துறை வளர்ச்சிக்கு இடமோ பாதையோ ஒரு கட்டுபாட்டாக இல்லை.

ஏழைகள் பணக்காரர்கள், முன்னேறிய சாதிகள் பிறர், தேசத்தின் வடக்கு தெற்கு, இந்துக்கள் முஸ்லிம்கள் என்று பலருக்குமிடையே உரையாடலை உருவாக்கினார் காந்தி. ஜனநாயக அதிகார பகிர்வில் மகாத்மா மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆட்சியமைப்பு வெளிப்படையானதாகவும் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கும் வகையில் தேசீய ஆட்சி முறை அமைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார்- அனைத்து மீதும் சட்டம் ஆட்சி செலுத்தும் அமைப்பு அது.

எனவே இன்று அரசியல் படிநிலையிலும் நிர்வாக அமைப்பிலும் அதிகாரமும் அதிகாரம் செலுத்தும் தகுதியும் மிகச் சிலர் கரங்களில் குவிந்திருப்பதைக் கண்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பார்.

"சந்தேகமேயில்லை, இன்று ஊழலும் வேண்டியவர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வதும் ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத இயல்பாகி விட்டது, இது தவறு,"என்று பல பத்தாண்டுகளுக்கு முன் கூறிய அவர், இன்று நிலவும் போக்கை  விவரிக்க வார்த்தைகளின்றி தவிப்பது நிச்சயம்!

ஒரு சில வகைகளில் காந்தி தன் காலத்தில் சிறைப்பட்டிருந்த மனிதர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களில் அவர் தன் காலத்தைவிட மிகவும் முன்னிலையில் இருந்தவர். அவர் மின்வசதி செய்யப்படாத ஆசிரமங்களில் வாழ்ந்தார். ஆற்றல் பாதுகாப்பில் அவர் மிகவும் சிறந்தவராய் விளங்கினார்.

இன்று உலகில் நிலவும் சூழலில் சர்வதேச உறவுகள் புதிய சட்டகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கிறது - வலிமையும் அதிகாரமுமே மதிக்கப்படுகிறது. வன்முறைக்கு வன்முறையே சிறந்த பதில் என்பதுதான் இதன் அடிப்படை எண்ணம். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்..

ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டு என்று காந்தி சொல்வது தேசீய, சர்வதேச விவகாரங்களுக்குப் பொருந்தாது, அதிலும் குறிப்பாக அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்போது அது பொருத்தமாக இருக்காது. அகிம்சையை எதிரிகள் வலுவின்மை என்று நினைத்துவிடக் கூடாது (தூரதிருஷ்டாவசமாய், ஹிட்லரை தாக்க வேண்டாம் என்று வின்ஸ்டன் சர்ச்சிலிடம் காந்தி கூறியது இது போன்றதுதான்).

ஒழுக்கமும் நடைமுறையில் எப்போதும் சாத்தியமில்லை. உதாரணத்துக்கு, பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் பற்றிய தகவல்கள் தன்னிடம் இருப்பதாக மொரார்ஜி தேசாய் ஜியா உல் ஹக்கிடம் கூறினார். எப்போதும் உண்மையை பேசுவது என்ற கொள்கையை தான் தீவிரமாய் கடைபிடிப்பதாய் அவருக்கு தெரிவிக்கவே இதைச் சொன்னார். ஆனால் அவர் ரகசியம் காப்பாற்றாததால் ரா அமைப்பின் பல உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டார்கள். சில சமயம், சர்வதேச உறவுகளில், அறுவை சிகிச்சை மருத்துவரின் கத்தியும் தேவைப்படுகிறது.

உண்மையைச் சொன்னால், இன்றைய நிலையில், காந்தியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம், நிராகரிக்கவும் செய்கிறோம். ஆனால் மானுட சமுதாயம் முன்னேற மிகச் சிறந்த அடித்தளத்தை அவரது தத்துவம் இடுகிறது என்பதில் பொது ஒப்புதல் உண்டு. 'அரை நிர்வாண பக்கிரி'என்று அவரை வின்ஸ்டன் சர்ச்சில் அழைத்திருக்கலாம். ஆனால் இப்போதும் அப்போதும் காந்தியை மிக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றிய சாதனையாளர்கள் உண்டு, அவர்களில் உலக தலைவர்களும் அடக்கம். "உண்மையில் என் நாயகன்,"என்று பராக் ஒபாமா அவரை அழைததார், காந்தியின் வாழ்க்கை தனக்கு வழி காட்டியிருப்பதை தலாய் லாமா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

"கிறித்து லட்சியங்கள் அளிக்கிறார், காந்தி உத்திகள் வகுக்கிறார்,"என்று சொல்கிற அளவுக்குச் சென்றார் மார்ட்டின் லூதர் கிங். "காந்தி பற்றிய எண்ணங்களா? அதைவிட நீங்கள் இமயம் பற்றிய எண்ணங்களைக் கேட்கலாம்,"என்று ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறுவது காந்தி உலகுக்கே பொதுவானவர் என்ற சித்திரம் அளிக்கிறது.

"இந்தியாவில் உள்ள பல லட்சம் எளியவர்களின் கதவடியில் நின்றார் அவர்.. பெருந்திரள் இந்திய மக்களை தன் ரத்தமும் சதையுமாய் வேறு யார் எந்த தயக்கமுமில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள்? உண்மைக்கு உண்மை விழிப்பளிக்கிறது,"என்று கூறியபோது, ஏழை மக்களிடம் காந்திக்கு உண்மையான புரிந்துணர்வும் உண்மையின்பால் உறுதியான பற்றும் இருந்ததை ரபீந்த்ரநாத் தாகூர் வலியுறுத்தினார்.

உலகின் பல இடங்களில் காந்திக்கு நினைவகங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. கலிபோர்னியாவில் லேக் ஷ்ரைன், லண்டனில் டாவிஸ்டாக் சதுக்கம், மற்றும் கான்பெரா, வியன்னா, ஜெனிவா போன்ற இடங்களில் இவை இருக்கின்றன.

பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை நம்மில் நிகழ்த்த வேண்டும் என்பதுவே காந்தி உலகுக்கு அளித்த செய்திகளில் மிகவும் தரிசன ஆற்றல் கொண்டது. இந்தச் செய்தி அவரது இதயத்தின் ஆழத்தில் எழுந்த ஒன்று, ஏனெனில் அவருமே தன்னால் செய்ய இயன்றதை மட்டுமே பிறருக்கு உபதேசிக்க வேண்டும் என்று நினைத்தவர்.

இந்திய வெளிநாட்டு உறவைத் தீர்மானித்த அற தெளிவும் வீரமும் காந்திய தத்துவத்தில் தோன்றியவை.

இந்தியாவின் கூட்டுசேரா கொள்கை மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று. சத்தியம், அகிம்சை, லட்சியவாதம், இவற்றுக்கு காந்தி அளித்த முக்கியத்துவமே அதன் அடித்தளம். வெளியுறவுத்துறை முடிவுகள் தக்கன அறிந்து  எடுக்கப்படுகின்றன, அவற்றின் பின்னணியில் கோட்பாடோ, குழு மானப்பான்மையோ, வல்லரசு குறித்த அச்சமோ இல்லை. இந்தக் கொள்கையின் காரணமாகவே இந்தியா சர்வதேச அளவில் அமைதி உருவாக மிக முக்கியமான பங்காற்றியிருக்கிறது.

இனவாதம், காலனியம், நிறவேற்றுமை கொள்கைகள், இவற்றுக்கு எதிராய் உலகின் பிற பகுதிகளில் நிகழ்ந்த போராட்டங்களுக்கு இந்தியா ஆதரவளிக்க காந்தியின் லட்சியங்களே காரணம்.

அத்தனை மகத்தான குணங்கள் இருந்தாலும் மகாத்மா ஒரு மனிதர்தான் என்பதை உணர்த்தவே அவரது ஆளுமையில் சில சிறிய குறைகளும் இருந்தன.

பொது வாழ்க்கையின் துவக்கத்தில் அவர் மிகவும் தயக்கத்துடன் இருந்தார் என்பதை காந்தியே ஒப்புக் கொண்டிருக்கிறார். சுருக்கமாகவும், தெளிவாகவும் தன் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற படிப்பினையை அவர் அதிலிருந்து கற்றுக் கொண்டார். அவரது சொற்களில், "என் நாவிலிருந்தோ பேனாவிலிருந்தோ என்னையறியாமல் ஒரு சொல் யோசனையின்றி வெளிவராது."அவரது கையெழுத்து மிகவும் மோசமாக இருந்தது, அதற்கு அவர் தனது கல்வியைக் குறை சொன்னார்.

ஒரு போராட்டம் அல்லது ஐயம் உள்ளத்தில் தோன்றும்போது நாம் காந்தியின் தாயத்தினை நினைத்தால் போதும். நீ பார்த்தவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில், ஆதரவற்று இருந்த ஒருவரின் முகத்தை கண் முன் கொண்டு வரச் சொன்னார் அவர், இப்போது நீ எடுக்கப்போகும் முடிவு அவரது எதிர்காலத்தை அவரே தீர்மானித்துக் கொள்ள உதவுமா, என்று கேட்டுக் கொள்ளச் சொன்னார் காந்தி.

இன்றுள்ள அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் காந்திய தத்துவத்தை ஒரு சிறு அளவு மதித்தால் கூட போதும், அமைப்பின் தோல்வியால் ஏற்பட்ட நிர்வாகச் சீர்கேட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் ஆதரவற்ற 137 மில்லியன் குடிமக்கள் நீண்ட தம் இருள் பயணத்தின் முடிவில் ஒரு ஒளி தோன்றுவதைக் காணக்கூடும்.

இப்போது காந்தி நினைவில் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. அவர் நினைவுக்கு நாம் செலுத்தும் மிகப் பெரிய அஞ்சலி இதுவாகவே இருக்கும்- "இவ்வுலகில் மக்கள் உண்ண உணவின்றி பசியால் வாடுகிறார்கள், கடவுள் அவர்கள் முன் வந்தால் உணவாய்த்தான் வர வேண்டியிருக்கும்,"என்று அவர் இறைஞ்சலாய்க் கூறியதற்கேற்ப நாமும் ஏழைகளின் வாழ்வில் வளம் சேர்க்கப் பணியாற்ற வேண்டும்.

நன்றி: Hans India 

ஒளிப்பட உதவி: Livemint

எழுத்தாளராக விரும்பினார் காந்தி - பார்வதி பேணு

$
0
0


காந்தியைப் பற்றி பேசிவிட்டு அவருக்கு பல்லாண்டு காலமாய் வந்த, அவர் எழுதிய, எண்ணற்ற கடிதங்களைப் பேசாமல் எப்படி? அந்தக் கடிதங்கள் இப்போது இணையத்தில் இருக்கின்றன. அவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள், எவ்வளவு கச்சிதமாகவும் துல்லியமாகவும் காந்தி எழுதுகிறார் என்பதைச் சுலபமாக கண்டு கொள்ளலாம். காந்தியிடம் அலங்கார வார்த்தைகள் கிடையாது, சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்கிறார்.

இவற்றில் பெரும்பாலான கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அது போக இந்தி, குஜராத்தி மொழிகளிலும் எழுதினார் மகாத்மா. அவர் மாணவப் பருவத்தில் லத்தீன் மொழிகூட கற்றிருக்கிறார். ஆங்கில மொழியில் அவர் அவ்வளவு சிறப்பாக எழுத என்ன காரணம் இருக்கும், என்ற கேள்வி எழுந்தது. அவரது உறவினர்கள், பேரன், கொள்ளுப் பேரன் இருவரையும் கேட்டோம்.

மகாத்மா காந்தியின் இரண்டாம் மகன், மணிலால் காந்தி. அவரது பேரன், துஷார் காந்தி, காந்தி ஆய்வு மையத்தின் இயக்குனர். 2005 ஆம் ஆண்டு மீண்டும் தண்டி யாத்திரை சென்றது அவருக்கு புகழ் சேர்த்திருக்கிறது. "பாபுவுக்கு முதலில் அவ்வளவு ஆங்கில மொழித் திறமை இருக்கவில்லை. அவர் அந்த மொழி கற்க போராடினார். உண்மையில், ஆங்கிலம் கற்க முடியவில்லை என்ற காரணத்தால்தான் அவர் சமல்தாஸ் கல்லூரியிலிருந்து வெளியேறினார்."

பின்னர், குறிப்பாக, பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தில், ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பதை அவர் உணர்ந்ததும் அதில் அவர் தீவிரமாய் இறங்கி விட்டார். அவர் கடுமையாய் உழைத்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து சென்று ஆங்கிலமும் சட்டமும் படிக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்த நேரம் அது. அவர் தன் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சிய காலம் போய், மெல்ல மெல்ல அதில் தேர்ச்சி பெற்று, சரளமாக பேசினார்,"என்கிறார் துஷார். "அபூர்வமான சொற்களைப் பயன்படுத்தி அவர் தன் திறமையைக் காட்டவில்லை, எப்போதும் துல்லியமான சொற்களைக் கையாண்டார். யாருக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் அவர் தன் நேரத்தையும் சொற்களையும் வீணாக்கவில்லை."இது போக, "இதே காலத்தில்தான் பாபு லத்தீன் மொழியும் கற்றார். சட்டம் சார்ந்த பதங்களையும் ஆங்கில இலக்கணத்தையும் புரிந்து கொள்ள இது அவருக்கு உதவியாக இருந்தது,"என்றும் சொல்கிறார் அவர்.

அடுத்து நாம் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் காந்தியைச் சந்தித்தோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர், மகாத்மாவின் இளைய மகன் தேவதாஸ் காந்தியின் மகன். காந்தியின் சரிதை எழுதிய அவர், காந்தி பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். "பாபு செய்தித்தாள்களை ஆர்வமுடன் வாசித்தார். இது அவரது ஆங்கில மொழித் திறனை வளர்த்தது. புத்தகங்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. இதனால் அவரால் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள முடிந்தது. சட்ட நூல்களில் கூட அவருக்கு எழுத்துப் பயிற்சி கிடைத்தது. அவர் முழு நேர எழுத்தாளராகும் ஆசை கொண்டிருந்தார். ஆனால் அனுபவங்களும் சில எதிர்நிகழ்வுகளும் அவரை இந்திய சுதந்திர போராட்ட வீரராய் மாற்றி விட்டன."

நன்றி: Edex Live

ஒளிப்பட உதவி : Amar Ujala

மகாத்மா காந்தியும் இந்தியச் சிறை சீர்திருத்தமும் - சுஷாந்த் குல்கர்னி

$
0
0


ஒரு பெண்ணின் நிம்மதியைக் குலைத்து அவரைத் தாக்கிய குண்டர் ஒருவரின் முகத்தையும் வயிற்றையும் ஜனவரி 22, 1991 அன்று மும்பையில் உள்ள குர்லாவில் கத்தியால் குத்திக் கிழித்தார் லக்ஷ்மன் கோலே. அதன் பின் அவர் கைது செய்து மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் பல மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டார். அப்போது அவர் பல கிரிமினல் குழுக்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார், பெயிலில் வெளியே வந்தபின்னும் அந்த நட்பு தொடர்ந்தது. 1992 முதல் 2005 வரை, அவர் மீது 19 குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கொலை முயற்சி, பணம் பறித்தல், கிரிமினல் மிரட்டல், வன்முறை, போன்ற குற்றங்கள் இதில் அடக்கம். அந்த 13 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் அவர் சிறைப்பட்டிருந்தார். இன்று மும்பையில் உள்ள கார்ஜத்தில் சமூக சேவை செய்து கொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளுக்குச் சென்று காந்தியச் சிந்தனை குறித்து சொற்பொழிவுகள் ஆற்றுகிறார். "நம் பிழைகளுக்கு நம்மைப் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்கிறார் பாபு. உறுதியான மனம் இருக்க வேண்டும்,"என்கிறார் அவர்.

ஹரிஜன், நவம்பர் 1947 இதழில், "குற்றவாளிகள் அனைவரும் நோயாளிகள் போல் நடத்தப்பட வேண்டும், சிறைகள் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தும் மருத்துவமனைகளாய்ச் செயல்பட வேண்டும். யாருமே கேளிக்கைக்காக குற்றம் செய்வதில்லை, அது நோய்மைப்பட்ட மனதைக் குறிக்கிறது,"என்று எழுதினார் காந்தி.

கோலேவின் வாழ்க்கை 2006ல் ஆண்டு மாறியது. நாசிக் மத்திய சிறைச்சாலையில் அவர் இறுதி தீர்ப்புக்கு காத்திருக்கையில், சிறை நூலகத்தில் இருந்த ஒரு சிறுபிரசுரத்தின் பின்னட்டையில் ஒட்டப்பட்டிருந்த பம்பாய் சர்வோதயா மண்டல் ஸ்டிக்கர் அவர் கண்ணில் பட்டது. 'சத்திய சோதனை' (1927) பிரதியை அனுப்பக் கேட்டு அவர்களுக்கு கடிதம் எழுதினார். "காந்திஜியின் சிந்தனைகளைப் பின்பற்றத் துவங்கியதால் பலர் நான்  'பலமில்லாதவர்களின் கொள்கையை'நம்புகிறேன் என்று என்னை கேலி செய்திருக்கிறார்கள். ஆனால் பலசாலிகள் மட்டுமே இந்தப் பாதையில் நடக்க முடியும் என்பதை அறிவேன்,"என்கிறார் அவர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கோலே ஒப்புக் கொண்டார். தான் இனி அகிம்சைப் பாதையை பின்பற்றப் போவதாகவும் அவர் நீதிபதிக்கு கடிதம் எழுதினார். 2007 ஆம் ஆண்டு அவர் விடுதலையடைந்ததும் பம்பாய் சர்வோதயா மண்டலின் தார்தியோ அலுவலகம் சென்றார். அங்கு அவர் அடுத்த ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.

மகாராஷ்டிரம் உட்பட பல மாநிலங்களின் சிறைக் கொள்கைகளில் தேசாப்பிதா தாக்கம் செலுத்தியிருக்கிறார். மகாராஷ்டிரா சிறைத் தொழிலமைப்பு உட்பட சிறை அதிகாரிகளின் பல முயற்சிகளில் இது வெளிப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட அந்த அமைப்பு மாநிலச் சிறைகளில் தயாரிக்கப்பட்ட பலவகைப் பொருட்களை விற்பனை செய்கிறது. 2001 ஆம் ஆண்டு புனேவை மையமாய்க் கொண்ட சஹ்யோக் டிரஸ்ட் மற்றொரு காந்திய முன்னெடுப்பு செய்தது. மனித உரிமைகள், சட்ட உதவி மற்றும் சம நீதிக்கு போராடும் அந்த டிரஸ்ட் மகாராஷ்டிரா சிறைகளில் காந்தி அமைதி தேர்வுகள் நடத்தத் துவங்கியது. 1920 கள் மற்றும் 40 களின் துவக்கத்தில் காந்தி பல முறை அடைக்கப்பட்டிருந்த புனே ஏரவாடா மத்திய சிறையில் இந்த முயற்சி  துவங்கியது. "தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒரு கைதி 2010 ஆம் ஆண்டு இத்தேர்வுகளில் பங்கேற்றிருக்கிறார். காந்தியைப் பற்றி வாசித்தவுடன், தான் நல்லவன்தான், ஆனால் தவறான பாதையில் சென்று விட்டவன் என்பதை அவர் உணர்ந்தார்,"என்று கூறுகிறார் காந்தியரான துளஸிதாஸ் சோமையா.

பாதுகாப்பு காரணங்களால்  ஏரவாடா மத்திய சிறையில் 2012 ஆம் ஆண்டு இது தடை செய்யப்பட்டாலும், மும்பையில் தானே, தலோஜா சிறைகள், நாக்பூர் மத்திய சிறை, யாவத்மால், மற்றும் அகோலா சிறைகளில் ஆண்டுத் தேர்வுகள் நடக்கின்றன. கூலிப்படை தலைவராய் இருந்து அரசியல்வாதியாய் மாறிய அருண் காவ்லி சென்ற ஆண்டு தேர்வில் 80 க்கு 74 மதிப்பெண் பெற்று நாக்பூர் சிறையில் முதல் மாணவராய் தேர்ச்சியடைந்தார்.

ஏரவாடா மற்றும் நாக்பூர் மத்தியச் சிறைச்சாலைகளில் கணக்காளிப்பாளராய் பணியாற்றியுள்ள யோகேஷ் தேசாய், தற்போது, சிறைச்சாலை துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரலாய் உள்ளவர், "அகிம்சையைப் புரிந்து கொள்வதும் அதைப் பின்பற்றுவதும் வலிமையின் அறிகுறி என்பதை உணர்வது பல கைதிகளின் வாழ்க்கையை மாற்றக்கூடியது,"என்கிறார். "சிறைச்சாலை மகிழ்ச்சியான இடமல்ல. ஆனால் விடுதலை பெற்றபின் நல்ல வகையில் வாழ்வதற்கான அடித்தளத்தை நாம் அங்கு அமைத்துக் கொள்ளலாம். அதற்கு பாபுவின் முன்னுதாரணம் வழிகாட்டும் ஒளியாக அமையக்கூடும்,"என்கிறார் கோலே,

நன்றி : The Indian Express 

ஒளிப்பட உதவி : The Conversation.

ராஜ்மோகன் காந்தியுடன் ஓர் உரையாடல்- மகாத்மா காந்தியும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும் இன்றும் தேவைப்படுகிறார்களா? - ராஜேஷ் கே. ஓஜா

$
0
0


காந்தியின் பேரன் பேராசிரியர் ராஜ்மோகன் காந்தியை இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன்.

அவரது தாத்தா இந்தியா எதை அடைய விரும்பினார் என்று டாக்டர் ராஜ்மோகன் காந்தி தி வீக் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பினேன்.

உங்கள் தாத்தா இந்தியா எதை அடைய விரும்பினார், இன்று வளரும் ஆசியாவுக்கு என்ன விரும்பினார்?

71 ஆண்டுகளுக்கு முன் தில்லியின் புராதன கோட்டையில் கூடியிருந்த ஆசிய தலைவர்களுக்கு அவர் அளித்த சொற்களை முதலில் நினைவுபடுத்துகிறேன்.

ஏப்ரல் 1947 ல் காந்தி இதைச் சொன்னபோது பதினொரு வயது சிறுவனான நான் அங்கு இருந்தேன்.  அந்நேரம் எனக்கு அவர் பேசியது புரிந்தாலும், சீக்கிரம் அதை மறந்து விட்டேன். அங்கே, புராணா கிலா மேடையில் காந்தி, ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு, மிகவும் உயரமாக இருந்த பாட்ஷா கான், அனைவரும் இருந்த காட்சி, என் மூளையில் எங்கோ பதிந்து விட்டது.

"ஆசியா மேற்குலகை அன்பாலும் சத்தியத்தாலும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் செல்ல விரும்புகிறேன். இந்த ஜனநாயக யுகத்தில், கடைக்கோடி ஏழையும் விழிப்புணர்வு அடைந்து விட்ட வேளையில், இந்தச்  செய்தியை உங்களால் அழுத்தம் திருத்தமாய் தெரிவிக்க முடியும்... நீங்கள் மேற்கை  வெல்லப்போவது சுரண்டலுக்கு வஞ்சம் தீர்த்தல்ல, உண்மையான புரிதலால்... இந்த வெற்றியை மேற்குலகும் வரவேற்கும்."

இதன் தூய பொருளில், இதை "கிறித்தவ"பார்வை என்று சொல்ல முடியுமில்லையா? ("கிறித்தவம்"என்பதற்கு வெப்ஸ்டர் "பிறரை தன்மையுடன் அல்லது பரந்த மனதுடன் நடத்துவது"என்று பொருள் தருகிறது)

முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய காலனியாதிக்கம் குறித்து கோபத்திலிருந்த ஆசியர்களிடம், "வெறுக்க வேண்டாம்,"என்று சொல்கிறார் காந்தி. வஞ்சம் தீர்த்தல் பிழைச் செயல். ஆனால் வேறொரு வகை 'வெற்றி'நியாயமானது. ஆசியர்கள் மேற்குலகை அன்பாலும் சத்தியத்தாலும் 'வெற்றி'கொள்வர்.

உங்கள் தாத்தா வெளிப்படையான மனிதர். இந்திய திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் வன்முறை, இந்திய கிராமங்களில் நிகழும் "கௌரவக் கொலைகள்,"அரசு காஷ்மீரிகளை சிறையில் அடைத்திருப்பதாய்ச் சொல்லப்படுவது, இதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?

இந்திய சுதந்திரத்தை அகிம்சையின் வெற்றி என்று பலரும் வரவேற்றார்கள். என்றாலும், இந்தியாவில் வன்முறைக்கு இடமிருப்பதை அவர் அறிந்திருந்தார். 16 ஜூன் 1947 அன்று அவர் அளித்த பிரார்த்தனை உரையில், தனது அகிம்சை சத்தியாகிரத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளக் காரணம், வன்முறை அவலமென்று நிராகரித்ததால் அல்ல, பேரரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையை விட சத்தியாக்கிரகம் நல்ல பலன் தருவதை உணர்ந்ததால், என்று கூறினார். காந்தி இப்படிச் சொன்னார்:

"ஸ்வராஜ் போராட்ட காலகட்டத்தில் யாரும் எங்களுக்கு அணுகுண்டு செய்யக் கற்றுக் கொடுத்திருக்கவில்லை. அதைச் செய்வது எப்படி என்று தெரிந்திருந்தால், ஆங்கிலேயர்களை கூண்டோடு அழிக்க நினைத்திருப்போம்."

இதைக் கேட்க கஷ்டமாக இருக்கிறது. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொண்டாடுவதை அவர் எதிர்பார்த்திருப்பாரா?

கோபத்தில் இந்தியர்கள் (தனக்கு முரணான முடிவுகள் எடுத்தாலும்கூட 'நாம்'என்று காந்தி தன்னோடு அடையாளப்படுத்திக் கொண்டார்) எல்லையற்ற வன்முறையைக்கூட தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று எச்சரித்தார் காந்தி. தன்னைப் போன்ற சிலர் அதற்கு எதிராய் உயிரைப் பலி கொடுத்திருந்தாலும் அது நடந்திருக்கக் கூடும் என்று நினைத்தார் அவர்.

இது போல் அடிப்படையிலேயே எதிரெதிர் பார்வைகள் இருக்கும்போது எப்படி பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்க முடியும்? இது போன்ற நிலை யுனைட்டட் ஸ்டேட்ஸ்சிலும் உள்ளது, ரிபப்ளிகன் மற்றும் டெமோகிரட் கட்சிகளுக்கு இடையே உள்ள அவநம்பிக்கை முடிவெடுக்கும் திறன்களை முடக்குவதாய் உள்ளது.

ஒரு தனி மனிதர் அல்லது சமூகத்தின் நம்பிக்கையைப் பெற அரசு முயற்சி செய்வதை சமூகங்களிடையே நிலவும் நம்பிக்கையுடன் (காந்தி இதற்காகவே பாடுபட்டார்) ஒப்பிட்டு கவிஞரும் கல்விப்புலத்தாருமான மனாஷ் ஃபிராக் பட்டாசார்ஜி, "காந்திய பொருளில் நம்பிக்கை என்பது மக்களுக்கும் சமூகங்களுக்குமிடையே நிலவும் உறுதியான, நேசம் நிறைந்த மனநிலை,"என்று சொல்கிறார். 

டொனால்ட் ட்ரம்ப் என்ற முதிய, வெள்ளை அதிபரின் இனவாத கொள்கைகள் என்று சொல்லி, அதற்கு எதிராக நான்கு இளம், வேற்றுநிற காங்கிரஸ்பெண்கள் போராடும் நிலை அமெரிக்காவில் நிலவுகிறது. இதை காந்தி எப்படி எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறீர்கள்?

காந்தியின் ஸ்வராஜில் மிக எளிய இந்தியனுக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. அவரது பார்வையில், மிரட்டிப் பணிய வைப்பவர்கள் ஸ்வராஜை அழிப்பவர்கள்.

இவ்வுலகின் சித்த தடுமாற்ற நிலையிலிருந்து ஆறுதல் பெற நான் கடவுளிடம் அடைக்கலம் புகும் காலங்கள் உண்டு. தனிமையில் சிந்திக்க நான் என் வீட்டில் உள்ள கோவிலுக்குச் செல்கிறேன், என் சமூகத்தினருடன் இருக்க, உள்ளூர் கோவிலுக்குச் செல்கிறேன். இது என் மனதை ஆழமான அமைதியால் நிறைக்கிறது. ஆனால் அது ஏதோ ஒரு வகை தப்பித்தல்தானோ  என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

பொதுவெளியில் பிரச்சாரம் செய்த காந்தியை அகத்தில் உள்ள மோகன்தாஸிடம் இருந்து பிரிக்க முடியாது என்று தோன்றுகிறது. பல லட்சம் மக்களின் தலைவர் காந்தியையும் ஏதும் செய்ய இயலாதவராய் பலமும் அறிவும் நாடி இறைவனிடம் பிரார்த்தனை செய்த காந்தி என்ற தனிப்பட்ட மனிதரையும் பிரித்துப் பார்க்க முடியாது.

ஹ்ம்ம். "பல லட்சம் மக்களின் தலைவர்."காந்தி தன்னை அது போல் கருதுவாரா அல்லது, "தனியாய் நட,"என்று பொருள்படும் "ஏக்லா சலோ ரே"என்ற ரபீந்திரநாத் தாகூரின் பாடல் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்று நினைப்பாரா, எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் காந்தியிடம் அவரது ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவு கிடைக்குமா என்று கேட்டான். காந்தி இப்படி பதில் சொன்னார்:

"ஏராளமானவர்கள் என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் அதிகம் கவலைப்படுவதில்லை. காலப்போக்கில் அது நடக்கும். ஆனால் நான் என் கொள்கைகளை தீவிரமாய் கடைபிடிப்பதை விரும்பாத என் ஏராளமான ஆதரவாளர்கள் என்னைத் தூக்கி வீசும் காலம் வரும் என்பதையும் நான் எதிர்பார்த்தே இருக்கிறேன்- நான் நிச்சயம் தெருவில் அலைந்து வீடு வீடாய்ப் போய் ஒரு துண்டு ரொட்டிக்கு பிச்சை எடுக்க வேண்டி வரலாம்."

'தி வீக்'தளத்தில் முதலில் பதிப்பிக்கப்பட்டு, மீரா கைமல் செய்த திருத்தங்களுடன் ஆசிரியர் அனுமதி பெற்று இங்கு பதிப்பிக்கப்பட்டதன் தமிழாக்கம்- https://indiacurrents.com/do-mahatma-gandhi-and-martin-luther-king-jr-still-matter/

Image Credit: https://misticismonaturalmn.blogspot.com/2020/01/o-estado-de-superconsciencia-turiya.html

இயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா

$
0
0


நாம் ஒரு விவசாயியின் வீட்டுக்குப் போகிறோம் என்று வைத்துக் கொள்கிறோம். அறைக்குள் அவரைப் பூட்டி வைத்து விட்டு, அவரது விவசாய நிலத்தை அபகரித்துக் கொள்கிறோம். நாம் சக்தி வாய்ந்தவர்கள். அவர் எளியவர். நவீன உலகின் சக்திவாய்ந்த அரசுகள் போல நம்மையும் சுதந்திரமானவர்களாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்துவதும் சுதந்திரமும் ஒன்றாகுமா? இரு தரப்புமே, உண்மையில் சுதந்திரமாக இருக்கின்றனவா? விவசாயி பூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்தால் நம்மை என்ன செய்வான் என்ற கவலை நமக்கு இருக்காதா?

விவசாயி தன் உடல் மீதுள்ள சுதந்திரத்தை இழந்து விட்டான். நாம் நம் உள்ளத்தின் சுதந்திரத்தை இழந்து விட்டோம். ஆதிக்கம் மைய உண்மை என்பதால் நாம் எல்லாரும் சுதந்திரத்தை இழந்து விட்டோம். விடுதலை வேறு சுதந்திரம் வேறு. சுதந்திரம் என்பது இரு தரப்புக்கும் இணைந்தே உரியது. உன் அதிகாரத்தை வென்று என் அதிகாரம் ஓங்கும். ஆனால் என் சுதந்திரம் நிச்சயம் அப்படியல்ல. உன் சுதந்திரத்துடன் சேர்ந்துதான் என் சுதந்திரம் வளர்கிறது.

ரபீந்திரநாத் தாகூர் இந்தச் சிந்தனையை மிக எளிமையாய் கைப்பற்றி விட்டார். 'சாதனா'என்ற தலைப்பில் அவர் சில உரைகள் அளித்திருக்கிறார். அது அவ்வளவு அதிகம் வாசிக்கப்படவில்லை. "தன் குழந்தைகளுக்கான சேவையில் அன்னை தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். அது போலவே உண்மையான சுதந்திரம் வினையாற்றுவதை தவிர்ப்பதல்ல. சுதந்திரம் நாம் வினையாற்றும்போது வெளிப்படுவது. அதை அன்பின் பணி கொண்டு மட்டுமே அடைய முடியும்."

ஜனநாயக அமைப்பின் பொது வெளியில் அன்புக்கு என்ன இடமிருக்க முடியும் என்றுதான் நாம் கேட்போம். வேறு பல காரணங்கள் போக இதனால்தான், ஸ்வராஜ் என்பதை "ஜனநாயகம்,"என்று மொழிபெயர்ப்பது ஆபத்தாகிறது. "அடிமைத்தனத்தின் சின்னங்கள்,"என்று அழைத்து காந்தி பாராளுமன்றங்களை காலாவதியாக்கியதை இந்த விஷயத்தில் நினைவு கூர்வது நல்லது.

இது நம்மை ஸ்வராஜ்யத்தின் ஆன்மீகச் சாரம் என்ன என்ற கேள்விக்கு கொண்டு வருகிறது. நேர்ப்பொருள் கொண்டால், ஸ்வராஜ்யம் என்பது தனி மனிதர்களுக்கு உரியது என்று புரிந்து கொள்ளலாம்- தன்னைத் தான் ஆளும் திறன். ஹிந்த் ஸ்வராஜ் நூலில், "தன்னாட்சி,"என்று ஸ்வராஜ்யத்தை காந்தி சித்தரிக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட தன்னாட்சியை இந்திய விடுதலைப் போராட்டம் போன்ற காலனிய எதிர்ப்பு இயக்கங்களின் உறுப்பாய் இருந்த தேசீய விடுதலைப் போராட்டம் என்ற அளவில் குறைத்து மூர்க்கத்தனமாக மதிப்பிடக்கூடாது என்பதில் காந்தியும் தாகூரும் தெளிவாய் இருக்கின்றனர்.

ஏகாதிபத்தியச் சக்தியைத் தோற்கடித்தால் போதாது. அரசியல் களத்திலும் உளநிலைத் தன்மையிலும் துணை நலனே தன்னாட்சி, அது சமூக நலனுக்கான தன்னலமற்ற தொண்டு என்ற ஆன்மீக சாதனையில் விளைகிறது. சர்வோதயம் என்று சொன்னபோது, "மிக அதிக எண்ணிக்கை கொண்ட மக்களுக்கு மிக அதிக நலம் செய்வது,"என்று சொல்லவில்லை காந்தி. மாறாய், ஒவ்வொருவரும், எல்லாரும், விழிப்புணர்வும் நல்வாழ்வும் பெறுவதைச் சொன்னார்.

விடுதலை என்பது அரசியல் சார்ந்தது. ஆனால், சுதந்திரம் என்பது ஒரே நேரத்தில் மானுடத்தின் ஆன்மீக சாத்தியமாகவும் சூழியல் சாத்தியமாகவும் இருப்பதைப் புரிந்து கொண்டதில் காந்தியும் ரபீந்திரநாத்தும் தனித்தன்மை கொண்டவர்கள்.

சுதந்திரத்தைப் பேசும்போது சூழியலுக்கு நவீன சிந்தனை இடம் தருவதில்லை. ஒரு வேளை, மானுடத்தின் கொந்தளிக்கும் அரசியல் நாடகங்களில் பங்கேற்க முடியாத வெறும் பார்வையாளராய் அது ஓரத்தில் நிற்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் இவ்விருவரின் சிந்தனைகள் வேறு உலகத்தைச் சார்ந்தவை.

மானுட சுதந்திரத்தின் சாத்தியத்தை வென்றடைய இயற்கை உலகின் அண்மை அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் ரபீந்திரநாத். இந்த உண்மையை நாம் புறக்கணிக்கும்போது, உலகளாவிய நவீனத்துவத்தின் அடித்தளத்தில் இறுக்கிப் பிணைக்கப்பட்ட அமைப்பார்ந்த சூழியல் அன்னியவுணர்வு மானுடத்தின் சுதந்திரம் அனைத்தும் பறிபோகக் கூடிய நிலையை தருவித்துவிடும் என்பதை எளிதில் கணிக்க முடியும்.

இந்தியாவை பிரிட்டிஷ் ஆள்கிறார்கள் என்பதும் கூட காந்தியின் முதன்மை எதிர்ப்பாய் இருக்கவில்லை. காலனியம் இந்தியாவுக்குள் புகுத்திய நவீனத்துவம் வடமற்ற பெருந்தேர் என மக்களைப் பலி கொண்டு நில்லாமல் விரைவதை அவர் கடுமையாய் எதிர்த்தார்.

"இந்தியா துகளாகிக் கொண்டிருக்கிறது,"என்று ஹிந்த் ஸ்வராஜ் நூலில் எழுதினார் காந்தி, "இங்கிலீஷ் குதிகாலில் அல்ல, நவீன நாகரீகத்தின்கீழ். "அந்த ராட்சதனின் பயங்கர எடையின் கீழ் அது தீனமாய் முனகிக் கொண்டிருக்கிறது. இப்போதும் அதிலிருந்து தப்ப அவகாசம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் அது மேலும் மேலும் கடினமாகிக் கொண்டிருக்கிறது.""இங்கிலீஷ்காரன் இல்லாத இங்கிலீஷ் ஆட்சி,"எதிர்காலத்தில் சாத்தியம் என்று எச்சரித்தார் காந்தி. "அமெரிக்க ராக்ஃபெல்லரை விட இந்திய ராக்ஃபெல்லர் நல்லவராக இருப்பார் என்று நினைப்பது முட்டாள்தனம்."

"ஏழை இந்தியா சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் அறமற்ற முறையில் செல்வம் சேர்த்த எப்படிப்பட்ட இந்தியாவும் தன் சுதந்திரத்தை மீட்க முடியாது... பணம் மனிதனைக் கையாலாகாமல் செய்து விடுகிறது."இது போன்ற பொதுபுத்திக்குப் புரியாத அறிவு இன்றைய இந்தியாவை நெறிப்படுத்தும் சக்திகளுக்கு முற்றிலும் எதிரானது. "அமெரிக்கர்கள் இல்லாத அமெரிக்க ஆட்சி,"கிட்டத்தட்ட உலகளாவிய நெறியாக இருக்கிறது என்றுதான் நாம் சொல்ல முடியும்.

ஜனநாயக வேடம் தரித்த பெருநிறுவனநாயகம் (கண்காணிப்பு முதலியத்தின் பெருநிறுவன எதேச்சாதிகாரம்) ஆட்சி செய்யும் நிம்மதியற்ற உலகு இது. ஏலம் போகும் அரசு பதவிகளுக்காக எச்சிலொழுக முரடர்களும் கைத்தடிகளும் போட்டியிடுவது போக இவ்வுலகில் ஜனநாயகம் சிறிதளவே உண்டு. காந்தி, ரபிந்திரநாத், இருவரின் வாழ்வும் வாக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவு இப்போது பொருத்தமாக இருக்க இவை காரணங்கள்.

 இவ்விருவரின் தரிசனங்களையும் ஒருங்கிணைத்து பிரக்ரிதிக் ஸ்வராஜ் (இயற்கை தன்னாட்சி) என்ற சித்திரத்தின் துவக்கக் கோடுகளை நாம் வரையத் துவங்கலாம். இந்தியாவுக்கு மட்டுமல்ல, மானுடம் முழுமைக்கும் அது உயிர் காக்கும் சூழியல் நெறியாகவும் இருக்கக் கூடும்.

நன்றி: https://www.downtoearth.org.in/blog/agriculture/gandhi-at-150-he-believed-in-natural-self-rule-67039

ஒளிப்பட உதவி- https://amleshprasad.blogspot.com/2019/12/blog-post_14.html
Viewing all 219 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>